தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


மேக்கேதாட்டு அனுமதி குறித்த நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது! தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது! பெ. மணியரசன் எச்சரிக்கை!

மேக்கேதாட்டு அனுமதி குறித்த நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது! தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் எச்சரிக்கை!
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்குரிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியது. இந்த அனுமதி தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும், பதட்டத்தையும் உண்டாக்கியது.

இதற்குக் கண்டனம் தெரிவித்தும், இந்த அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த 18.12.2018 அன்று தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களும், உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினார்கள்.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மேக்கே தாட்டு அணை கட்டும் அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருகிறார்கள்; நாடாளுமன்றச் செயல்பாட்டை முடக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்தச் சிக்கலைப் பேசி சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், அது தொடர்பாகப் பேசுவதற்கு வருமாறும் நாடாளுமன்றத்தில் நடக்கும் போராட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறும் கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மேலும் அவர் மேக்கேதாட்டு அணை பாசனத்திற்கான நீர்த்தேக்கம் அல்ல என்றும், குடிநீருக்காகவும் மின்சார உற்பத்திக்காகவும்தான் என்று கர்நாடகம் கூறியுள்ளது. அதனால்தான் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க அனுமதி அளித்தோம். காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி 4.75 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கூடுதலாகக் கர்நாடகத்துக்குக் கொடுக்க வேண்டியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென நிதின் கட்கரி கூறியுள்ளார்.

நான்கு மாநிலங்களின் கருத்தொற்றுமை அடிப்படையில்தான் இந்திய அரசு அணை கட்ட அனுமதி அளிக்கும். எனவே, தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கர்நாடகம் மேக்கேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதியை திரும்பப் பெறாமலேயே நிதின் கட்கரி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். அத்துடன், கர்நாடகம் அணை கட்டுவது பாசன நீரைத் தேக்குவதற்கு அல்ல, குடிநீருக்காகவும் மின்சாரம் தயாரிப்பதற்காகவும்தான் என்று நிதின் கட்கரி கூறுகிறார். கர்நாடக அரசு சூதாகச் சொல்லும் கூற்றை நடுவண் அமைச்சர் நிதின் கட்கரியும் அப்படியே கூறுவது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது!

தந்திரமாகத் தமிழ்நாட்டின் கவனத்தைத் திசைத்திருப்பி மேக்கேதாட்டு அணைக் கட்டுமான வேலைகளுக்கு தடங்கல் இல்லாமல் இந்திய அரசு பார்த்துக் கொள்கிறதோ என்ற வலுவான ஐயம் நமக்கு எழுகிறது.

எனவே, நடுவண் அரசு விரித்துள்ள வலையில் தமிழ்நாடு அரசும், அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் விழுந்துவிடாமல் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்குக் கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெறாத வரையில், அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நாடாளுமன்ற முடக்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டியதில்லை என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger