தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 31.03.2019 முதல் “குடிநீருக்காக” என்று சொல்லி 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு முன்னர் “குடிநீருக்காக” 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கடந்த காலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக அதிகபட்சமாக 2,000 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள்.

இந்த 8,000 கன அடி தண்ணீர் - காவிரிப் பாசன வரம்பிற்கு உட்படாத சாகுபடி நிலங்களுக்கு இந்தக் கோடை காலத்தில் திருப்பி விடப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் இருக்கின்ற சேமிப்புத் தண்ணீரை விதிமுறைகளுக்குப் புறம்பாக திறந்துவிட்டு காலி செய்து விட்டால், குறுவை சாகுபடிக்கு நீர் சேமிப்பு இருக்காது!

வழக்கமாக, பருவமழை காலத்தில் மேட்டூரில் தேங்கியுள்ள மிச்ச நீரை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய தண்ணீரில் ஓரளவைப் பெற்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு வந்தது. கடந்த பருவமழை அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையில் மார்ச்சு இறுதி வாக்கில் 64 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது.

அந்த சேமிப்பைக் காலி செய்கின்ற வகையில், 8,000 கன அடி திறந்துவிட்டதைக் கண்டித்து, கடந்த 02.04.2019 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் தொலைக்காட்சி ஊடகத்தினரை சந்தித்து நானும், காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்களான ஐயனாபுரம் முருகேசன் அவர்களும், மணிமொழியன் அவர்களும் 8,000 கன அடி திறப்பதை நிறுத்த வேண்டும், 2,000 கன அடி திறந்துவிட்டாலே குடிநீருக்குப் போதும் என அறிக்கை கொடுத்தோம்.

அதன்பிறகு, 03.04.2019 முதல் மேட்டூரில் திறந்துவிடப்படும் அளவு 6,000 கன அடியாகக் குறைக்கப்பட்டாலும், இதுவும் அதிகமான வெளியேற்றம்தான். குறைக்கப்பட்ட அளவு போதாது! கிடுகிடுவென்று மேட்டூர் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்த விகிதத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்துவந்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இருக்குமா என்பது மட்டுமல்ல, கடும் கோடைக்காலத்தில் குடிநீருக்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகும்.

கடந்த 2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீரைத் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு ஏன் வலியுறுத்தவில்லை?

இதில் கடமை தவறிய தமிழ்நாடு அரசு, குறைந்தளவு இருக்கின்ற மேட்டூர் நீரையும் விதிகளுக்கு முரணாகத் திறந்து விரையமாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, வெளியேற்றும் நீரின் அளவை 2,000 கன அடிக்குள் வைக்குமாறும், மாத வாரியாக கர்நாடகத்திலிருந்து பெற வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிட மேலாண்மை ஆணையத்தைத் வலியுறுத்திப் பெறுமாறும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
கடந்த 30.03.2019 அன்று நாகப்பட்டினம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பரப்புரை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவதற்காக சட்டப் போராட்டம் நடத்திக் களைத்துப் போய் விட்டோம். எனவே, மாற்று ஏற்பாடுகளின் மூலம் பாசன நீர் கிடைக்கச் செய்ய முயன்று வருகிறோம். அந்த மாற்று ஏற்பாடுகளில் ஒன்று கோதாவரித் தண்ணீரைக் கொண்டு வருவது. இன்னொன்று, தமிழ்நாட்டில் அங்கங்கே தடுப்பணைகள் கட்டுவது” என்று கூறியிருக்கிறார்.

ஒருபக்கம், காவிரி உரிமையை மீட்டது அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சிதான் என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர், காவிரியை நம்பிப் பயனில்லை என்று இப்படி பேசியிருக்கிறார். ஒரு முதலமைச்சர் இப்படி பேசுவது, சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமையைக் காவு கொடுப்பதாக உள்ளது.

அடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரைக் கொண்டு வர முடியாத முதலமைச்சர் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து கோதாவரித் தண்ணீரை மட்டும் எப்படிக் கொண்டு வருவார்? ஆந்திரப்பிரதேச மாநிலம், கோதாவரித் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதா? அதற்கான ஒப்புதலை நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பெற்றிருக்கிறாரா? அல்லது முதலமைச்சர் எடப்பாடி பெற்றிருக்கிறாரா? ஆந்திரப்பிரதேச மாநிலம், ஒருபோதும் கோதாவரித் தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் தர அனுமதிக்காது!

காவிரி உரிமை மீட்பிலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டிலுள்ள துரோகிகளும் திட்டமிட்டு கங்கை நீரைக் கொண்டு வரப் போகிறோம் என்று நாற்பது ஆண்டுகளாக நாடகமாடினார்கள். அந்த நாடகம் மோசடி என்று அம்பலமான பிறகு, கோதாவரி நீரைக் கொண்டு வரப்போவதாக பா.ச.க. ஆட்சியாளர்களும், அண்ணா தி.மு.க. ஆட்சியாளர்களும் கூட்டுச் சேர்ந்து புதிய நாடகத்தை தயாரித்திருக்கிறார்கள்.

அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரித் தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெறுவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட வில்லை. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முழுநேரப் பணி உள்ளவர்களைக் கொண்ட அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், திட்டமிட்ட கெட்ட நோக்கத்தோடு பா.ச.க. நடுவண் அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக வேறு பணிகளில் முழுநேர அலுவலர்களாக உள்ளவர்களைக் கொண்டு, ஒப்புக்குக் காவிரி ஆணையம் அமைத்திருக்கிறது. அந்தக் காவிரி ஆணையம் செயல்படவே இல்லை!

2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி., ஏப்ரல் மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வருவதற்குக் காவிரி மேலாண்மை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! செயல்படாத அந்த காவிரி ஆணையத்தை செயல்பட வைத்திட அ.இ.அ.தி.மு.க. அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை!

அ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்தத் தேர்தல் பரப்புரையில் காவிரி நீர் பெற்றுத் தருவதை முக்கியப் பரப்புரையாக செய்யவே இல்லை! கர்நாடகத்தின் பொல்லாப்பு வேண்டாம் என்று உள்நோக்கத்தோடு அ.இ.அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் காவிரிச் சிக்கலைப் பேசாமல் ஒதுங்கிக் கொண்டதாகவே தெரிகிறது.

எனவே, தமிழர்கள் இந்தத் “தேர்தல் திருவிழா”வில் குழந்தையைப் பறிகொடுத்த தாயைப் போல் இல்லாமல், காவிரி உரிமை குறித்து இந்தக் கட்சிகள் பேசாததைக் கண்டிக்க வேண்டும்; போராட முன் வர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger