தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம் - குடந்தையில் வரி அலுவலகம் பூட்டப் பட்டது!

இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம் - குடந்தையில் வரி அலுவலகம் பூட்டப் பட்டது!

அரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி இந்திய அரசு கர்நாடகத்திற்குக் கட்டளைத் தாக்கீது அனுப்பி நாள் தோறும் 2 டி.எம்.சி. தண்ணீர் வீதம் 40 நாட்களுக்கு தமிழகத்திற்குத் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 22.10.2012 ஆகிய இன்று காவிரி பாசன மாவட்டங்களில் இந்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இடைவிடாது கொட்டித் தீர்த்த மழைக்கு இடையிலும் இப்போராட்டத்தில் பல்வேறு கட்சியினரும், உழவர் அமைப்பினரும் திரளாக பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை:
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருகிணைப்பாளர் – தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்னாள் மறியல் போராட்டம் நடைபெற்றது, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருகிணைப்பாளர் வழங்குரைஞர் நல்லதுரை, ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு பாஸ்கரன், துணைத் தலைவர் திருமதி பத்மா, விடுதலை தமிழ் புலிகள் மாநில அமைப்புச் செயலாளர் திரு அருள் மாசிலாமணி, த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு. முனியாண்டி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் க.காமராசு உள்ளிட்ட 52 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாயினர். போரட்ட அழுத்தம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலக வாயில் கதவுகளை காவல்துறையினரே பூட்டி விட்டனர். போராட்டத தோழர்களைக் காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

குடந்தையில் வரிஅலுவலகம் பூட்டப் பட்டது:
குடந்தையில் 22.10.2012 காலை 11 மணிக்கு வருமானவரி அலுவலகத்தை மறியல் செய்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ம.தி.மு.க. மாநிலத் தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.முருகன் தலைமை தாங்கினார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் விடுதலைச் சுடர், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி பணி. மேரி ராசு உள்ளிட்ட 60க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர், காவல்துறை ஏற்படுத்திய தடைகளைத் தாண்டி முன்னேறிய தோழர்கள் குடந்தை வருமானவரி அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்:
தஞ்சை – திருவாரூர் – நாகை மாட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் திரு மு.சேரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்னால் மறியல் போராட்டம் நடத்தி கைதாயினர். இதில் பாரதிய கிசான் சங்க பொறுப்பாளர் திரு இராமையா, நாம் தமிழர் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தென்றல் சந்திரசேகரன் , விவசாயிகள் கூட்டமைப்பின் ஒன்றியத் தலைவர் திரு சுப்பையன், செயலாளர் திரு அகஸ்டின், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திரு பழனிவேல் உள்ளிட்ட விவசாயிகள் அடங்குவர்.

மன்னார்குடி:
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் தலைமை அஞ்சலகம் முன்பு கூடிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கத் துணைத் தலைவர் திரு எம்.சி.பழனிவேல் தலைமை தாங்கினார் . தோழர் அரங்க.குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர்), திரு செந்தில் (ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்), தோழர் ரெ.செ.பாலன் (த.தே.பொ.க) தோழர் காளிதாசு (திராவிடர் விடுதலை கழகம்), திரு வரதராசன் (த.நா.வி.ச.), திரு சத்திய நாராயணன் (விவசாயிகள் கூட்டமைப்பு), உள்ளிட 25 பேர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். காவல் துறையினர் இவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஒய்சூர் கருணை தலைமை தாங்கினார், ம.தி.மு.க. நகரச் செயலாளர் திரு கோ.வி.சேகர், த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் இரா.தனபாலன், நாம் தமிழர் கட்சி மாவட்ட்த் துணைச் செயலாளர் திரு முத்துகுமார், பாரம்பரிய நெல்லைக் காப்போம் இயக்கத் தலைவர் திரு செயராமன், இயற்கை வேளாண் உழவர் இயக்கம் தோழர் வே.இராமதாசு, த.தே.பொ.க ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் கா.அரசு, வழக்குரைஞர் இ.தனஞ்செயன், நகரச் செயலாளர் தோழர் கு.இரமேசு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

நாகை:
நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம் முன்பு காவிரி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் திரளான உழவர்கள் பங்கேற்றனர். மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கீழ்வேளூர் தனபால் தலைமை தாங்கினார்.

(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள் : விஜய்)

காவிரி நீரைப் பெற்றுத் தராத இந்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம்!

காவிரி நீரைப் பெற்றுத் தராத
இந்திய அரசு அலுவலகங்கள்
முன் மறியல் போராட்டம்!


நைல் நதி சூடானுக்கும், எகிப்திற்கும் இடையே ஓடுகிறது. சிந்து நதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஓடுகிறது. காவிரி ஆறு கர்நாடகத்திலிருந்து, தமிழகத்திற்கு வர முடியாதா?

நர்மதை, கிருஷ்ணா ஆறுகளுக்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களின் முடிவுகள், சண்டை இல்லாமல் செயல்படுகின்றன. காவிரித் தீர்ப்பாயத்தின் முடிவு மட்டும், செயல்படுத்தப் படாதது ஏன்? இந்திய அரசின் சட்டங்கள், இங்கு மட்டும் முடமாகிப் போனது ஏன்? நாம் தமிழ் மக்கள் என்பதாலா?

5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியை இழந்தோம். 16 இலட்சம் சம்பா சாகுபடியையும் இழக்க வேண்டுமா? 90 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அணைகளில் இருக்கும் பொழுது வெறும் 9000 கன அடி தண்ணீரைத் திறக்கச் சொன்னார் பிரதமர். அதையும் ஏற்கவில்லை கர்நாடகம், அடுத்து, காவிரிக் கண்காணிப்புக் குழு அதையும் குறைத்து, 6,800 கன அடி தண்ணீர் திறக்கச் சொன்னது. இதையும் ஏற்க மறுத்தது கர்நாடகம். கர்நாடகத்தை, என்ன செய்து விட்டது இந்திய அரசு? 

இனி வாதாடிப் பயன் இல்லை. போராடித்தான் காவிரி உரிமையை மீட்க வேண்டும். 

ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. வீதம் 40 நாட்களுக்குக் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டால்தான், சம்பா சாகுபடியைப் பாதுகாக்க முடியும். நாம் பிச்சை கேட்கவில்லை. சட்டப்படி நமக்குள்ள உரிமைத் தண்ணீரைக் கேட்கிறோம். 

அரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி கட்டளை தாக்கீது கர்நாடகத்திற்கு அனுப்பி 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும். 

இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 22 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் நடுவண் அரசு அலுவலகங்கள் முன் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நடத்துவதென 10.10.2012 அன்று குடந்தையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

காவிரி நம் தாய். அதை நாம் இழக்க முடியாது! 
கெஞ்சிக் கேட்டால் கிடைக்காது, கிளர்ச்சி செய்யாமல் வெல்லாது! 
மறியல் போராட்டத்திற்கு வாருங்கள் தமிழ் மக்களே! 

இங்ஙனம்,
பெ.மணியரசன்
 (ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு)
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger