தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது! தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை! பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது! தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! 

நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர் தலைமையிலான காவிரி மேற்பார்வைக் குழு, இன்று (19.09.2016), 21.09.2016 முதல் ஒரு நாளைக்கு ஒரு நொடிக்கு 3,000 கன அடி தண்ணீர் வீதம் 10 நாட்களுக்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டுமென்று முடிவு வழங்கியுள்ளது. இந்த மேற்பார்வைக் குழு கர்நாடகத்திற்கு அஞ்சி அம்மாநிலத்தின் மனம் நோகாமல் வழங்கிய தீர்ப்பு இது! 3,000 கன அடி தண்ணீர் சம்பா சாகுபடிக்கு சிறிதளவுகூட போதாது. இது ஒருதலைச்சார்பான தீர்ப்பு!

ஏனெனில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறைக் காலப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படையில், இப்பொழுது கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரில் தமிழ்நாட்டிற்குரிய விகித நீரை கணக்கிட்டு அந்த அடிப்படையில், ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று மேற்பார்வைக் குழுக் கூறியிருந்தால், அது சட்டப்படியான ஒரு முடிவாக இருக்கும். அவ்வாறான கணக்கை மேற்பார்வைக் குழு கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை!

காவிரி மேற்பார்வைக் குழு தன் சார்பில் ஒரு வல்லுநர் குழுவை கர்நாடகத்திற்கு அனுப்பி, அங்குள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற உண்மையை அறிந்து, அதை அடிப்படையாகக் கொண்டு, பற்றாக்குறைப் பகிர்வு விகிதப்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டிருக்க வேண்டும். காவிரி மேற்பார்வைக் குழு தனது கடமையில் தவறியிருக்கிறது!

தமிழ்நாடு அரசு உருப்படியாக வாதம் செய்கிறதா என்றால், அதுவும் இல்லை!
கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பாக்கித் தண்ணீர் 64 டி.எம்.சி. என்றும், அதைத் திறந்துவிட ஆணையிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், தமிழ்நாடு அரசு வாதிட்டிருந்தால் அது சரியான வாதமல்ல!

தற்போது, கர்நாடக அணைகளில் இருக்கின்ற தண்ணீரில் பற்றாக்குறைப் பகிர்வுத் திட்டப்படி எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தி வாதிட்டு, அதற்கு வலு சேர்க்கும் வகையில் கர்நாடகம் தர வேண்டிய பாக்கித் தண்ணீரின் அளவை கூறியிருந்தால், தமிழக அரசின் வாதம் வலுவாக இருந்திருக்கும்.

பொதுவாகவே கடந்த ஆகத்து 22-ஆம் நாள் முதல் இன்றுவரை, தமிழ்நாடு அரசு காவிரி வழக்கில் கடைபிடித்திருக்கும் வாத முறைகள் முன்னுக்குப்பின் முரண்பட்டும் முதன்மைப்படுத்த வேண்டிய தர்க்கத்தை முதன்மைப்படுத்தாமல் பின்னுக்குத் தள்ளியும் வந்திருப்பது தெரிகிறது. இவ்வழக்கு வாதங்கள் இராணுவ இரகசியங்கள் அல்ல. இவற்றை முழுமையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

கர்நாடகப் பொதுப்பணித்துறை தனது இணையதளத்தில், அம்மாநிலத்திலுள்ள காவிரி அணை நான்கிலும் 19.09.2016 அன்று 26.17 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளதாகக் குறைத்துக் காட்டியுள்ளது. இவ்வழக்கு 05.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, 51 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசுத் தரப்பு கூறியது. அதன்பிறகு, 12.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் 41 டி.எம்.சி. இருப்பதாகக் கூறியது. இப்போது, 26.17 டி.எம்.சி. இருப்பதாகக் கூறியுள்ளது. இவை அனைத்தும் தவறானத் தகவல்கள்! அவர்களின் பொய்க்கணக்குப்படியே பார்த்தால்கூட, கடந்த 14 நாட்களில் 25 டி.எம்.சி. தண்ணீர் எங்கே போனது?

நான்கு அணைகளிலும் உள்ள நீர் மட்டுமின்றி, 437 ஏரிகளை நீர்த் தேக்கங்களாக விரிவுபடுத்தி அவற்றில் சேமித்து வைத்துள்ள தண்ணீரையும் கர்நாடகத்தின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான், தமிழ்நாடு அரசு தனது பொதுப்பணித்துறை அதிகாரிகளை கர்நாடகத்திற்கு அனுப்பி அங்குள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீரை கணக்கெடுத்து அதை உச்ச நீதிமன்றத்திலும் காவிரி மேற்பார்வைக் குழுவிலும் தாக்கல் செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தது.

ஆனால், தமிழ்நாடு அரசு உழவர்களின் ஓலக்குரலை கண்டு கொள்ளவே இல்லை! சரியான முன் தயாரிப்பு இல்லாமல், இறுதித் தீர்ப்பில் மாத வாரியாக வழங்கப்பட்ட நீரின் அளவை மட்டும் கவனத்தில் வைத்துக் கொண்டு, இவ்வளவு பாக்கி – அவ்வளவு பாக்கி என்று சத்தற்ற வாதம் செய்து வருகின்றது.

நாளை (20.09.2016) உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு வரவுள்ளது. அதில், சரியான தர்க்கத்தை முன்வைத்து வாதாடி தமிழ்நாட்டு உரிமையை நிலை நாட்ட - சம்பாவிற்கு உரிய தண்ணீரைப் பெற தமிழ்நாடு அரசு முழுமூச்சாக முன் தயாரிப்புப் பணியில் இறங்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை சிறையில் அடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!



தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை
சிறையில் அடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்வினைகள் உருவாவதைத் தவிர்க்க முடியாது!



காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை! 


பெங்களுருவில் நேற்று (10.09.2016) தமிழ் இளைஞர் ஒருவர், கன்னட வெறியர்களால் அடித்து, மிதித்து, மண்டியிடச் செய்து, மன்னிப்புக் கேட்க வைத்து, கர்நாடகாவிற்கு “ஜே” போட சொல்லி, அத்துடன் நிறைவடையாமல் மேலும் மேலும் தாக்கி செத்த நாயை இழுப்பது போல், இழுத்துச் சென்று தெருவில் போட்டுவிட்டுப் போன கொடும் காட்சியை ஊடகங்களில் கண்டு உள்ளம் கொதிக்கிறது.

அந்தத் தமிழ் இளைஞன் செய்த குற்றம் என்ன? சட்டப்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீரை அடைத்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம், உச்ச நீதிமன்றம் ஒரு பிரிவு தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் திறக்க உத்தரவிட்டவுடன் அதைக் கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பை நடத்தியது. அதை முகநூலில் இந்தத் தமிழ் இளைஞர் விமர்சித்திருந்ததாகக் கூறுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்து பழிவாங்குவதற்கு அந்த இளைஞனை, பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் மேற்கண்டவாறு தாக்கி சித்திரவதை செய்து இழிவுபடுத்தியுள்ளார்கள்.

நாம் தொடர்ந்து சொல்லி வருவது, காவிரிச் சிக்கல் கன்னடர்களைப் பொறுத்தவரை தண்ணீர் சிக்கல்ல, அது இனச்சிக்கல் என்பதாகும். கன்னடர்களைப் பொறுத்தவரை தமிழ் இனத்தை பழிவாங்கும் சிக்கல்தான் காவிரிச் சிக்கல். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும், அனைத்து கட்சிகளும், உழவர் இயக்கங்களும் இந்த உண்மையை உணர வேண்டும்.

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை 1991 திசம்பரில், இந்திய அரசு அரசிதழில் வெளியிட்ட போது, அப்போதிருந்த பங்காரப்பாவின் காங்கிரசு ஆட்சி, அதைக் கண்டித்து கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தியது. அந்த முழு அடைப்பின்போது, கன்னட வெறியர்கள் காலங்காலமாக கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் அப்பாவித் தமிழர்கள் பலரை இனப்படுகொலை செய்தார்கள். தமிழர்களின் வீடுகளை, வணிக நிறுவனங்களை பல்லாயிரக்கணக்கில் எரித்தார்கள்; சூறையாடினார்கள். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். 2 இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள். எந்த வித ஆத்திரமூட்டலிலும் ஈடுபடாத கர்நாடகத் தமிழர்கள் அப்போது கன்னட இன வெறியர்கள் இவ்வாறு தாக்கப்பட்டார்கள்.

இப்பொழுது உச்ச நீதிமன்றம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, திறந்துவிட ஆணையிட்ட உடன், உடனே ஆத்திரமடைந்து மாநில அரசின் ஆதரவுடன் முழு அடைப்பு நடத்தி, தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினார்கள். அடுத்த கட்டமாகத் தமிழ் இளைஞரைத் தாக்கியுள்ளார்கள். அந்த இனவெறிக் கயவர்களை இதுவரை கர்நாடகக் காவல்துறை கைது செய்யவில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. மாறாக, தமிழர்களுக்கு எதிரான கன்னட இனவெறித் தாக்குதலை கர்நாடக அரசும், காவல்துறையும் மறைமுகமாக ஊக்குவிக்கின்றன.

தமிழ் இளைஞர் கொடூரமாகத் தாக்கி இழிவுபடுத்தப்பட்டக் காட்சியை தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் பார்த்த இலட்சக்கணக்கானத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இரத்தம் கொதித்துப் போய் உள்ளார்கள். இது 1991 திசம்பர் அல்ல! 2016 செப்டம்பர் என்பதை கன்னட இனவெறியர்களுக்கு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.

கர்நாடக அரசு அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கவில்லையென்றால், இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால். அதற்கான எதிர்வினைகள் தமிழ்நாட்டிலும் பீறிட்டுக் கிளம்பும். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்ய வேண்டிய நிலை தமிழ்நாட்டில் உருவாகும். எனவே, கர்நாடக அரசு உடனடியாக தமிழ் இளைஞர்களைத் தாக்கிய கயவர்களை உரியக் குற்றப்பிரிவின் கீழ் கைது செய்து, சிறையிலடைக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு அரசு, அண்டை மாநிலங்களில் தமிழினம் தாக்கப்படும் போது வேடிக்கைப் பார்க்கக் கூடாது. தமிழ் இளைஞனைத் தாக்கியக் கயவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு அரசு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள மக்களும், இயக்கங்களும் காவிரிச் சிக்கலில் தமிழின உரிமைச் சிக்கலாக உணர்ந்து, இன அடிப்படையில் ஒன்று திரள வேண்டும் என்ற உண்மையை இனியாவது உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து நடந்த முழு அடைப்பை ஆதரித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!


உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து நடந்த முழு அடைப்பை
ஆதரித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உச்சநீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் 
தோழர் பெ. மணியரசன் கேள்வி!


காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 05.09.2016-இல் கொடுத்த தீர்ப்பைக் கண்டித்து நேற்று (09.09.2016) கர்நாடகம் முழு அடைப்பு நடத்தியுள்ளது. இந்த முழு அடைப்பை ஆதரித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கை ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அத்துடன் அந்த முழு அடைப்புக்கு ஆதரவாக மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் முதலமைச்சர் சித்தராமையா விடுமுறை விட்டுள்ளார்.

மண்டியா மாவட்டத்தில் சாலைகளில் டயர் உள்ளிட்ட பல பொருட்களைப் போட்டு கொளுத்தி, நாள் முழுவதும் நெருப்பெறியச் செய்தார்கள். கிருஷ்ணராஜ சாகர் அணைக்குள் அத்துமீறிப் புகுந்து தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை தடுத்து நிறுத்த மதகுகளை மூடுவதற்கு முயன்றார்கள். தமிழ்நாடு பதிவெண் கொண்ட சரக்குந்துகள் கன்னட வெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட சட்ட விரோதக் காரியங்களில் ஈடுபட்ட யார் மீதும் கர்நாடகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த சட்ட விரோதக் காரியங்கள் அனைத்தும் ஊடகங்களில் காட்சிகளாக, செய்திகளாக வெளி வந்துள்ளன. இந்த சட்ட விரோதக் காரியங்களை மற்றும் உச்ச நீதிமன்றத்தைக் கண்டிக்கும் போராட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா ஆதரித்து அறிக்கை வெளியிட்டும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டோரை கைது செய்ய மறுத்தும் செயல்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து முதலமைச்சர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு வழக்குப் பதிவு செய்யாததன் காரணமென்ன என்ற கேள்வி தமிழ்நாட்டிலுள்ள ஏழரைக் கோடித் தமிழர்களின் நெஞ்சில் எழுந்துள்ளது.

சேதுக்கால்வாய் விரிவாக்கத் திட்டத்தை ஆதரித்து 2007ஆம் ஆண்டு நடந்த முழு அடைப்பை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ஆதரிக்கிறார் என்று காரணம் கூறி, அவரது ஆட்சி கலைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அப்பொழுது எச்சரித்ததையும் தமிழர்கள் நினைவில் வைத்துள்ளார்கள்.

தாமதமானாலும் இனியாவது உச்ச நீதிமன்றம் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger