தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


காவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி!

காவிரி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயலற்றுப் போனது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு கேள்வி!
காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் இன்று (12.07.2018) காலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி உழவர் அமைப்புத் தலைவர் திரு. தங்கராசு, மீத்தேன் எதிர்ப்பு முன்னனித் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் பொறியாளர் சு. பழனிராசன், தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. கலைச்செல்வம், மனிதநேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், காவிரி உரிமை மீட்புக் குழு தோழர் தனசேகர், தமிழக விவசாய சங்க மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலந்தாய்வுக்குப் பிறகு பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 02.07.2018 அன்று கூடிய காவிரி மேலாண்மை ஆணையமும், 05.07.2018 அன்று கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் இதுவரை செயலற்ற அமைப்புகளாக உள்ளன. உச்ச நீதிமன்றம் இறுதி செய்து அளித்த தீர்ப்பின்படி கர்நாடகத்தின் 4 அணைகள், தமிழ்நாட்டின் 3 அணைகள், கேரளாவின் ஓர் அணை ஆகியவற்றில் தண்ணீரைத் திறந்து மூட ஆணையிடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும்தான் இருக்கிறது. ஆனால் கடந்த சூன் 1ஆம் நாள் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை அந்தப் பணியைச் செய்யவில்லை!

சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டிய சூன், சூலை மாதங்களில் இந்த எட்டு அணைகளையும் ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் எட்டிக்கூட பார்க்கவில்லை. பெங்களூரில் தலைமையகம் வைத்து அங்கேயே தங்கிப் பணியாற்ற வேண்டிய காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரும், அதன் முழுநேர உறுப்பினர்களும் பெங்களூரில் தங்கவில்லை.

இவ்வாண்டு கர்நாடக அணைகளில் சூன் மாதம் முதல் தண்ணீர் அதிகமாக இருக்கிறது. சூன், சூலை மாதங்களுக்குரிய தண்ணீரை உரிய கால வரையறைப்படி ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் திறந்து விட்டிருந்தால் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி தொடங்கியிருக்க முடியும். 

கடந்த 05.07.2018 அன்று ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் நவீன்குமாரிடம், சூலை மாதத்திற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்கிறது” என்று மட்டும் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி அமர்த்த வேண்டிய முழு நேரப்பணி அதிகாரிகளை நியமிக்காமல் வேறொரு வேலையில் முழுநேரமாக உள்ளவர்களை கூடுதல் பணி செய்வோராக ஆணையத்திற்கும் ஒழுங்காற்றுக் குழுவிற்கும் இந்திய அரசு அமர்த்தியுள்ளது. நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்காக இவ்விரு அமைப்புகளையும் முடக்கி வைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 

மோடி அரசின் இந்த இனப்பாகுபாட்டு அணுகுமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துமாறு வலியுறுத்த வேண்டிய எடப்பாடி அரசு, காவிரி உரிமையை மீட்டு விட்டதாகப் போலி வெற்றி விழாக்களை நடத்தித் தமிழர்களை ஏமாற்றுகிறது; இனத்துரோகம் செய்கிறது. 

வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, கர்நாடக அணைகள் உடைந்து விடும் அபாயம் ஏற்பட்டதால் அந்த மிகை வெள்ள நீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டுள்ளது கர்நாடக அரசு. வெள்ள அபாய காலத்தில் அணைகளை நேரடியாகப் பார்வையிட்டு மிகை நீரைத் திறந்துவிட ஆணை இட வேண்டிய ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடகம் வராதது ஏன்? ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் கர்நாடக அரசிடம் தனது அதிகாரத்தைத் தாரை வார்த்து விட்டனவா?

கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் ஆவியாகப் போகும் நீரின் அளவு, நீர் இருப்பு, வருத்து, வெளியேற்றம் உள்ளிட்ட எல்லா புள்ளி விவரங்களையும் திரட்டித் தருமாறு, இந்த மாநிலங்களைக் கேட்டுக் கொண்டு 05.07.2018 அன்று கூட்டத்தில் படிவம் கொடுத்துள்ளது ஒழுங்காற்றுக் குழு. நிரப்பப்பட்ட படிவங்களை 16.07.2018க்குள் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

உண்மையில் இந்த விவரங்களை காவிரி ஒழுங்காற்றுக் குழுதான் தனது நேரடி ஆய்வில் திரட்ட வேண்டும். அதைச் செய்யாமல், ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள மாநிலங்களை இந்த விவரங்களைத் தரச் சொன்னது சரியா? நீதியா? இதில் உண்மை விவரங்கள் வரும் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? 

அரசிதழில் வெளியிடப்பட்ட 1991 இடைக்காலத் தீர்ப்பு, 2007 இறுதித் தீர்ப்பு, அவ்வப்போது வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் எதையும் இந்திய அரசு செயல்படுத்தியதில்லை. கர்நாடக அரசின் சட்டவிரோதச் செயல்களுக்கே தொடர்ந்து இந்திய ஆட்சியாளர்கள் துணை நின்றார்கள். 

இப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம், 18.05.2018 அன்று வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும் இந்திய அரசும், கர்நாடக அரசும் செயல்படுத்தப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. 

மிகை வெள்ளம் வரும் இந்தப் பருவத்தில் செயல்படாத மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் பருவமழை குறையும் காலத்தில் செயல்படுமா என்ற வினா எழுகிறது. தமிழ்நாடு அரசு இப்போதுகூட செயல்படவில்லை என்றால் எப்போது செயல்படும்?

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
புதுதில்லியில் நேற்று (05.07.2018) கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு, சூலை மாதத்திற்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரைத் திறந்து விட ஏற்பாடு எதுவும் செய்யாமல், புள்ளி விவரங்கள் தொடர்பாக நான்கு மாநிலங்களும் படிவம் நிரப்பச் சொல்லிவிட்டுக் கலைந்துள்ளது. இது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது!

கடந்த 02.07.2018 அன்று புதுதில்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் சூலை மாதத்திற்குரிய 31.25 ஆ.மி.க. தண்ணீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்ததே, அது என்னாயிற்று? வழக்கம்போல் இதுவும் ஏட்டுச் சுரைக்காய் தானா?

கர்நாடகத்தில் வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, அம்மாநில அணைகளில் சராசரியாக 90 விழுக்காட்டிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில்கூட, சூலை மாதத்திற்குரிய தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறக்காவிட்டால், காவிரி ஆணையம் – ஒழுங்காற்றுக் குழு என்பவையெல்லாம் பொம்மை அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது.

நேற்று நடந்த ஒழுங்காற்றுக் குழுவில் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் ஆவியாகப் போவது பற்றியும், நீர் இருப்பு, வருகின்ற தண்ணீர், மழைப்பொழிவு போன்றவை பற்றியும் புள்ளி விவரங்களை நான்கு மாநிலங்களும் நிரப்பித் தருவதற்கான படிவங்களை கொடுத்ததுதான் அக்கூட்டத்தின் ஒரே பணியாகத் தெரிகிறது.

இப்படிவங்களை சூலை 16க்குள் நான்கு மாநிலங்களும் ஒழுங்காற்றுக் குழுவுக்குத் தர வேண்டும் என்றும், அதன் அடுத்த கூட்டம் சூலை 19இல் நடக்கும் என்றும் அதன் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் சூலை மாதத்திற்குரிய தண்ணீர் திறந்து விடுவது பற்றி என்ன ஆணை பிறப்பித்துள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்து கொண்டிருக்கிறது” என்று மட்டும் விடையாகக் கூறினார்.

சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட்டால் இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய முடியும்!

காவிரியை மீட்டு விட்டதாக “வெற்றி” விழா கொண்டாடி வரும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த ஆணைப்படி கூடக் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற அக்கறை காட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு மற்றும் அவ்வப்போது வெளியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்த மறுத்ததுபோல்தான் மூன்று நீதிபதிகள் ஆயம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும், அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் 02.07.2018 அன்று வெளியிட்ட ஆணையையும் செயல்படுத்த இந்திய அரசு மறுக்கிறதா என்ற ஐயம் வலுவாக எழுகிறது.

நேற்று (06.07.2018) கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டுவோம் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன், கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட்டால், முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளன. இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு இந்திய அரசு கொடுக்கும் துணிச்சலில்தான் உருவாகின்றன.

தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி உடனடியாக சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger