தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


"காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்!" --------காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!"


காவிரி ஆணையக் கூட்டத்தில்

தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா?
முதலைமைச்சர் விளக்க வேண்டும்!
====================================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
=====================================================

தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் – அனைத்துக் கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு 22.06.2022 அன்று புதுதில்லி சென்று ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவாத் அவர்களைச் சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை அனுமதி பற்றி விவாதிக்கக் கூடாது என்றும் அதற்கான அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு துரைமுருகன் குழுவினரிடம் ஒன்றிய அமைச்சர் செகாவாத் மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று இந்திய அரசின் சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளதாகப் பதில் அளித்தார். செகாவாத்தின் இப்பதில் பற்றி துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறி அது வெளியாகி உள்ளது. அந்த அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்று தமிழ்நாடு சட்ட வல்லுநர்கள்- கூறியுள்ளதாகத் துரைமுருகன் பதில் மறுப்புக் கூறியதற்கு, வரும் ஆணையக் கூட்டத்தில் அந்த சட்ட விவரங்கள் பற்றி விவாதியுங்கள் என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். இச்செய்தியையும் துரைமுருகன் கொடுத்துள்ளார்.

அப்படி என்றால் 05.07.2022 அன்று புதுதில்லயில் நடைபெறும் ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்குமா என்ற வினா எழுகிறது.

காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை பொருள் நிரலில் (அஜண்டாவில்) சேர்க்கப்பட்டால் அக்கூட்டத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே எடுத்த நிலைபாட்டைக் கைவிட்டு விட்டாரா? அவ்வாறு கைவிட்டால் அதற்கான புதிய காரணங்கள் என்ன?

ஒரு காரணத்தைச் சொல்கிறார் துரைமுருகன். காவிரி ஆணையத்தில் மேக்கேதாட்டு அணை அனுமதித் தீர்மானத்தை தமிழ்நாடு தோற்கடித்துவிடும்; அந்த அளவு தமிழ்நாட்டுக்கு ஆணையத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமை உள்ள பொறுப்பாளர்கள் ஒன்பது பேர் மட்டுமே. இந்த ஒன்பது பேரில் இந்திய அரசு அதிகாரிகள் நான்கு பேர், ஆணையத்தின் தலைவரையும் சேர்த்தால் ஆக இந்திய அரசு சார்பானவர்கள் ஐந்து பேர்! கர்நாடகம், தமிழ்நாடு, புதுவை மாநிலங்களுக்கு தலா ஒரு வாக்கு!

இந்திய அரசுதான் மேக்கே தாட்டு அனுமதிப் பொருளை ஆணையக் கூட்டத்தில் முன்வைக்கிறது. இந்திய நீராற்றல் துறை அமைச்சரும் துரைமுருகனிடம் ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு கலந்து கொண்டு விவாதிக்க வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசு அதிகாரிகள் 5 + கர்நாடக வாக்கு 1 ஆக மொத்தம் 6 வாக்குகள் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாகக் கிடைத்து விடும்.

கேரளத்தின் 1 வாக்கு மேக்கேதாட்டுக்கு எதிராகப் போட்டாலும் அத்துடன் + தமிழ்நாடு + புதுவை சேர்த்தால் மூன்று வாக்குகள் மட்டுமே நமக்கு கிடைக்கும். தமிழ்நாட்டிற்கு ஆணையத்தில் பெரும்பான்மை உள்ளது என்று எந்தக் கணக்கை வைத்துத் துரைமுருகன் சொன்னார்?
வாக்கெடுப்பு நடத்துவதற்கான அடிப்படைக் கோரம் 6 பேர்! எனவே தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை அதிகாரிகள் வெளி நடப்புச் செய்து விட்டாலோ அல்லது கூட்டத்தைப் புறக்கணித்தாலோ – ஆணையக் கூட்டத்தை நடத்தித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான அடிப்படைக் “கோரம்” (குறைந்தபட்ச கூட்ட உறுப்பினர்) தேவையை இந்திய அரசும் கர்நாடகமும் நிறைவு செய்ய முடியும். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் மேக்கேதாட்டு அணையை கட்ட முடியாது என்று செகாவாத் சொன்னதாக துரைமுருகன் கூறுகிறார். உண்மையான மனநிலையில் அவர் கூறினால், தமிழ்நாடு அரசு வராவிட்டாலும் ஆணையக் கூட்டத்தை நடத்தி அணைப் பற்றி பேசுவோம் என்று அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் எந்த துணிச்சலில் சொல்கிறார்?

இந்திய நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவாத் கைவிரித்து விட்ட நிலையில் தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது. மேக்கேதாட்டை எப்படித் தடுக்கப்போகிறது என்பதை முதலமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

"காவிரித் தாய் மார்பறுக்க வரும் ஹல்தரே திரும்பிப் போ!, காவிரி உரிமை மீட்புக் குழு கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! "--- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!


காவிரித் தாய் மார்பறுக்க வரும்

ஹல்தரே திரும்பிப் போ!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு
கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
======================================

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர், நடுநிலை தவறிய நபர்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே துச்சமாக புறக்கணிக்கக்கூடியவர். காவிரி ஆணையக் கூட்டத்தின் வழியாக ஒரு தடவைகூட கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தராதவர். அதற்கான முயற்சியில் ஈடுபடாதவர்.

அவர், உச்ச நீதிமன்றம் விதித்த அதிகார வரம்பை மீறி, கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கக்கூடிய ஆவேசத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரம் ஆணையத்திற்குக் கிடையாது. அண்மையில் இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் அறிவுரையைப் பெற்றதாகவும், அது மேக்கேதாட்டில் அணை கட்டுவது குறித்து முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது எனக் கூறியதாகவும், அடுத்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேக்கேதாட்டு பற்றிய பொருள் விவாதிக்கப்படும் என்றும் 06.06.2022 அன்று செய்தி வெளியிட்டார்.

மேற்படி ஆணையத்தின் கூட்டம் 17.06.2022 அன்று புதுதில்லியில் நடைபெறும் என்று அறிவித்த ஹல்தர், இப்பொழுது அக்கூட்டத்தை 23.06.2022-க்கு மாற்றி வைத்துவிட்டு, தமிழ்நாட்டுக் காவிரி அணைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்வதாகக் கூறிக் கொண்டு, நேற்று (16.06.2022) பில்லிகுண்டுலு பகுதியைப் பார்வையிட்டுள்ளார். இன்று (17.06.2022) – முற்பகல் மேட்டூர் அணை மற்றும் சரபங்கா கால்வாய்த் திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டுவிட்டு, மாலை 3 மணிக்கு திருச்சி கல்லணையைப் பார்வையிட வருவதாக அறிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழுவும், மற்றும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்க தடையாணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஹல்தரின் நடுநிலை தவறிய மேக்கேதாட்டு ஆதரவுப் போக்கைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இப்பின்னணியில், பருவம் தவறிப் பெய்த மழையினால் மேட்டூர் அணை நிரம்பியிருப்பதையும் காவிரி டெல்டா பகுதிகளுக்குத் தண்ணீர் தாராளமாகப் பாய்ந்து கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் கர்நாடகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என ஆணையக் கூட்டத்தில் பேசவும், தமிழ்நாடு அரசும் கர்நாடகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேட்டூர் – சரபங்கா கால்வாய்த் திட்டம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது என்று பொருத்தமற்ற இலாவணிக் கச்சேரி பாடுவதற்காகவும் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டிருப்பதாக ஐயம் ஏற்படுகிறது.

ஏனெனில், அவர் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஒரு தடவை கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி வாராவாரம் / மாதாமாதம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறந்துவிடச் செய்து செயல்படுத்திக் காட்டியதே இல்லை! பருவமழை மற்றும் பருவந்தவறிய மழை வெள்ளங்களால் மிகை நீரைக் கர்நாடகம் திறந்துவிட்டதை ஒட்டியும், கர்நாடக அணைகளுக்குக் கீழ்ப் பகுதியிலும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலும் மழை நீர் ஓடி வந்ததாலும் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்து, கடந்த சில ஆண்டுகளாக குறுவை – சம்பா சாகுபடி நடந்து வருகிறது. அத்துடன், கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காலத்தில் கூட இந்த ஹல்தர் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை.

மனச்சான்று உருத்தலின்றி, நடுநிலை தவறி கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணையாக செயல்படக்கூடிய நபர் இந்த ஹல்தர் என்பதை மோடி அரசு புரிந்து கொண்டுதான், இவருடைய பணி ஓய்வுக்குப் பிறகு இவரை ஐந்தாண்டுகளுக்குக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அமர்த்தியது. இவர் இந்திய அரசின் நீராற்றல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனுப்புமாறு இவரே வலிந்து கேட்டு வாங்கி, அதற்கு அனுமதி கொடுத்து, அதை காவிரி மேலாண்மை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைத்தார்.

இப்பொழுது அந்த மேக்கேதாட்டு திட்டத்திற்கு ஆணையம் அனுமதி கொடுப்பதற்கு எல்லா சதிகளையும் செய்கிறார். நம்முடைய காவிரித் தாயின் மார்பறுக்க வரும் ஹல்தருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று கண்டன முழக்கமெழுப்புவது தமிழ்நாட்டு உழவர்களின் கடமை மட்டுமல்ல, அனைத்து மக்களின் கடமையுமாகும்!

காவிரி உரிமை மீட்புக் குழு உழவர் பெருமக்களும் உணர்வாளர்களும் இன்று (17.6.2022) பிற்பகல் 2.30 மணி முதல் கல்லணையில் திரண்டு, அங்கு வரும் எஸ்.கே. ஹல்தருக்குக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று அறவழியில் முழங்குவார்கள்! வாய்ப்புள்ள தமிழ் மக்கள் அனைவரும் இந்தக் காவிரிக் காப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger