தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


காவிரி உரிமை மீட்க டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் சாலை மறியல்! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு




காவிரி உரிமை மீட்க
டெல்டா மாவட்டங்களில்
1000 இடங்களில் சாலை மறியல்!


காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு


காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், இன்று (20.08.2016) தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார்.
தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. சி. அயனாவரம் முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவு மாநிலச் செயலாளர் திரு. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. அகமது கபிர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன், தமிழக உழவர் முன்னணி தமிழ்நாடு தலைவர் திரு. சி. ஆறுமுகம், தமிழக உழவர் முன்னணி இலால்குடி வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. நகர். செல்லையா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் தோழர் ப. சிவவடிவேலு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கலந்தாய்வுக் கூட்ட முடிவுகள்
--------------------------------------------------
இவ்வாண்டு சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் வராது என்று மறைமுகமாக உணர்த்துவது போல், தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடிப் புழுதி விதைப்பிற்கு நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியாகக் கடந்த ஐந்து பருவங்களில் ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்குரிய காவிரி நீரை தமிழ்நாட்டு முதலமைச்சரால் கர்நாடகத்திடமிருந்து பெற முடியவில்லை.
இந்திய அரசை வலியுறுத்தி அல்லது இந்திய அரசின் மீது செல்வாக்கு செலுத்தி, 2013லிருந்து இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடவும் தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்திட தமிழ்நாட்டு முதலமைச்சரால் முடியவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சர்க்கு இதற்கான ஆற்றல் இல்லை என்பதா அல்லது தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதா என்பது புரியாத புதிராக உள்ளது!
காவிரி நீர் தொடர்பாக அவ்வப்போது தலைமை அமைச்சர்க்குக் கடிதம் எழுதுவது, உச்ச நீதிமன்றத்தில் மனுப் போடுவது போன்ற அலுவலக எழுத்தர் அணுகுமுறையை (Clerical Approach) மட்டுமே காவிரி நீர் பெறுவதில் தமிழ்நாடு முதலமைச்சர் கைக்கொண்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கர்நாடக அணைகளில் உள்ள நீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைக் கேட்கும் அரசியல் நடைமுறையை (Political Approach) செல்வி செயலலிதா கைக்கொள்ளவே இல்லை.
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைக் காவிரி நீர் பெறுவதற்காக மட்டும் நேரில் சந்தித்து, கர்நாடக அணைகளில் உள்ள காவிரி நீரில், தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரைத் திறந்துவிட ஆணையிடுமாறும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியமும் ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்குமாறும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒருமுறைகூடக் கோரவில்லை.
உச்ச நீதிமன்றத்திலாவது விழிப்போடு திறமையாக வாதாடித் தமிழ்நாடு அரசு அதன்வழி நீதியைப் பெற்றதா? இல்லை. 2013-இல் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் இன்னும் விசாரணையே தொடங்கவில்லை. 2016 மார்ச்சு 28 அன்று உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு காவிரி வழக்கை 19.07.2016க்கு தள்ளி வைத்த போது, இவ்வளவு நீ்ண்ட காலத் தள்ளிவைப்பைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எதிர்க்காமல் ஏற்றார். அதன் பின்னர் 18.10.2016க்கு தள்ளி வைக்கப்பட்டது. காவிரி வழக்கில் தமிழ்நாடு அரசின் உச்ச நீதிமன்றச் செயல்பாடு மிக மோசமானது.
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி செயலலிதா காவிரி நீர் பெறுவதில் இவ்வளவு அலட்சியமாக இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கர்நாடக முதலமைச்சர்க்குக் கண்டனம்
----------------------------------------------------------------
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இவ்வாண்டு தென்மேற்குப் பருவமழை குறைவென்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்தின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் போதாதென்றும், தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்த் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கர்நாடகத்திற்குப் போதுமா போதாதா என்பதல்ல பிரச்சினை! கர்நாடக அணைகளில் இருக்கின்ற தண்ணீரில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பங்கு நீரைத் தர வேண்டும் என்பதே இங்குள்ள பிரச்சினை!
கர்நாடகத்தில் காவிரி அணைகளில் தேங்கியுள்ள நீரில் ஓர் ஆண்டுக்குக் கர்நாடகத்திற்குரியது 270 டி.எம்.சி; தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி; கேரளத்திற்கு 30 டி.எம்.சி. கர்நாடக அணைகளில் இப்போது இருப்பில் உள்ள நீரில் மேற்கண்ட விகிதப்படியான பங்கு நீரைத் தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.
கர்நாடகத்தில் பருவமழை இவ்வாண்டு பத்து விழுக்காடு குறைவு என்கிறார் சித்தராமையா. இந்தக் கணக்கு உண்மையானது என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால்கூட, பற்றாக்குறைக் காலத்தில் தண்ணீர் பகிர்வுக்குக் காவிரித் தீர்ப்பாயம் காட்டியுள்ள வழியைத்தான் பின்பற்ற வேண்டும். பத்து விழுக்காடு பருவமழை குறைவு என்றால், தனக்குரிய காவிரி நீரில் கர்நாடகம் 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும்; தமிழ்நாடு 5 விழுக்காடு குறைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே!
2016 சூன் – 10 டி.எம்.சி, சூலை – 34 டி.எம்.சி., ஆகஸ்ட்டு – 50 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்து விட்டிருக்க வேண்டும். இதில் 5 விழுக்காடு நீர் மட்டுமே குறைத்து விடுவித்திருக்க வேண்டும்.
இந்திய விடுதலைநாள் விழாவில் பெங்களூரில் சித்தராமையா பேசும்போது, கர்நாடக காவிரி நீராவாரி நிகம் 430 ஏரிகளில் காவிரி நீர் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது என்றார். கர்நாடக நீர்த் தேக்கங்களில் நீர் நிரம்பி விடாமல் இருக்கவும், அணை நீர் இருப்பைக் குறைத்துக் காட்டவும் இவ்வாறான ஏரிகளை விரிவாக்கி நிரப்பிக் கொள்கிறது கர்நாடகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் ரூ. 5,912 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டப்படும் என்றும் சித்தரமையா அவ்விழாவில் அறிவித்தார். வெள்ளப்பெருக்கு காலத்தில் கர்நாடக அணைகள் நிரம்பி மிச்ச நீர் மேட்டூருக்கு வருவதையும் தடுத்துத் தேக்கிக் கொள்ளப் புது அணை கட்டவுள்ளார்கள்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடாமல் தடுக்கிறது கர்நாடகம்.
காவிரிச் சிக்கலில் கர்நாடக அரசு கடைபிடிக்கும் சட்ட விரோதச் செயல்கள் மற்றும் தமிழ்நாட்டு உரிமைப் பறிப்பு வன்செயல்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய அரசுக்குக் கண்டனம்
----------------------------------------------
இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் – 1956இன்படி காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரமும் பொறுப்பும் இந்திய அரசிடம் உள்ளது.

ஆனால், நடுநிலை தவறி மறைமுகமாகக் கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணை போகும் இந்திய அரசின் நயவஞ்சகச் செயலைக் காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
-----------------------------------------
காரைக்கால் உள்பட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும், 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்பட்டு தமிழ்நாட்டின் உயிராதாரமாய் உள்ளது காவிரி.
நடப்பு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு இந்திய அரசு அமைத்திட வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்ட தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு அரசியல் தளத்திலும், மக்கள் களத்திலும் துடிப்புடன் செயல்பட வலியுறுத்தியும் போராட வேண்டிய உடனடித் தேவை உள்ளது.

1. தமிழ்நாடு அரசு காவிரி நீர் பெற தவறியதைக் கண்டித்தும் உடனடியாக காவிரி நீர் பெற செயல் தளத்தில் இறங்க வலியுறுத்தியும்
2. இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும்
3. உச்ச நீதிமன்றத் தீர்ப்பளித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும், தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்குரியத் தண்ணீரைத் திறந்துவிட மறுக்கும், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் கர்நாடக அரசை இந்திய அரசு கலைக்க வலியுறுத்தியும்..
2016 – செப்டம்பர் 23 – வெள்ளி அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள் – நகரங்கள் உட்பட 1000 இடங்களில் மக்கள் தன்னெழுச்சி சாலை மறியல் போராட்டம் நடத்துது என்று காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து, கிராமம் கிராமமாக விரிந்த அளவில் பரப்புரைகள் மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.


 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger