தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


“மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” - 10 நாள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம்!


“மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” காவிரி உரிமை மீட்புக் குழு - 10 நாள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம்! தொடங்குமிடம் – பூம்புகார், நிறைவடையும் இடம் – மேட்டூர் அணை

இன்று (12.10.2019) காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. இதில், காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவா திரு. க. செகதீசன், மனித நேய சனநாயகக் கட்சி பொறுப்பாளர் திரு. அகமது கபீர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர் பழ. இராசேந்திரன், இந்திய யூனியன் முசுலீம் லீக் திரு. செய்னுலாபுதீன், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழக மாநிலத் துணைச் செயலாளர் திரு. சி. குணசேகரன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. ச. கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு முன்னணிச் செயல்வீரர்கள் வெள்ளாம் பெரம்பூர் திரு. து. இரமேசு, அல்லூர் திரு. கரிகாலன், திரு. தனசேகர், திரு. பார்த்திபன், திருவாரூர் திரு. சூனா செந்தில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் – 1 : “மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” 10 நாள் மக்கள் எழுச்சிப் பயணம்

தமிழ்நாட்டுக்கு வரும் காவிரியின் குறுக்கே கர்நாடகம் திட்டமிட்டுள்ள மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க தமிழ் மக்களிடம் எழுச்சியை உருவாக்கும் பொருட்டு - “மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” என்ற தலைப்பில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வரும் 2019 நவம்பர் 11ஆம் நாள் தொடங்கி 20ஆம் நாள் வரை – பத்து நாட்கள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம் நடத்துவதென காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானித்துள்ளது.

காவிரி கடலில் கலக்கும் நாகை மாவட்டம் – பூம்புகாரில் தொடங்கி, பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாகப் பயணித்து, சேலம் மாவட்டம் - மேட்டூர் அணையில் இப்பரப்புரைப் பயணம் நிறைவடைகிறது.

இப்பரப்புரைப் பயணத்தின்போது, வழியெங்கும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் தமிழ் மக்களும், உழவர் பெருமக்களும் காவிரி உரிமை மீட்புக் குழுவின் இந்த எழுச்சிப் பரப்புரைக்குப் பேராதரவு தந்து பங்கேற்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு அன்புரிமையுடன் அழைக்கிறது!

முதல்வருக்கு வேண்டுகோள் - "மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க தமிழ்நாடு அரசு மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும்!"

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்ததைப் போலவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் (16.02.2018) செயல்படுத்த மறுக்கிறது கர்நாடக அரசு. அதற்கான ஏற்பாடுதான் மேக்கேதாட்டு மிச்ச நீர் அணை!

மிச்ச நீர் என்பது கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி, அர்க்காவதி அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ள நீர் ஆகும். இந்த வெள்ள நீர் இப்போது நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து விடுகிறது. இதைத் தடுத்து முழுமையாகக் கர்நாடகம் புதிய பாசனத்திற்கும் குடிநீர், தொழிற்சாலைத் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டம்தான் மேக்கேதாட்டு மிச்ச நீர் திட்டம்!

கிருஷ்ணராஜ சாகர், கபினி, அர்க்காவதி அணைகளின் வெள்ள நீர் வந்து கலக்குமிடம் கர்நாடகத்தின் ராம் நகர் மாவட்டத்தின் கனகபுரம் வட்டத்தின் சங்கமம் என்ற இடமாகும். அதிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேக்கேதாட்டு (ஆடு தாண்டு காவிரி). இரு பக்கமும் 1,000 அடி உயர மலைகளுக்குக் கீழே காவிரி ஓடுகிறது. அந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டு எல்லை 3.9 கிலோ மீட்டர்தான்!

இந்த மேக்கேதாட்டு அணையின் திட்டமிட்ட தண்ணீர் கொள்ளளவு 67.16 ஆ.மி.க. (T.M.C.) இப்போது கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஏமாவதி, கபினி, ஏரங்கி, அர்க்காவதி அணைகளின் மொத்தக் கொள்ளளவு நீர் 114 ஆ.மி.க. (T.M.C.). ஆனால் இவற்றிலிருந்து வெளியேறும் மிச்ச நீரைத் தேக்கும் மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவோ 67.16 ஆ.மி.க.!

தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை தட்டுப்பாடில்லாமல், மாதாமாதம் திறந்துவிடத்தான் மேக்கேத் தாட்டு அணை கட்டுகிறோம் என்று கர்நாடகம் கூறுவது நூறு விழுக்காடுப் பொய்! கடந்த காலங்களில் இப்படிச் சொல்லித்தான் ஏமாவதி, ஏரங்கி, கபினி, அர்க்காவதி, சுவர்ணவதி அணைகளைக் கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டுத் தண்ணீரை அபகரித்துக் கொண்டது. மேக்கேத்தாட்டு அணை மட்டும் கட்டப்பட்டுவிட்டால், எப்படிப்பட்ட பெரிய வெள்ளமானாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது.

மிகை வெள்ளத்திலிருந்து தனது அணைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக – எப்பொழுதாவது வெளியேற்றும் நீர் கூட தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்குப் போய் விடக்கூடாது என்பதற்காகவே கட்டப்படும் தடுப்பு நீர்த்தேக்கம்தான் மேக்கேதாட்டு அணை!

உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பு 15 ஆண்டுகளுக்குள் மாற்றப்பட முடியாது. அத்தீர்ப்பின் பிரிவு XI பின்வருமாறு கூறுகிறது :

“கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீர் வரத்தைப் பாதிக்கும் வகையில் மேல் பாசன மாநிலம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ஆனால், தொடர்புடைய மாநிலங்கள், தங்களுக்குள் கலந்து பேசி, ஒத்த கருத்து அடிப்படையில் தண்ணீர் திறந்து விடும் முறைகளில் மாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு மாற்றிக் கொள்ள காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அனுமதி வேண்டும்”.

இதன் பொருள், புதிய நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ளலாம் என்பதல்ல! மாதவாரியாகத் திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை தங்களுக்குள் கலந்து பேசி ஒரு மாதத்தில் கூட்டியோ, குறைத்தோ திறந்துவிட்டு அடுத்த மாதங்களில் அதை ஈடுகட்டிச் சரி செய்து கொள்ளலாம் என்பதே இதன் பொருள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விதி XVIII பின்வருமாறு கூறுகிறது :
“தீர்ப்பாயத் தீர்ப்பிற்கு முரண்பாடு இல்லாமல், ஒரு மாநிலம் தனது எல்லைக்குள் தண்ணீர்ப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும் உரிமை உண்டு”.

இதன் பொருள் என்ன? உச்ச நீதிமன்றம் கர்நாடகத்திற்கு ஒதுக்கியுள்ள 284.75 ஆ.மி.க. தண்ணீரை – தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ள 177.25 ஆ.மி.க. தண்ணீரை, அந்தந்த மாநிலமும் தனது வசதிற்கேற்ப, தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இதன் பொருள். கர்நாடகம் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 284.75 ஆ.மி.க. தண்ணீரை எந்தெந்த பகுதிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இதன்படி முடிவு செய்து கொள்ளலாம்! ஆனால், கர்நாடகம் தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் 67.16 ஆ.மி.க. கொள்ளளவில் புதிய நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ளலாம் என்பது இதன் பொருள் அல்ல.

மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கோரி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கர்நாடக அரசு மேற்கண்ட XVIII ஆவது விதியைத் தவறாக மேற்கோள் காட்டி வாதம் செய்துள்ளது.

கர்நாடகத்திடமும், இந்திய அரசிடமும் இந்த சட்ட வாதங்களைப் பேசிப் பயனில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் கடந்தகாலப் பட்டறிவு! ஏமாவதி, ஏரங்கி, கபினி அணைகளைத் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்டக் கூடாது என்று தமிழ்நாடு அரசு 1968லிருந்து கர்நாடக அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிர்ப்புத் தெரிவித்துக் கடிதங்கள் எழுதியது; உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது.

ஆனால் கர்நாடகம் அந்த சட்ட விரோத அணைகளைக் கட்டி முடித்திட, இந்திய அரசு கொல்லைப் புற வழியாக அனுமதித்தது. மேக்கேதாட்டு அணையும் இது போல் கட்டப்படாமல் தடுக்க வேண்டுமானால், “இந்திய ஆட்சியாளர்க்குக் கடிதம் கொடுத்தேன், உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன்” என்று முதலமைச்சர் பட்டியல் அடுக்கினால் போதாது. ஏமாந்து விடுவோம்.

“இந்திய அரசே, மேக்கேதாட்டு அணை முயற்சியைத் தடுத்திடு; தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்க, கர்நாடகத்திற்கு துணை போகாதே!” என்று வெளிப்படையாக இந்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து அரசியல் அழுத்தம் தர வேண்டும். இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாட்டின் மக்கள் முழக்கமாக மாற்றிட குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரையுள்ள மக்கள் “காவிரி எழுச்சி நாள்” கடைபிடிக்கத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்.

கர்நாடகம் ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய சட்டவிரோத அணைகள் கட்டிய போது, அன்றைய ஆளுங்கட்சியான தி.மு.க. அன்றைய இந்திய ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசுடன் கூட்டணியில்தான் இருந்தது; தி.மு.க. ஆட்சி, இந்த அணைகள் கட்ட எதிர்ப்புத் தெரிவித்தது என்றாலும், அணை கட்ட நடுவண் அரசு அனுமதித்தது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும். பா.ச.க.வுடன் அ.இ.அ.தி.மு.க. வைத்திருக்கும் கூட்டணியின் வரம்பை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேக்கேத்தாட்டு அணையைத் தடுத்து, தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு செயல்பட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 2 : 21 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்க!

காவிரிப்படுகை மாவட்டங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பல்வேறு துன்பங்களுக்கிடையே நம் உழவர்கள் குறுவை சாகுபடி செய்திருக்கிறார்கள். அறுவடைக்குப் பின் அந்த நெல்லை விற்பதற்கு வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 விழுக்காட்டிற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் வாங்க மறுக்கிறார்கள். இதனால் அங்கங்கே நெல் கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. நெல்லுக்கு சேதாரம் ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் 21 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்திருக்கிறது. இப்பொழுதும் அதுபோல் 21 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்யுமாறு தமிழ்நாடு அரசு – நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்றும், கொள்முதல் நிலையம் திறக்கப்படாத ஊர்களில் உடனடியாகத் திறக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 3 : பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பலன்கள் கிடைக்காமல் தவிப்பு

கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான வேளாண் பயிர்க் காப்புத் திட்டத்தில், காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் பல்வேறு கிராமங்களில் உழவர்கள் பெருந்தொல்லைக்கு ஆளாகி உள்ளார்கள். பல கிராமங்கள் விடுபட்டுப் போயுள்ளன. ஒரே கிராமத்தில் ஒரு பகுதி விவசாயிகள் விடுபட்டுள்ளனர்.
ஒரே கிராமத்தில் இழப்பீட்டுத் தொகை நிர்ணயிப்பதிலும் வேறுபாடு கடைபிடிக்கப்பட்டு சிக்கல்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு அரசு, உடனடியாக இதில் தலையிட்டு பயிர்க் காப்பீட்டுத் திட்ட நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் செய்து, எல்லா கிராமங்களுக்கும், எல்லா உழவர்களுக்கும் பயிர்க் காப்பீட்டு இழப்பீடு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழுக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 4 : உழவர்களுக்கு வட்டியில்லா வேளாண் கடன்

வேளாண் விளை பொருட்களுக்கு உரிய இலாப விலை கொடுக்காமல், அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலையைத்தான் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் வழங்கியிருக்கிறது. இதனால், உழவர்கள் தொடர்ந்து கடனாளி ஆவதும், உயிரை மாய்த்துக் கொள்வதும் நடந்து வருகிறது.

இப்பின்னணியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு வங்கிகள் உழவர்களுக்கு வட்டியில்லா வேளாண் கடன் கொடுக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு அரசு இந்திய அரசை வலியுறுத்தி, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா வேளாண் கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 90251 62216, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

மேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

மேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் அறிக்கை!
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டி, 66 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் தேக்கும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை கேட்டிருந்தது. கர்நாடக அரசு அனுப்பிய அவ்வறிக்கையை நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒரு வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்தது.

அந்த வல்லுநர் குழு, கர்நாடக அரசு குறிப்பிடும் இடங்களில் மேக்கேத்தாட்டு அணை கட்டினால் 4,996 ஹெக்டேருக்கு (12,345 ஏக்கர்) மேல் வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், பல்வேறு உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு அழிவு ஏற்படும் என்றும், மற்றும் சில முக்கியக் காரணங்களைக் கூறியும், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைகளை ஏற்க வேண்டியதில்லை, மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி தர தேவையில்லை என அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.

மேக்கேத்தாட்டு அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்து கொடுத்த விவரங்களை இந்த வல்லுநர் குழு கணக்கிலெடுத்து ஆராய்ந்ததையும் அப்பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்கள். மேக்கேத்தாட்டு அணை கட்ட மறுப்புத் தெரிவித்து நடுவண் சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சக வல்லுநர் குழு அளித்துள்ள இந்த அறிக்கையை காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் பாராட்டுகிறேன்.

அதேவேளை அப்பரிந்துரையில், மேக்கேத்தாட்டு அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளையெல்லாம் சொல்லிவிட்டு தமிழ்நாடும், கர்நாடகமும் கூடிப் பேசி இணக்கமான முடிவுக்கு வர வேண்டும் எனக் கூறியிருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

காவிரியின் குறுக்கு மேக்கேத்தாட்டில் அணை கட்டினால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது என்ற உண்மையை வெளிப்படுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேக்கேத்தாட்டில் மறியல் செய்வதற்காக கடந்த 07.03.2015 அன்று கர்நாடக எல்லையான தேன்கனிக்கோட்டை யிலிருந்து ஐயாயிரம் உழவர்களும், உணர்வாளர்களும் பேரணியாகப் புறப்பட்டோம். அப்போது, காவல்துறை எங்களை தமிழ்நாடு எல்லையில் மறித்துக் கைது செய்து பள்ளிக்கூடங்களிலும், மண்டபங்களிலும் வைத்திருந்தார்கள். மேக்கேத்தாட்டு அணை கட்டக் கூடாதென்று தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்களும், கட்சிகளும் போராடி வந்துள்ளன.

இந்த நிலையில், மேற்படி வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. இந்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நடுவண் அரசும் அப்படியே ஏற்று கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டிலோ மற்ற இடங்களிலோ அணை கட்ட கூடாதென நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, இத்துடன் ஓய்ந்து விடாமல் தொடர்ந்து விழிப்பாக இருந்து காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட மத்திய அரசு நிரந்தரத் தடையாணை விதிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை!

புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை!


புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.


ஐட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்த வல்லுனர்களின் கருத்துக்கள் அடங்கிய ஆய்வறிக்கையையும் புதுச்சேரி முதல்வரிடம் ஐயா பெ மணியரசன் அவர்கள் நேரில் வழங்கி விளக்கினார்.


காவிரி உரிமை மீட்புக்குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா. வேல்சாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி, நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கத் தலைவர் தோழர் த. இரமேசு, இலக்கியப் போக்கில் இலக்கிய மன்றத் தலைவர் திரு பராங்குசம், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் கௌரி, தமிழர் களம் தலைவர் தோழர் கோ. அழகர், உலகத் தமிழ் கழகம் புதுச்சேரி தலைவர் திரு. கோ. தமிழலகன், நா.த.க. அரியாங்குப்பம் செயலாளர் திரு. செ. இளங்கோவன், உ.த.க. திரு. புதுவை வேலா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உடனிருந்தனர்.




செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 31.03.2019 முதல் “குடிநீருக்காக” என்று சொல்லி 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு முன்னர் “குடிநீருக்காக” 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கடந்த காலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக அதிகபட்சமாக 2,000 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள்.

இந்த 8,000 கன அடி தண்ணீர் - காவிரிப் பாசன வரம்பிற்கு உட்படாத சாகுபடி நிலங்களுக்கு இந்தக் கோடை காலத்தில் திருப்பி விடப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் இருக்கின்ற சேமிப்புத் தண்ணீரை விதிமுறைகளுக்குப் புறம்பாக திறந்துவிட்டு காலி செய்து விட்டால், குறுவை சாகுபடிக்கு நீர் சேமிப்பு இருக்காது!

வழக்கமாக, பருவமழை காலத்தில் மேட்டூரில் தேங்கியுள்ள மிச்ச நீரை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய தண்ணீரில் ஓரளவைப் பெற்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு வந்தது. கடந்த பருவமழை அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையில் மார்ச்சு இறுதி வாக்கில் 64 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது.

அந்த சேமிப்பைக் காலி செய்கின்ற வகையில், 8,000 கன அடி திறந்துவிட்டதைக் கண்டித்து, கடந்த 02.04.2019 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் தொலைக்காட்சி ஊடகத்தினரை சந்தித்து நானும், காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்களான ஐயனாபுரம் முருகேசன் அவர்களும், மணிமொழியன் அவர்களும் 8,000 கன அடி திறப்பதை நிறுத்த வேண்டும், 2,000 கன அடி திறந்துவிட்டாலே குடிநீருக்குப் போதும் என அறிக்கை கொடுத்தோம்.

அதன்பிறகு, 03.04.2019 முதல் மேட்டூரில் திறந்துவிடப்படும் அளவு 6,000 கன அடியாகக் குறைக்கப்பட்டாலும், இதுவும் அதிகமான வெளியேற்றம்தான். குறைக்கப்பட்ட அளவு போதாது! கிடுகிடுவென்று மேட்டூர் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்த விகிதத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்துவந்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இருக்குமா என்பது மட்டுமல்ல, கடும் கோடைக்காலத்தில் குடிநீருக்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகும்.

கடந்த 2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீரைத் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு ஏன் வலியுறுத்தவில்லை?

இதில் கடமை தவறிய தமிழ்நாடு அரசு, குறைந்தளவு இருக்கின்ற மேட்டூர் நீரையும் விதிகளுக்கு முரணாகத் திறந்து விரையமாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, வெளியேற்றும் நீரின் அளவை 2,000 கன அடிக்குள் வைக்குமாறும், மாத வாரியாக கர்நாடகத்திலிருந்து பெற வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிட மேலாண்மை ஆணையத்தைத் வலியுறுத்திப் பெறுமாறும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
கடந்த 30.03.2019 அன்று நாகப்பட்டினம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பரப்புரை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவதற்காக சட்டப் போராட்டம் நடத்திக் களைத்துப் போய் விட்டோம். எனவே, மாற்று ஏற்பாடுகளின் மூலம் பாசன நீர் கிடைக்கச் செய்ய முயன்று வருகிறோம். அந்த மாற்று ஏற்பாடுகளில் ஒன்று கோதாவரித் தண்ணீரைக் கொண்டு வருவது. இன்னொன்று, தமிழ்நாட்டில் அங்கங்கே தடுப்பணைகள் கட்டுவது” என்று கூறியிருக்கிறார்.

ஒருபக்கம், காவிரி உரிமையை மீட்டது அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சிதான் என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர், காவிரியை நம்பிப் பயனில்லை என்று இப்படி பேசியிருக்கிறார். ஒரு முதலமைச்சர் இப்படி பேசுவது, சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமையைக் காவு கொடுப்பதாக உள்ளது.

அடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரைக் கொண்டு வர முடியாத முதலமைச்சர் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து கோதாவரித் தண்ணீரை மட்டும் எப்படிக் கொண்டு வருவார்? ஆந்திரப்பிரதேச மாநிலம், கோதாவரித் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதா? அதற்கான ஒப்புதலை நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பெற்றிருக்கிறாரா? அல்லது முதலமைச்சர் எடப்பாடி பெற்றிருக்கிறாரா? ஆந்திரப்பிரதேச மாநிலம், ஒருபோதும் கோதாவரித் தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் தர அனுமதிக்காது!

காவிரி உரிமை மீட்பிலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டிலுள்ள துரோகிகளும் திட்டமிட்டு கங்கை நீரைக் கொண்டு வரப் போகிறோம் என்று நாற்பது ஆண்டுகளாக நாடகமாடினார்கள். அந்த நாடகம் மோசடி என்று அம்பலமான பிறகு, கோதாவரி நீரைக் கொண்டு வரப்போவதாக பா.ச.க. ஆட்சியாளர்களும், அண்ணா தி.மு.க. ஆட்சியாளர்களும் கூட்டுச் சேர்ந்து புதிய நாடகத்தை தயாரித்திருக்கிறார்கள்.

அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரித் தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெறுவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட வில்லை. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முழுநேரப் பணி உள்ளவர்களைக் கொண்ட அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், திட்டமிட்ட கெட்ட நோக்கத்தோடு பா.ச.க. நடுவண் அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக வேறு பணிகளில் முழுநேர அலுவலர்களாக உள்ளவர்களைக் கொண்டு, ஒப்புக்குக் காவிரி ஆணையம் அமைத்திருக்கிறது. அந்தக் காவிரி ஆணையம் செயல்படவே இல்லை!

2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி., ஏப்ரல் மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வருவதற்குக் காவிரி மேலாண்மை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! செயல்படாத அந்த காவிரி ஆணையத்தை செயல்பட வைத்திட அ.இ.அ.தி.மு.க. அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை!

அ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்தத் தேர்தல் பரப்புரையில் காவிரி நீர் பெற்றுத் தருவதை முக்கியப் பரப்புரையாக செய்யவே இல்லை! கர்நாடகத்தின் பொல்லாப்பு வேண்டாம் என்று உள்நோக்கத்தோடு அ.இ.அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் காவிரிச் சிக்கலைப் பேசாமல் ஒதுங்கிக் கொண்டதாகவே தெரிகிறது.

எனவே, தமிழர்கள் இந்தத் “தேர்தல் திருவிழா”வில் குழந்தையைப் பறிகொடுத்த தாயைப் போல் இல்லாமல், காவிரி உரிமை குறித்து இந்தக் கட்சிகள் பேசாததைக் கண்டிக்க வேண்டும்; போராட முன் வர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

காவிரி மேலாண்மை ஆணையம் உயிரோடு இருக்கிறதா? உங்களுடன் உரையாடல் 2019 பிப்ரவரி – மார்ச்சு. காவிரி உரிமை மீட்புக் குழு.

காவிரி மேலாண்மை ஆணையம் உயிரோடு இருக்கிறதா? உங்களுடன் உரையாடல் 2019 பிப்ரவரி – மார்ச்சு. காவிரி உரிமை மீட்புக் குழு. 


காவிரி ஆணையம் 01.06.2018 அன்று அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஒரு தடவை கூட ஆணை இடவில்லை. கடந்த ஆண்டின் (2018) வெள்ளக் காலத்தில்கூட கள ஆய்வுக்கு ஆணையம் வரவில்லை.

கடலில் போய் கலந்த வெள்ள நீரை - தமிழ்நாட்டிற்குத் தந்துவிட்டதாகக் கர்நாடகம் சூதாகச் சொல்கிறது. தேக்க முடியாத அந்த மிகை நீர் கணக்கில் வராது என்ற உண்மையைக் கூட ஆணையம் உரைக்கவில்லை. கடந்த 2018 டிசம்பரிலிருந்து மாதவாரியாகத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய காவிரி நீரைக் கர்நாடகம் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்துக் கொண்டுள்ளது. டிசம்பர் - 7.3 ஆ.மி.க., சனவரி - 3 ஆ.மி.க., பிப்ரவரி - 2.3 ஆ.மி.க., மார்ச் - 2.3 ஆ.மி.க. - ஆக மொத்தம் 15 ஆ.மி.க. (TMC) தண்ணீர் கர்நாடகம் திறந்து விட வேண்டும். அந்நீரைத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு ஆணையம் ஆணையிட வேண்டும். அந்த நீர் வந்தால் குறுவை சாகுபடி செய்யலாம்.

அவ்வாறு ஆணையிடுமாறு ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்காததன் மர்மம் என்ன?

ஓய்வு நேர ஒய்யார ஆணையம்
---------------------------------------------------
காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை முழுநேர அதிகார அமைப்புகள் என்பதே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! ஆனால் வேறு பணிகளில் முழுநேரமாகச் செயல்படும் அதிகாரிகளின் ஓய்வு நேரப் பணியாக அவ்விரு அமைப்புகளையும் ஒப்புக்கு அமைத்துள்ளது பா.ச.க. நடுவண் ஆட்சி. இவை வெறும் ஒய்யார அமைப்புகள்!

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் போலி வெற்றி விழா 
----------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிரான இந்திய அரசின் இந்த இனப்பாகுபாட்டு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்துமாறு வலியுறுத்தி, சட்டப் போராட்டமும் அரசியல் அழுத்தப் போராட்டமும் நடத்த வேண்டிய தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், போலியாகக் காவிரி வெற்றி விழா கொண்டாடித் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்பினார்கள்; தமிழ்நாட்டு உரிமையைப் பலியிட்டு அரசியல் ஆதாயம் தேடினார்கள்.

காவிரிச் சமவெளியைப் பாலைவனம் ஆக்கும் திட்டம்
-------------------------------------------------------------------------------------
காவிரிச் சமவெளியில் எண்ணெய், எரிவளி, மீத்தேன், நிலக்கரி உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுத்து விற்று இந்திய அரசு பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்காக ஓ.என்.ஜி.சி. மற்றும் ஏகபோக முதலாளிகளின் கூட்டுக் கொள்ளையை அனுமதிக்க வேண்டும். டெல்டாவின் நன்செய் நிலங்களும், நிலத்தடி நீரும் நஞ்சாக வேண்டும்; காவிரிப்படுகை இரசாயனப் பொட்டல் தரிசாக வேண்டும்; அவ்வாறு செய்வதற்குக் காவிரி நீர் வராமல் தடுக்க வேண்டும். அதன்பிறகு நிலங்களைவிட்டு உழவர்கள் ஓடி விடுவார்கள் என்பதே இந்திய அரசின் திட்டம்!

“காவிரியை மற; கோதாவரியை நினை!”
----------------------------------------------------------------
கோதாவரியிலிருந்து 200 ஆ.மி.க. (TMC) தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வரப்போகிறது என்று இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் ஒருசேரக் குடுகுடுப்பை அடிக்கிறார்கள். இதன் உட்பொருள் என்ன? காவிரியை மற; கோதாவரிக் கானல் நீரை நினை என்பதாகும்.

கங்கை நீரைக் கொண்டு வரப் போவதாகக் கதையளத்தவர்கள் - இப்போது கோதாவரி நீரைக் கொண்டு வரப் போவதாகக் கூறுகிறார்கள். ஆந்திர அரசுடன் செய்து கொண்ட சென்னைக் குடிநீர் ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நீர் சென்னைக்கு 12 ஆ.மி.க. எந்த ஆண்டாவது வந்ததுண்டா? இல்லை! கோதாவரி நீர் தமிழ்நாட்டிற்கு வர ஆந்திரப்பிரதேசம் ஒருபோதும் அனுமதிக்காது!

மேக்கேதாட்டில் அணை
-------------------------------------- 
எப்போதாவது வெள்ளப் பெருக்கெடுத்து மிகை நீர் மேட்டூர் அணைக்கு வருவதைப் பார்த்து, வயிறு எரிந்த கர்நாடகம், மேக்கேதாட்டில் 70 ஆ.மி.க. (TMC) கொள்ளளவில் நீர்த்தேக்கம் கட்டத் திட்டமிட்டது. ஒன்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்தை இந்திய அரசு அனுமதித்துள்ளது. அது கட்டப்பட்டால், ஒரு சொட்டுக் காவிரி நீர் கூடக் கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு வராது.

பா.ச.க.வும் காங்கிரசும் இரட்டையர்கள்
--------------------------------------------------------------
இந்திய அரசிலும் கர்நாடக அரசிலும் காங்கிரசும், பா.ச.க.வும் மாறிமாறி ஆட்சி செய்கின்றன. இரு கட்சிகளும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொள்கின்றன. ஆனால் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தரக் கூடாது என்பதில் அவை ஒன்று சேர்ந்து கொள்கின்றன. இந்த பா.ச.க. - காங்கிரசு இரட்டையர்களோடுதான் தமிழ்நாட்டுக் கட்சிகள் கூட்டணி சேர்ந்து கொள்கின்றன. தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கோ பதவிதான் முக்கியம், காவிரி அல்ல!

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகப் பருவமழை குறைந்து கொண்டே வருகிறது. குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் கீழே போய்க் கொண்டே உள்ளது. தமிழ்நாடு - புதுவை மாநிலங்களின் 21 மாவட்டங்களுக்குக் குடிநீர் காவிரி நீர்; பன்னிரண்டு மாவட்டங்களில் 28 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசன நீர் காவிரி நீர்!

மக்கள் போராடினால் வாழலாம்
---------------------------------------------------
காவிரி நீர்ச் சிக்கல் பாசன மாவட்டங்களின் தண்ணீர்ச் சிக்கல் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் உயிர்ச்சிக்கல்! இந்த உண்மையை உணர்ந்து குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை தமிழ் மக்கள் அறப்போர் நடத்த வேண்டும். எந்த வகை வன்முறைக்கும் இடங்கொடுக்காத வகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட காவிரி உரிமை மீட்புப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய காவிரி உரிமை மீட்புக் குழு உங்களை உரிமையுடன் மீண்டும் அழைக்கிறது! அடுத்தகட்ட அறப்போராட்டத்திற்குத் திட்டமிடுவோம்!

இந்திய அரசே!
-------------------------
1. தன்னதிகாரம் கொண்ட - முழுநேர காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனே அமைத்திடு!

2. 2018 திசம்பரிலிருந்து சனவரி, பிப்ரவரி, மார்ச்சு ஆகிய மாதங்களுக்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட 15 ஆ.மி.க. வேண்டிய காவிரி நீரை உடனே திறந்துவிட அரசமைப்புச் சட்ட உறுப்பு - 355இன் கீழ் ஆணையிடு!

3. மேக்கேதாட்டு அணைக்குக் கொடுத்த அனுமதியை இரத்து செய்!

4. காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடச் செய்யும் வகையில், இச்சமவெளியில் எண்ணெய், எரிவளி, மீத்தேன், நிலக்கரி உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுக்கத் தடை விதி!

தமிழ்நாடு அரசே!
----------------------------
1. உச்ச நீதிமன்றக் காவிரித் தீர்ப்பை இந்திய அரசு செயல்படுத்தாத குற்றத்திற்குத் தண்டனை வழங்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடு!

2. இந்திய அரசையும் கர்நாடக அரசையும் கண்டித்து அனைத்துக் கட்சி, அனைத்து உழவர் அமைப்புகள் மற்றும் அனைத்து மக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து காவிரி உரிமை மீட்க தமிழ்நாடு தழுவிய அறப்போராட்டங்கள் நடத்திட ஏற்பாடு செய்! இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடு!

3. காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு. மீத்தேன் எடுப்பதைத் தடுக்கத் தமிழ்நாடு அரசு 08.10.2015 அன்று போட்ட அரசாணை எண் 186ஐப் பின்பற்றி, ஐட்ரோகார்பன் எடுக்கத் தடை விதித்து புதிய அவசரச் சட்டம் இயற்று!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

தமிழ்நாடு அரசே, ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணை போகாதே! பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோரை விடுதலை செய்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாடு அரசே, ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணை போகாதே! பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோரை விடுதலை செய்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
கதிராமங்கலத்தில், துர்க்கை அம்மன் கோயில் அருகே உள்ள எண்ணெய்க் குழாயில் “பராமரிப்புப் பணி” பார்க்க வருவதாகச் சொல்லிக் கொண்டு, நேற்று (01.02.2019)இந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகத்தின் (ஓ.என்.ஜி.சி.) ஊர்திகளும், ஊழியர்களும் காவல்துறையினர் புடைசூழ ஊருக்குள் வந்தபோது, மக்களுக்கு பழையபடி பீதி ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளாக ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றக் கோரி ஊர் மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள். காவல்துறையின் அடக்குமுறைகளுக்கும், சிறை அடைப்புகளுக்கும் அடிக்கடி உள்ளாகி அச்சத்தில் உள்ளார்கள்.

கதிராமங்கலத்தில் எண்ணெய் – எரிவளிக் குழாய்கள் புதைக்கப்பட்டு, ஓ.என்.ஜி.சி. பயன்படுத்திய வேதிப்பொருட்களால் நிலத்தடி நீர் மாசுபட்டு, குடிநீருக்கும், பாசனத்திற்கும் தகுதியில்லாததாக மாறியிருக்கிறது. குழாய்கள் அவ்வப்போது வெடித்து தீப்பிடித்தும், வெள்ளம்போல் எண்ணெய் வழிந்தோடியும் ஏற்கெனவே பாதிப்புகள் உண்டாகியிருக்கின்றன. இந்நிலையில், மீத்தேன் – நிலக்கரி போன்றவற்றை எடுக்க புதிய குழாய்கள் இறக்க ஓ.என்.ஜி.சி. பல இடங்களில் முயன்று வருகிறது. இதற்கு “ஐட்ரோகார்பன்” என்று மாறுவேடப் பெயர் சூட்டியிருக்கிறது.

பலவகையிலும் பாதிக்கப்பட்டுள்ள கதிராமங்கலம் மக்கள், ஊரைவிட்டு ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டுமென்றும், நிலமும் நிலத்தடி நீரும் நஞ்சாவதால் எண்ணெய் – எரிவளி எடுக்கக் கூடாதென்றும, சற்றொப்ப இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். கடந்த 2018 ஏப்ரல் மாதம், இராணுவத்தினரை அழைத்து வந்து அவர்களின் பயிற்சியின் ஒரு பகுதியாக கதிராமங்கலத்தை சுற்றிக் காட்டிப் பயிற்சி கொடுத்தது மக்களிடம் மேலும் பீதியை அதிகப்படுத்தியது.

இந்நிலையில், நேற்று (01.02.2019) முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் வருவாய்த் துறையினரின் தகவல் ஏதுமில்லாமல், ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் காவல்துறையினரை ஊருக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டு, ஊர்திகளில் ஊழியர்களை அனுப்பியது மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியது.

அச்சமடைந்த மக்கள் ஒன்றுகூடி, உண்மை விவரங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து விவரம் அறிந்து கொள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்களை அழைத்துள்ளார்கள். இந்நிலையில் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி காவல்துறையினர் பேராசிரியர் த. செயராமன் அவர்களையும், உள்ளூர் பிரமுகர் திரு. ராஜூ அவர்களையும் கைது செய்து உண்மைக்குப் புறம்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இவர்கள் இப்பொழுது திருச்சி நடுவண் சிறையில் உள்ளார்கள்.

பேராசிரியர் செயராமன் துணைவியார் திருவாட்டி சித்ரா, கதிராமங்கலம் போராட்டக் குழுத் தலைவியர் கலையரசி, செயந்தி ஆகிய மூன்று பேரையும் வழக்கில் சேர்த்துள்ளார்கள். இந்த ஐந்து பேரும் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக இ.த.ச. 506(2) பிரிவின்கீழ் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். பிணை மறுப்புப் பிரிவுகளைப் போட்டி ருக்கிறார்கள். காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டனத்திற்குரியது! ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்கு தமிழ்நாடு காவல்துறை அடியாள் போல் செயல்படக்கூடாது!

தமிழ்நாடு முதல்வர், இச்சிக்கலில் தலையிட்டு பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோர் மீது போட்டுள்ள பொய் வழக்கை உடனடியாகக் கைவிடச் செய்ய வேண்டுமென்றும், சிறையில் உள்ளோரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றி “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” காவிரிப்படுகையை அறிவிக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger