கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் பெரு மழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ள நீரைக் கர்நாடக அணைகளில் தேக்கி வைக்க முடியவில்லை. தங்கள் அணைகள் உடைந்து சேதமாகக் கூடாது என்பதற்காக வெள்ள நீரைத் திறந்து வெளியேற்றினார்கள்.
இதனால் மேட்டூர் அணை நிரம்பியது. 120 அடிக்கு மேல் மேட்டூரில் தேக்க முடியாத நிலையில் தமிழகமும் வெள்ள நீரை வெளியேற்றியது.
இந்தச் செய்தியறிந்து,
தீயை மிதித்தவர்கள் போல் துடித்துப் போனார்கள் கன்னட நாட்டு கட்சித்
தலைவர்களும், உழவர் தலைவர்களும். “மேட்டூர் அணையில் 120 அடியும் நிரம்பி விட்டதாமே! என்ன கொடுமை இது? இந்த அநீதிக்குப் பரிகாரம் கிடையாதா?” என்று கொதித்தார்கள்; கொந்தளித்தார்கள்.
“இந்தப் பாவத்திற்குப் பரிகாரம் கண்டார்கள்” அதுதான் காவிரியின் குறுக்கே புதிதாக மூன்று அணைகள் கட்டும் திட்டம்!
கர்நாடக சட்டத்துறை அமைச்சர் செயச்சந்திரா
21.08.2013 அன்று பெங்களூரில் இவ்வாறு அறிவித்தார்:
“கர்நாடகத்தின் மேக்கேதாட்டு வனப்பகுதியில் காவிரியின் குறுக்கே 600 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 50 ஆ.மி.க (டி.எம்.சி)
கொள்ளவு கொண்ட மூன்று நீர்த் தேக்கங்கள் கட்டப்படும். காவிரியின் உபரித் தண்ணீரைத் தேக்கி மின்சாரம் எடுக்கவும் குடிநீருக்கும் பயன்படுத்திக் கொள்ளவும் இவ்வணைகள் கட்டப்படும்.”
இந்த
3 அணைகளும் எங்கு கட்டப்படவுள்ளன?
தமிழக - கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு மேலே 35 கி.மீ.
தொலைவில்! இப்பொழுது கிருஷ்ணராஜ சாகரிலிருந்தும் கபினி அணையிலிருந்தும் அர்காவதியிலிருந்தும் வெளியேறும் உபரி நீர் தங்குதடையின்றி நேரே மேட்டூர் அணைக்கு வந்துசேரும். இதுபோல் உபரி நீர் ஒரு சொட்டுக்கூட மேட்டூர் அணைக்குப் போகாமல் தடுக்கத்தான் இந்தப் புதிய 3 அணைகள் கட்டும் திட்டம்!
50 ஆ.மி.க.(டி.எம்.சி)
கொள்ளளவு, கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையை விடவும் அதிகம். கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவு 44 ஆ.மி.க. மின்சாரம் எடுக்கத்தானே அணை கட்டுகிறார்கள். அதற்காகத் திறந்து விடப்படும் தண்ணீர், தமிழ்நாட்டிற்குத் தானேவரும் என்று சிலர் கருதக்கூடும். அது வராது. அதைத் தடுப்பதற்குத்தான் மூன்று அணைகள்!
மேலும் குடிநீருக்காகவும் இந்த அணைகள் கட்டப்படுவதாகச் சொல்கிறார் கர்நாடக அமைச்சர். அதன் பொருள் என்ன? தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்வோம் என்பதுதான்!
இந்த மூன்று அணைகளும் கட்டப்பட்டு விட்டால், காவிரி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை பொய்யாய், பழங்கதையாய் கனவாய்ப் போய்விடும்!
ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூடத் தமிழ்நாட்டிற்குத் தரக்கூடாது என்று கன்னடர்கள் காணும் கனவு மெய்யாய், புது நடப்பாய் மேலேழுந்த அநீதியாய் அரங்கேறிவிடும்!
600 கோடி ரூபாய்க்கான இத்திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதியைப் பெற்றிட முடியும் என்ற நம்பிக்கையோடுதான் இத்திட்டத்தைக் கர்நாடகம் தீட்டியுள்ளது. தமிழர்களுக்கெதிரான எத்தீமையையும் இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக்கைதான் அது!
இத்திட்டங்களுக்குத் தடை கோரி தமிழகஅரசு உச்சநீதிமன்றதில் வழக்குப் போட்டுள்ளது. உச்சநீதிமன்றமோ எல்லாவற்றையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment