தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


"காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்!" --------காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!"


காவிரி ஆணையக் கூட்டத்தில்

தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா?
முதலைமைச்சர் விளக்க வேண்டும்!
====================================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
=====================================================

தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் – அனைத்துக் கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு 22.06.2022 அன்று புதுதில்லி சென்று ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவாத் அவர்களைச் சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை அனுமதி பற்றி விவாதிக்கக் கூடாது என்றும் அதற்கான அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு துரைமுருகன் குழுவினரிடம் ஒன்றிய அமைச்சர் செகாவாத் மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று இந்திய அரசின் சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளதாகப் பதில் அளித்தார். செகாவாத்தின் இப்பதில் பற்றி துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறி அது வெளியாகி உள்ளது. அந்த அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்று தமிழ்நாடு சட்ட வல்லுநர்கள்- கூறியுள்ளதாகத் துரைமுருகன் பதில் மறுப்புக் கூறியதற்கு, வரும் ஆணையக் கூட்டத்தில் அந்த சட்ட விவரங்கள் பற்றி விவாதியுங்கள் என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். இச்செய்தியையும் துரைமுருகன் கொடுத்துள்ளார்.

அப்படி என்றால் 05.07.2022 அன்று புதுதில்லயில் நடைபெறும் ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்குமா என்ற வினா எழுகிறது.

காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை பொருள் நிரலில் (அஜண்டாவில்) சேர்க்கப்பட்டால் அக்கூட்டத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே எடுத்த நிலைபாட்டைக் கைவிட்டு விட்டாரா? அவ்வாறு கைவிட்டால் அதற்கான புதிய காரணங்கள் என்ன?

ஒரு காரணத்தைச் சொல்கிறார் துரைமுருகன். காவிரி ஆணையத்தில் மேக்கேதாட்டு அணை அனுமதித் தீர்மானத்தை தமிழ்நாடு தோற்கடித்துவிடும்; அந்த அளவு தமிழ்நாட்டுக்கு ஆணையத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமை உள்ள பொறுப்பாளர்கள் ஒன்பது பேர் மட்டுமே. இந்த ஒன்பது பேரில் இந்திய அரசு அதிகாரிகள் நான்கு பேர், ஆணையத்தின் தலைவரையும் சேர்த்தால் ஆக இந்திய அரசு சார்பானவர்கள் ஐந்து பேர்! கர்நாடகம், தமிழ்நாடு, புதுவை மாநிலங்களுக்கு தலா ஒரு வாக்கு!

இந்திய அரசுதான் மேக்கே தாட்டு அனுமதிப் பொருளை ஆணையக் கூட்டத்தில் முன்வைக்கிறது. இந்திய நீராற்றல் துறை அமைச்சரும் துரைமுருகனிடம் ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு கலந்து கொண்டு விவாதிக்க வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசு அதிகாரிகள் 5 + கர்நாடக வாக்கு 1 ஆக மொத்தம் 6 வாக்குகள் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாகக் கிடைத்து விடும்.

கேரளத்தின் 1 வாக்கு மேக்கேதாட்டுக்கு எதிராகப் போட்டாலும் அத்துடன் + தமிழ்நாடு + புதுவை சேர்த்தால் மூன்று வாக்குகள் மட்டுமே நமக்கு கிடைக்கும். தமிழ்நாட்டிற்கு ஆணையத்தில் பெரும்பான்மை உள்ளது என்று எந்தக் கணக்கை வைத்துத் துரைமுருகன் சொன்னார்?
வாக்கெடுப்பு நடத்துவதற்கான அடிப்படைக் கோரம் 6 பேர்! எனவே தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை அதிகாரிகள் வெளி நடப்புச் செய்து விட்டாலோ அல்லது கூட்டத்தைப் புறக்கணித்தாலோ – ஆணையக் கூட்டத்தை நடத்தித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான அடிப்படைக் “கோரம்” (குறைந்தபட்ச கூட்ட உறுப்பினர்) தேவையை இந்திய அரசும் கர்நாடகமும் நிறைவு செய்ய முடியும். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் மேக்கேதாட்டு அணையை கட்ட முடியாது என்று செகாவாத் சொன்னதாக துரைமுருகன் கூறுகிறார். உண்மையான மனநிலையில் அவர் கூறினால், தமிழ்நாடு அரசு வராவிட்டாலும் ஆணையக் கூட்டத்தை நடத்தி அணைப் பற்றி பேசுவோம் என்று அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் எந்த துணிச்சலில் சொல்கிறார்?

இந்திய நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவாத் கைவிரித்து விட்ட நிலையில் தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது. மேக்கேதாட்டை எப்படித் தடுக்கப்போகிறது என்பதை முதலமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

"காவிரித் தாய் மார்பறுக்க வரும் ஹல்தரே திரும்பிப் போ!, காவிரி உரிமை மீட்புக் குழு கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! "--- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!


காவிரித் தாய் மார்பறுக்க வரும்

ஹல்தரே திரும்பிப் போ!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு
கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
======================================

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர், நடுநிலை தவறிய நபர்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே துச்சமாக புறக்கணிக்கக்கூடியவர். காவிரி ஆணையக் கூட்டத்தின் வழியாக ஒரு தடவைகூட கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தராதவர். அதற்கான முயற்சியில் ஈடுபடாதவர்.

அவர், உச்ச நீதிமன்றம் விதித்த அதிகார வரம்பை மீறி, கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கக்கூடிய ஆவேசத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரம் ஆணையத்திற்குக் கிடையாது. அண்மையில் இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் அறிவுரையைப் பெற்றதாகவும், அது மேக்கேதாட்டில் அணை கட்டுவது குறித்து முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது எனக் கூறியதாகவும், அடுத்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேக்கேதாட்டு பற்றிய பொருள் விவாதிக்கப்படும் என்றும் 06.06.2022 அன்று செய்தி வெளியிட்டார்.

மேற்படி ஆணையத்தின் கூட்டம் 17.06.2022 அன்று புதுதில்லியில் நடைபெறும் என்று அறிவித்த ஹல்தர், இப்பொழுது அக்கூட்டத்தை 23.06.2022-க்கு மாற்றி வைத்துவிட்டு, தமிழ்நாட்டுக் காவிரி அணைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்வதாகக் கூறிக் கொண்டு, நேற்று (16.06.2022) பில்லிகுண்டுலு பகுதியைப் பார்வையிட்டுள்ளார். இன்று (17.06.2022) – முற்பகல் மேட்டூர் அணை மற்றும் சரபங்கா கால்வாய்த் திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டுவிட்டு, மாலை 3 மணிக்கு திருச்சி கல்லணையைப் பார்வையிட வருவதாக அறிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழுவும், மற்றும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்க தடையாணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஹல்தரின் நடுநிலை தவறிய மேக்கேதாட்டு ஆதரவுப் போக்கைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இப்பின்னணியில், பருவம் தவறிப் பெய்த மழையினால் மேட்டூர் அணை நிரம்பியிருப்பதையும் காவிரி டெல்டா பகுதிகளுக்குத் தண்ணீர் தாராளமாகப் பாய்ந்து கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் கர்நாடகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என ஆணையக் கூட்டத்தில் பேசவும், தமிழ்நாடு அரசும் கர்நாடகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேட்டூர் – சரபங்கா கால்வாய்த் திட்டம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது என்று பொருத்தமற்ற இலாவணிக் கச்சேரி பாடுவதற்காகவும் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டிருப்பதாக ஐயம் ஏற்படுகிறது.

ஏனெனில், அவர் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஒரு தடவை கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி வாராவாரம் / மாதாமாதம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறந்துவிடச் செய்து செயல்படுத்திக் காட்டியதே இல்லை! பருவமழை மற்றும் பருவந்தவறிய மழை வெள்ளங்களால் மிகை நீரைக் கர்நாடகம் திறந்துவிட்டதை ஒட்டியும், கர்நாடக அணைகளுக்குக் கீழ்ப் பகுதியிலும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலும் மழை நீர் ஓடி வந்ததாலும் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்து, கடந்த சில ஆண்டுகளாக குறுவை – சம்பா சாகுபடி நடந்து வருகிறது. அத்துடன், கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காலத்தில் கூட இந்த ஹல்தர் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை.

மனச்சான்று உருத்தலின்றி, நடுநிலை தவறி கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணையாக செயல்படக்கூடிய நபர் இந்த ஹல்தர் என்பதை மோடி அரசு புரிந்து கொண்டுதான், இவருடைய பணி ஓய்வுக்குப் பிறகு இவரை ஐந்தாண்டுகளுக்குக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அமர்த்தியது. இவர் இந்திய அரசின் நீராற்றல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனுப்புமாறு இவரே வலிந்து கேட்டு வாங்கி, அதற்கு அனுமதி கொடுத்து, அதை காவிரி மேலாண்மை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைத்தார்.

இப்பொழுது அந்த மேக்கேதாட்டு திட்டத்திற்கு ஆணையம் அனுமதி கொடுப்பதற்கு எல்லா சதிகளையும் செய்கிறார். நம்முடைய காவிரித் தாயின் மார்பறுக்க வரும் ஹல்தருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று கண்டன முழக்கமெழுப்புவது தமிழ்நாட்டு உழவர்களின் கடமை மட்டுமல்ல, அனைத்து மக்களின் கடமையுமாகும்!

காவிரி உரிமை மீட்புக் குழு உழவர் பெருமக்களும் உணர்வாளர்களும் இன்று (17.6.2022) பிற்பகல் 2.30 மணி முதல் கல்லணையில் திரண்டு, அங்கு வரும் எஸ்.கே. ஹல்தருக்குக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று அறவழியில் முழங்குவார்கள்! வாய்ப்புள்ள தமிழ் மக்கள் அனைவரும் இந்தக் காவிரிக் காப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

" மேக்கேதாட்டைத் தடுக்க சட்டமன்றத் தீர்மானம் பயனில்லை! மக்களே வீதிக்கு வாருங்கள்!"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பளார் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!


 மேக்கேதாட்டைத் தடுக்க
சட்டமன்றத் தீர்மானம் பயனில்லை!
மக்களே வீதிக்கு வாருங்கள்!
===========================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பளார் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
============================================

கர்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 21.03.2022 அன்று ஒருமனமாக நிறைவேற்றப்பட்டது. இதை முன்மொழிவதற்கு முன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரை 1967-லிருந்து இன்று வரை தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர் உரிமையைத் தி.மு.க. ஆட்சியாலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாலும் மீட்க முடிய வில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமாக உள்ளது.

“அண்ணா ஆட்சியிலிருந்து மு.க.ஸ்டாலின் ஆட்சி வரை - இதுவரை காவிரி உரிமையை மீட்க முடியவில்லை; என்று தணியும் காவிரித் தாகம்; நமது கொள்ளுப் பேரன் காலம் வரை காவிரிச் சிக்கல் தீராதோ என்கிற கவலை ஏற்பட்டுள்ளது” என்றெல்லாம் துரைமுருகன் பேசியுள்ளார்.

ஆனால் கடந்த காலங்களில் காவிரி உரிமையை மீட்டதாக தி.மு.க.வினரும் அ.இ.அ.தி.மு.க.வினரும் மாறி மாறி “வெற்றி முழக்கங்கள்“ எழுப்பியுள்ளார்கள். வெற்றி விழாக்கள் கொண்டாடி உள்ளார்கள்.

வாஜ்பாயி தலைமை அமைச்சராக இருந்த போது, 1998 ஆகத்து மாதம் 7,8 இரு நாட்கள் அவர் தலைமையில் கர்நாடகமும் தமிழ்நாடும் காவிரி ஒப்பந்தம் போட்டன. அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி. கலைஞர் கருணாநிதி முதலமைச்சர்: அந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளைப் பறி கொடுக்கிறது என்று அப்போதே எமது தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி) எச்சரித்தது; கண்டனம் செய்தது.

அந்த ஒப்பந்தப்படி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் தலைவர், இந்தியத் தலைமை அமைச்சர்; தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், பதுச்சேரி மாநிலங்களின் முதலமைச்சர்கள் உறுப்பினர்கள். அந்த ஆணையக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து உடன்பாடு (Consensus) ஏற்பட்டால்தான் எந்த முடிவும் எடுக்க முடியும் என்பது நிபந்தனை. தண்ணீர்ப் பகிர்வை அறிவித்துச் செயல்படுத்தும் தற்சார்பு அதிகாரம் அந்த ஆணையத்திற்குக் கிடையாது. “எலி பிடிக்காதது பூனையா, அதிகாரம் இல்லாதது ஆணையமா?” என்று கேட்டு அதை எதிர்த்து மாநாடும் கூட்டங்களும் நடத்தினோம். தஞ்சை பெசன்ட் அரங்கத்தின் வெளித் திடலில் மேடை போட்டு நடந்த மாநாட்டில் தமிழக விவசாய சங்கத் தலைவர் டாக்டர் எம்.ஆர் சிவசாமி அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள், காவிரி உரிமை போராளி மூத்த வழக்கறிஞர் ஐயா பூ.அர.குப்புசாமி அவர்கள், விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயா கோபால தேசிகன் அவர்களும் மற்றும் ஒத்த கருத்துள்ள இயக்கத்தின் தலைவர்களும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நானும் கண்டன உரையாற்றினோம்.

ஆனால் இந்த ஒப்பந்தத்திற்காக தஞ்சாவூர் திலகர் திடலில் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குப் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்து, “காவிரி கொண்டான்” என்று பட்டம் கொடுக்கச் செய்தார்கள்.

அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் நாள் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வந்தது. அது தமிழ் நாட்டிற்குக் கர்நாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீரை மேலும் குறைத்து 192 டி.எம்.சி. ஆக்கியது. கர்நாடகத்தின் பாசனப் பரப்பை 11.05 இலட்சம் ஏக்கரிலிருந்து 22 இலட்சம் ஏக்கர் வரை உயர்த்தியது. அதையும் வரவேற்ற அப்போதைய முதல்வர் கருணாநிதி. “ஞாயத் தீர்ப்பு; ஆறுதல் அளிக்கிறது” என்று செய்தியாளர்களிடம் கூறினார். “மகிழ்ச்சி, மகிழ்ச்சி” என்று கொண்டாட்ட முழக்கம் எழுப்பினார் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன். இருவரும் அப்போது புதுதில்லியில் இருந்தார்கள். இடைக்காலத் தீர்ப்பு 205 டி.எம்.சி; இறுதித் தீர்ப்போ 192 டி.எம்.சி. அதையும் ஞாயத் தீர்ப்பு என்றார்கள்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் இறுதித் தீர்ப்பு நகலை எரித்துக் கைதானோம். பல்வேறு உழவர் அமைப்புகளும் அத்தீர்ப்பை எதிர்த்துப் போராடின. அதன் பிறகு அத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு போட்டது தி.மு.க. ஆட்சி.

ஆனால் அந்தத் தீரப்பையும் அரசிதழில் வெளியிட்டுச் செயல்படுத்த மறுத்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு ஆட்சி. அந்தக் காங்கிரசு ஆட்சியில் கூட்டணி அமைச்சர்களாக இருந்தனர் தி.முக.வினர்.

பின்னர் 2011-இல் முதல்வரான செயலலிதா வற்புறுத்தலின் பேரில், மன்மோகன் சிங் ஆட்சி 2013-இல் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பை இந்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது. ஆனால் செயல்படுத்தும் ஆணையம் அமைக்க மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்தத் தீர்ப்புப்படி 18.05.2018-இல் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், 177.25 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்ட காவிரி நீரை தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தரவில்லை. ஆனால் ஒவ்வொரு ஆணையக் கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைக்கான அனுமதியை நிகழ்ச்சி நிரலில் ஒரு பொருளாக முன்வைக்கிறது. ஒரு தலைச்சார்பான அந்த ஆணையத் தலைவர் ஹல்தரை நீக்கவோ, அந்த ஆணையத்தைக் கலைத்து, புதிய ஆணையம் அமைக்கவோ அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை. இப்போதைய சட்டமன்றத் தீர்மானமும் அவ்வாறு கோரவில்லை.

“நீங்கள் யோக்கியனா, நான் யோக்கியனா என்று பேசுவதை விட்டுவிட வேண்டும் “ என்று இப்போது பேசுகிறார் துரைமுருகன். “நமது காலத்தில் இந்த காவிரி பிரச்சனையைத் தீர்த்து வைக்காவிட்டால், பின்னர் வரும் சமுதாயம் நம்மைக் காரி துப்பும்” என்கிறார்.

இவ்வளவு தீவிரமாகப் பேசி, மேக்கேதாட்டு தீர்மானத்தை முன்வைத்தனர். அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அத்தீர்மானம் மறுபடியும் இந்திய அசுக்கு வேண்டுகோள் வைத்து, மேக்கேதாட்டை அனுமதிக்காதீர் என்ற கோரிக்கையுடன் முடிந்துவிட்டது.

தமிழ்நாடு தழுவிய மக்கள் எழுச்சிப் பேரணி; ஆர்ப்பாட்டம் போன்ற எந்த செயல் திட்டத்தையும் அத்தீர்மானம் முன்வைக்கவில்லை.

ஐம்பதாண்டுகளுக்கு மேலாகக் காவிரிச் சிக்கலில் எதையும் சாதிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு வராமல் காவிரி நீரை தடுக்க கர்நாடக அரசு புதிது புதிதாக கட்டிய அணைகளை தமிழ்நாட்டு ஆட்சியாளர்களாலும், கட்சிகளாலும் தடுக்க முடியவில்லை. இந்திய அரசின் சூழ்ச்சிகளைத் தடுக்க முடியாத தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளையோ, அக்கட்சிகளையோ மீண்டும் எதிர்பார்த்து, செயலற்றுத் தமிழ்நாட்டு மக்கள் இருந்தால், மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டி முடித்து விடும். அப்படித்தான் 1970 களில் ஏமாவதி, ஏரங்கி, கபினி, இலட்சுமண தீர்த்தா முதலிய சட்ட விரோத அணைகளைக் கட்டி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் வராமல் தடுத்துள்ளது. இந்த அணைகள் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசும் தஞ்சை மாவட்ட உழவர்கள் அமைப்பும் உச்சநீதி மன்றத்தில் 1971-இல் போட்ட வழக்கை, அன்றைய தலைமை அமைச்சர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, வழக்குகளை 1972-இல் திரும்பப் பெற்றார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்கேதாட்டு கட்டப்பட்டுவிட்டால் ஒரு சொட்டு நீர் மேட்டூர் வராது.
தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் காவிரி நீர் உரிமை நீர் ஆகும். அது குடிநீராக, பாசன நீராக நம் உயிரோடு கலந்துள்ளது. தமிழ்நாடு தழுவிய அளவில் மக்கள் திரள் எழுச்சியை உருவாக்க வேண்டும். “இனப் பாகுபாடு காட்டும் இந்திய அரசே மேக்கேதாட்டை தடுத்து நிறுத்து” என்று முழங்கி தமிழ்நாடு தழுவிய அளவில் மக்கள் ஆயிமாயிரமாய் அணிவகுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

"மேக்கேதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டது! தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது...?"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!


 மேக்கேதாட்டில் அணை கட்ட
கர்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டது!
தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?
=======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!
=======================================

கர்நாடக அரசு 2022-2023 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மேக்கே தாட்டில் அணைகட்ட ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நிதி நிலை அறிக்கையை முன்வைத்து சட்டப் பேரவையில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் இந்திய அரசு ஒப்புதல் பெற்று அணைகட்டியே தீருவோம் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

சட்டவிரோத மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் துணை நிற்பதை பார்த்து வந்துள்ளோம். ஆனால் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் இப்போது தி.மு.க ஆட்சிகாலத்திலும் சட்ட விரோத மேக்கே தாட்டு அணை கட்டப்படாமல் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அணை கட்ட விடமாட்டோம் என்று பொத்தாம் பொதுவில் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அறிக்கை வெளியிடுவது தொடர் சடங்காகிவிட்டது.

கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற ஒரு கோரிக்கையைக் கூட தமிழ்நாடு அரசு முன்வைக்கவில்லை. மேக்கேதாட்டு அணைக்கு தடை வித்திக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வழக்கை விரைவு படுத்துவதற்கு சட்ட முயற்சிகள் எதையும் தமிழ்நாடு அரசு செய்யவில்லை.

சட்டத்திற்குப் புறம்பாகக் கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணைக்கட்ட மோடி அரசு துணை போகிறது. இந்த அநீதியைக் கண்டித்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து உழவர் அமைப்புகள் சார்பில் வெகு மக்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட சனநாயக போராட்டங்களை நடத்த தமிழ்நாட்டு ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ முன்முயற்சி எடுக்கவில்லை. தி.மு.க.வும் அ.தி.மு.கவும் காவிரி சிக்கலில் ஒருவரை எதிர்த்து ஒருவர் இலாவணி கச்சேரி நடத்திக் கொண்டுள்ளன.

1970-களில் அன்றைய ஒன்றிய காங்கிரசு ஆட்சியின் மறைமுகத் துணையோடு கர்நாடகம் சட்டவிரோதமாக ஹேமாவதி, ஹேரங்கி, கபினி அணைகளைக் கட்டியதை நாம் அறிவோம். அதனால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் தடுத்துக் கொண்டு நமக்குப் பேரிழப்புகள் உண்டாக்கியுள்ளதை நாம் அறிவோம்.

தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் ஆதாரமாய் உள்ள காவிரி உரிமையைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்; ஆட்சியாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

" மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை! அதன் தலைவரை நீக்க வேண்டும்!"--- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!


மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை!
அதன் தலைவரை நீக்க வேண்டும்!
=========================================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
=========================================================

மூன்று தடவை தள்ளி வைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நேற்று (11.02.2022) அன்று காணொலி வாயிலாக நடந்துள்ளது. இந்தக் கூட்டம் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிப்பதற்கான தனிச் சிறப்புக் கூட்டம் என்று மேலாண்மை ஆணையத் தலைவர் செளமித்திர குமார் ஹல்தர் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து விவாதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதனால் மேக்கேதாட்டு அணை விவரம் பேசாமலேயே, இரண்டு மணி நேரம் அக்கூட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

தமிழ்நாட்டை இணங்க வைப்பதற்காக இந்திய அரசு அதிகாரிகள் அவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்று ஊகிக்க முடிகிறது.

உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கபட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படித் தண்ணீர்ப் பகிர்வைக் கண்காணித்து செயல்படுத்தும் அதிகாரம் மட்டுமே கொண்டுள்ளது. கர்நாடகம் புதிய அணை கட்டுவது பற்றி விவாதிக்கவோ முடிவு எடுக்கவோ அதற்கு அதிகாரம் இல்லை.

ஒன்றிய பா.ச.க. ஆட்சியினரின் தூண்டுதலால், அதிகார அத்துமீறலில் இறங்கி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி தருவது பற்றிய பொருளை நிகழ்ச்சி நிரலில் சேர்த்து வருகிறது.

மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து விவாதிப்பதற்கும் முடிவு எடுப்பதற்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்ற உண்மையைத் தமிழ்நாடு அரசு வெளிப்படையாக இதுவரை கூறாதது ஏன்?

மேக்கேதாட்டு அணைக்குத் தடை கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அணை பற்றி ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என்று மட்டும் தமிழ்நாடு அரசு காரணம் கூறிவருவது போதுமானது அல்ல.

காவிரித் தீர்ப்பாயம் 2007-ஆம் ஆண்டு அளித்த இறுதித் தீரப்பைச் செயல்படுத்துவது குறித்த வழக்கில் உச்ச நீதி மன்றம் 16.02.2018 அன்று தீர்பளித்தது. அதில், தண்ணீர்ப் பகிர்வு அளவில் மட்டுமே மாற்றம் செய்திருக்கிறோம், மற்றவற்றில் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு செல்லுபடியாகும் என்று கூறியுள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (மேலாண்மை வாரியத்திற்கு) தண்ணீர் பகிர்வு தன்னாட்சி அதிகாரம் மட்டுமே வழங்கியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான செயல் என்று கூறி, அந்த ஆணையத்தின் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும்.

இப்பொழுது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள செளமித்திர குமார் ஹல்தர், இதற்கு முன் ஒன்றிய அரசின் நீராற்றல் துறையின் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். காவிரி ஆணைய நிரந்தரத் தலைவர் பதவியை ஐந்தாண்டுகளுக்கு மோடி அரசு அவருக்குப் பரிசாக வழங்கியிருக்கிறது. அதற்கு நன்றிக் கடனாக, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைக் கர்நாடகம் தடுத்துப் பயன்படுத்திக் கொள்ள மேக்கேதாட்டிற்கு அனுமதி கொடுக்கத் துடிக்கிறார் ஹல்தர்.

இதே எஸ்.கே.ஹல்தர் நீராற்றல் துறைத் தலைவராக இருந்த போதுதான் மேக்கேதாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடக அரசிடம் கேட்டு வாங்கி, அதைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தார்.
எனவே, ஹல்தரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், தண்ணீர்ப் பகிர்வை மட்டும் செயல்படுதும் தன்னாட்சி அதிகாரமுள்ள புதிய ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து சட்டமுறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================



 

"மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க முடிவு : மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்!"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!


மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு
அனுமதி அளிக்க முடிவு :
மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்!
========================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
========================================


நாடாளுமன்ற மக்களவையில் 07.02.2022 அன்று கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி உறுப்பினர் பிரஜ்வால் ரேவன்ணா மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கொடுப்பது பற்றிக் கேட்ட வினாவுக்கு, சுற்றுச்சூழல் – வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, இந்திய அரசு அனுமதி கொடுப்பதற்கான முயற்சியில் இருக்கிறது என்று விடை அளித்துள்ளார்.

ஒன்றிய அரசின் நீராற்றல் துறையும், காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக அரசின் வரைவு செயலாக்க அறிக்கையை ஏற்றுக் கொண்ட பின், மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிப்பது குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை முடிவு செய்யும் என்று அஸ்வினி சௌபே கூறியுள்ளார்.

நடைமுறை உண்மை என்னவெனில், ஒன்றிய நீராற்றல் துறை ஏற்கெனவே மேக்கேதாட்டு அணைக்கான வரைவு செயலாக்க அறிக்கையைத் தன்னளவில் ஏற்றுக் கொண்டதுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்கச் செய்வதற்காக, அதற்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்பிறகு, காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைக்கு ஒப்புதல் தெரிவிப்பதை தனது பொருள் நிரலில் வலிந்து சேர்த்து வருகிறது. தமிழ்நாட்டு அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் – அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது.

இப்போது, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை அமைச்சகம் அனுமதி தருவதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் மட்டுமே பாக்கியாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மேக்கேதாட்டு அணை ஒப்புதல் பற்றி விவாதிக்க முடியாது, அதற்கு ஒப்புதல் தரக்கூடாது என தமிழ்நாடு தடுத்தால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தையே நடத்த மாட்டோம் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் சௌமித்ர குமார் ஹல்தர் கூறாமல் கூறுவதுபோல், கடந்த திசம்பரிலிருந்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மூன்று முறை தேதி குறித்துவிட்டு, காலவரம்பின்றி ஒத்தி வைத்து விட்டார்.

இப்போது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள சௌமித்ர குமார் ஹல்தர் இதற்கு முன் ஒன்றிய நீராற்றல் துறையின் தலைவராக இருந்தவர் என்பதும், இவர்தாம் மேக்கேதாட்டு ஒப்புதலுக்கு, அதன் வரைவு செயலாக்க அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தவர் என்பதும் நாடறிந்த உண்மை!

மேக்கேதாட்டு அணை கட்டினால் கர்நாடகத்தின் காட்டு உயிரினங்கள் வாழும் 2,925.50 எக்டேர் நிலமும், 1869.50 எக்டேர் காப்புக் காடுகளும், ஐந்து கிராமங்களும் நீரில் மூழ்கும் என்று கர்நாடக அரசு அளித்த வரைவு செயலாக்க அறிக்கை கூறுவதையும் அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே எடுத்துக் கூறுகிறார். ஆனாலும், அனுமதி அளிப்போம் என்று விடையிறுத்துள்ளார்.

மிகை நீர் மற்றும் குடிநீர் அணை என்று மேக்கேதாட்டு அணைக்குப் புனை பெயர் வைத்துள்ளார்கள். இந்த அணையின் கொள்ளளவு 67.15 ஆ.மி.க. (டி.எம்.சி.) காவிரியில் கர்நாடக, மற்றும் மேட்டூர் அணைகள் நிரம்பி 67.15 ஆ.மி.க. அளவுக்கு மிகை நீர் கடலில் கலந்த வரலாற்றைக் கடந்த 60 ஆண்டு காலத்தில் ஒரு தடவை கூட கண்டதில்லை. நடப்புக் காவிரித் தண்ணீர் ஆண்டில் வரலாறு காணாத பெருமழை பெய்து, காவிரியின் மிகை நீர் கடலில் கலந்தது. அதன் அளவு 42 ஆ.மி.க. மட்டுமே! இவ்வளவு பெருமழை பெய்த இந்த ஆண்டும் தமிழ்நாட்டிற்கு மாதாமாதம் திறந்துவிட வேண்டிய காவிரி நீரைக் கர்நாடக அரசு அந்தந்த மாதத்தில் திறந்து விடவில்லை.

எனவே, மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டுவிட்டால் ஒரு சொட்டுக் காவிரி நீர் கூடக் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வராது. தமிழ்நாட்டுக் குடிநீரையும் பாசன நீரையும் காவு கொள்ள இந்திய – கர்நாடக பா.ச.க. ஆட்சிகளின் சதித் திட்டத்தை முறியடிக்கத் தமிழ்நாடு அரசு என்ன எதிர்வினை ஆற்றப் போகிறது? த.நா. முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

காவிரி உரிமைச் சிக்கல் டெல்டா மாவட்டங்களின் உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக் குடிநீர் மற்றும் உணவு உற்பத்திக்கான சிக்கல் என்பதையும், தமிழினத்தின் உரிமைச் சிக்கல் என்பதையும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு, கிளர்ந்து எழுந்து போராட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger