தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


மாபெரும் நீராண்மை மறு சீரமைப்பிற்காக காவிரிப் படுகையில் கள ஆய்வு காவிரி உரிமை மீட்புக் குழு ஏற்பாடு. பெ. மணியரசன்.

மாபெரும் நீராண்மை மறு சீரமைப்பிற்காக காவிரிப் படுகையில் கள ஆய்வு காவிரி உரிமை மீட்புக் குழு ஏற்பாடு. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன்.
 
நம்முடைய காவிரிப் படுகை நீர் மேலாண்மை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இவ்வாண்டு வந்த காவிரி வெள்ள நீர் வெளிப்படுத்திவிட்டது.
 
“ஆறுகளில் வெள்ளம்” வாய்க்கால்களில் – வயல்களில் வறட்சி” என்ற அவலத்தைப் பார்த்தோம். பாசனத்திற்கு தண்ணீர் கேட்டு காவிரி தலைமடையிலிருந்து கடைமடை வரை உழவர்கள் போராடினார்கள். இன்றும் போராடுகிறார்கள்.
 
மாயனூரிலிருந்து வங்கக்கடல் வரை உள்ள காவிரிப் படுகை நீராண்மையில் மாபெரும் மறுசீரமைப்புத் திட்டங்கள் – பணிகள் செயல்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது.
 
காவிரிப் படுகை மாபெரும் மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் காவிரி உரிமை மீட்புக் குழு அளிக்க உள்ளது.
 
கதவணைகள், தடுப்பணைகள், படுக்கை அணைகள் தேவைப்படும் இடங்களை அறிந்து கொள்ளவும், தூர்வாரவேண்டிய ஆற்றுப் பகுதிகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் முதலியவற்றைக் கண்டறியவும், புதிதாக உருவாக்கப்பட வேண்டிய இணைப்புக் கால்வாய்கள் குறித்து முன்மொழியவும் கள ஆய்வு செய்து மக்களிடம் கருத்துக் கேட்பது, அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகளைப் பெறுவது ஆகிய நோக்கங்களுக்காக காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஐந்து குழுக்கள் கல்லணையிலிருந்து 17.09.2018 திங்கள் காலை 9 மணிக்குப் புறப்படுகின்றன.
 
கல்லணையிலிருந்து மேற்கு நோக்கிக் கரூர் வரை தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை தலைமையிலான குழுவும், கல்லணையிலிருந்து காவிரிக் கரையோரங்களில் பூம்புகார் வரை காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன் தலைமையில் ஒரு குழுவும், கல்லணையிலிருந்து கொள்ளிடம் கரை கிராமங்களில் வல்லம் படுகை வரை விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் திரு குடந்தை அரசன் தலைமையில் ஒரு குழுவும், கல்லணையிலிருந்து வெண்ணாறு கரை ஓரங்களில், அதன் கிளை ஆறுகளில் முத்துப் பேட்டை வரை மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் (மாவட்டத் தலைவர், தமிழர் தேசிய முன்னணி) தலைமையில் ஒரு குழுவும், கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் பேராவூரணி வரை தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு தலைமையில் ஒரு குழுவும் என ஐந்து குழுக்கள் ஆய்வுகள் செய்து அறிக்கைகள் தயாரிக்க உள்ளன.
 
இந்த ஐந்து குழுக்களையும் வாழ்த்தி வழி அனுப்பிவைக்கும் நிகழ்ச்சியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யானபுரம் சி. முருகேசன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் திரு. கி வெங்கட்ராமன், இந்திய சனநாயக்கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர் ராசு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. நா வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் செகதீசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ஜெயனுலாப்தீன், தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகம் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், மனிதநேய சனநாயக் கட்சி மாவட்ட செயலாளர் திரு. அகமது கபீர், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் திரு. அருண்சோரி, சமூக நீதிப் பேரவை திருச்சி தலைவர் வழக்கறிஞர் இரவிக்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
 
இக்குழுவினர் வரும்போது அந்தந்தப் பகுதிக் கோரிக்கைகளை மக்கள் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
 
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger