தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


கர்நாடகம் மேகத்தாட்டுவில் காவிரியில் புதிய அணைகள் கட்ட முயன்றால் தடுத்து முறியடிப்போம்! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!


கர்நாடகம் மேகத்தாட்டுவில் காவிரியில்
புதிய அணைகள் கட்ட முயன்றால் தடுத்து முறியடிப்போம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும்,
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான
தோழர் பெ.மணியரசன் அறிக்கை !



ஆடுதாண்டு காவிரி என்று அறியப்பட்டுள்ள மேகத்தாட்டு வனப்பகுதியில், காவிரியின் குறுக்கே 3 நீர்த்தேக்கங்கள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பதாக அம்மாநில சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, நேற்று (21.08.2013) பெங்களுருவில் அறிவித்துள்ளார்.

இம்மூன்று நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 50 ஆ.மி.க.(டி.எம்.சி.) என்றும் கூறியுள்ளார். கர்நாடகத்திலிலிருந்து வெளியேறும் காவிரி உபரி நீரைத் தேக்கி, மின்சாரம் எடுக்கவும், குடிநீருக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் இவ்வணைகள் கட்டப்படவுள்ளதாகவும் இவற்றிற்கான செலவு மதிப்பீடு ரூ. 600 கோடி என்றும் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை இறுதி செய்வதற்காக நேற்று பாசன மற்றும் மின்துறை வல்லுநர்கள் கூட்டம் நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிட்டப் பிறகு, காவிரியில் புதிய அணைகள் கர்நாடகம் கட்டுவதற்கு முழு உரிமையுண்டு எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட மூன்று அணைகள் கட்டப்பட்டுவிட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு காவிரியில் வராது. பாலாற்றுக்கு ஏற்பட்ட கதிதான் காவிரிக்கும் ஏற்படும்.

வெள்ளக் காலத்தில் வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தையும் இந்த மூன்று அணைகளும் தேக்கிக் கொள்ளும். 50 டி.எம்.சி. அணை என்பது, இப்பொழுதுள்ள கிருட்டிணராஜசாகர் அணையை விடக் கூடுதல் கொள்ளளவு கொண்டதாகும். கிருட்ஷ்ணராஜ சாகர் அணையின் முழுக் கொள்ளளவு 44 ஆ.மி.க.

கேரளப் பகுதியில் உற்பத்தியாகி வரும் கபினியின் உபரி நீர் முழுவதும் நேரடியாக மேட்டூர் அணைக்கு இப்பொழுது வந்து கொண்டுள்ளது. இந்த கபினி அணையின் உபரி நீர் தமிழகத்திற்கு வராமல் தடுக்கும் சதித்திட்டம் தான் கர்நாடகம் தீட்டியுள்ள மேகத்தாட்டு நீர்த்தேக்கத் திட்டம்.

கிருஷ்ணராஜ சாகரிலிருந்தும், கபினியிலிருந்தும் அருட்காவதி ஆற்றிலிருந்தும் வரும் உபரி நீர் முழுக்க மேட்டூருக்கு இப்பொழுது வந்து கொண்டுள்ளது. இந்நீர் முழுவதையும் தடுத்து தேக்கி வைத்துக் கொள்வதற்காகத்தான் தமிழக – கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு மேலே 35 கி.மீ. தொலைவிலுள்ள மேகத்தாட்டுவில் புதிய அணைகள் கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த முனைகிறது.

வெள்ளக் காலத்தில் இப்பொழுதுள்ள கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீராக 50 ஆ.மி.க. வெளியேறுவற்கு வாய்ப்பில்லை. எனவே, உபரி நீர் முழுவதையும் ஒரு சொட்டுக் கூட தமிழ்நாட்டிற்கு விடாமல் தேக்கிக் கொள்ள புதிய அணைகள் கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உபரித் தண்ணீரை கர்நாடகம் தேக்கிக் கொள்ள அனுமதியளித்துள்ளதென்று அம்மாநில சட்ட அமைச்சர் கூறுவது முழுப்பொய். கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 270 ஆ.மி.க. தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமைதான் அவர்களுக்கு இருக்கிறதே தவிர, தமிழ்நாட்டிற்கு ஓடிவரும் உபரித் தண்ணீரைத் தேக்கிக் கொள்ள கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த 270 ஆ.மி.க.வையும் தமிழ்நாட்டிற்கு 192 ஆ.மி.க. தண்ணீரை கொடுத்துவிட்டுத்தான் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையோ, தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையோ செயல்படுத்தாமல் அடாவடித் தனம் செய்யும் கர்நாடகத்திற்கு நடுவண் அரசின் மறைமுக ஆதரவு இருக்கிறது என்ற துணிச்சலில் தான் கர்நாடக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல், புதிய அணைகள் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளும் உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டா இல்லையா என்பதை நடுவண் அரசு தெளிவுபடுத்தியாக வேண்டும். ஏனெனில், அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகத்தான் எல்லா அநீதிகளையும் அட்டூழியங்களையும் கர்நாடகம் இழைத்து வருகின்றது.

அடுத்து, இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருக்கிறதா இல்லையா, தமிழ்நாட்டிற்கு நீதி வழங்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை இந்திய அரசு அறிவித்தாக வேண்டும்.

தமிழ்நாட்டிற்குரிய இப்பொறுப்புகள் இந்திய அரசுக்கு இருக்கிறதென்றால், பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக இதில் தலையிட்டு, மேகத்தாட்டுவில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதற்கு அனுமதியில்லை என்றும் அந்த முன்மொழிவிற்குக் கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழக அரசு, உடனடியாக இந்த அபாயத்தை உணர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடகத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் நடுவண் அரசின் ஓரவஞ்சனைக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த வேண்டும். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் குழுவினரை அழைத்துக் கொண்டு பிரதமரை நேரில் சந்தித்து, தமிழகத்திற்குரிய நீதியை நிலைநாட்ட வற்புறுத்த வேண்டும்.

கர்நாடக அரசு, மேகத்தாட்டுவில் அணைகள் கட்ட முயன்றால் தமிழ்நாட்டிலிருந்து உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மேகத்தாட்டுவுக்கே சென்று, கால்கோள் விழா நடத்தவிடாமல் தடுப்போம்! அணைகள் கட்டும் முயற்சியை முறியடிப்போம் என்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு

காவிரியிலிந்து கிடைக்கும் உபரி நீரையும் தமிழகத்திற்கு தரவிடாமல் அணை கட்டும் முடிவில் கர்நாடகா!


கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு ஆலோசித்து வருவதாக, அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
உபரிநீராக தமிழகத்திற்குச் செல்லும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது.
இதற்காக மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிப்பதற்காக, நீர்ப்பாசனத் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை பெங்களூருவில் நடைபெறுகிறது.
நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு யோசிக்கப்பட்டது. ஆனால், அப்போது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இயலவில்லை. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்வதில் காவிரி நடுவர் மன்றத்தில் எந்தவிதத் தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டி அங்கு நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.
மின் உற்பத்திக்குப் பயன்படுத்திய பிறகு, உபரிநீரை வழக்கம் போல தமிழகத்திற்கு அனுப்பலாம்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், உபரிநீரை பயன்படுத்துவதில் கர்நாடகத்திற்கு எந்தவித சட்ட ரீதியான இடையூறும் இல்லை.
புதிதாகக் கட்டப்படும் நீர்த்தேக்கத்தில் சுமார் 40-50 டிஎம்சி தண்ணீரைத் தேக்கிவைத்து, மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். காவிரி ஆற்றிலிருந்து ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடப்பாண்டு, தமிழகத்திற்கு இதுவரை 151 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு காவிரி நதிநீர் பிரச்னை எழாது.
ஆண்டுதோறும் ஹேமாவதி அணையில் இருந்து கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு திறந்துவிடப்படும் உபரிநீரையும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஹேமாவதி அணையில் இருந்து வெளியேறும் 26 டிஎம்சி உபரிநீரைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருந்தும், இதுவரை 16 டிஎம்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.
மீதமுள்ள தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடியில் திட்டம் வகுக்கப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தும்கூர், பெங்களூரு நகரங்கள் எதிர்க்கொண்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார் ஜெயசந்திரா.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி! - பெ.மணியரசன் அறிக்கை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்
கோரிய தமிழக அரசின் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி

காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்யும்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை



காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை 19.02.2013 அன்று தனது அரசிதழில் வெளியிட்டஇந்திய அரசு. அத்தீர்ப்பை செயல்படுத்தும் அதிகாரம் படைத்தகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது இந்நிலையில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடிஉடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்கு முறைக் குழுவையும் அமைத்திடுமாறு இந்திய அரசுக்கு ஆணையிட கேட்டுக்கொண்டு தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இவ்வழக்கு விசாரணை பல முறை நடந்தும் உச்சநீதி மன்றம், கர்நாடக அரசு எதிப்பு தெரிவித்ததாலும், நடுவண் அரசு நழுவிக் கொண்டதாலும் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல். இடைக்கால ஏற்பாடாக அதிகாரமற்ற மேற்பார்வைக் குழுவை அமைத்தது இக்குழு நடப்பு சாகுபடிஆண்டில் கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்த காலத்தில் கூட சூன், சூலை மாதங்களுக்கு உரிய பங்கு நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறுஆணையிடவில்லை, ஆணையிடும் அதிகாரமும் அதற்கு இல்லை.

இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை கர்நாடக, கேரள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில்மிக அதிகமாக பெய்து கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டன.தனது மாநில அணைகள் உடையாமல் பாதுகாக்கப்படவும் தனது மாநில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுக்காக்கபடவும் தேவைப்பட்ட தற்காப்புநடவடிக்கையாகக் கர்நாடக அரசு மிகை நீரை தமிழகத்திற்குத் திறந்துவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தமிழ அரசு தொடுத்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உச்சநீதி மன்றம்,இப்போது காவிரிப் படுகையில் நிறைய மழைப்பெய்து தண்ணீர் அதிகமாக உள்ளதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை. காவிரிதீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு பற்றி நிலுவையில் உள்ள அசல் வழக்கு 2014 சனவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது, அப்பொழுது காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது குறித்து விசாரிக்கலாம் என்று கூறி, தமிழக அரசு தொடுத்த வழக்கை இன்று (05.08.2013) தள்ளுபடி செய்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசன உழவர்களுக்கும், குடிநீருக்குக் காவிரியை நம்பியுள்ள தமிழக மக்களுக்கும் மிகுந்தஏமாற்றத்தை அளித்துள்ளது.

1990இல் இருந்து உச்சநீதி மன்றத்தில் காவிரி வழக்குகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அவ்வபோது பல தீர்ப்புகளை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது.இவற்றில் எந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் செயல்படுத்தியது இல்லை. தண்ணீர்ப் பற்றாகுறை காலத்தில் ஒரு முடிவெடுப்பதைவிட, தண்ணீர் நிரம்பியுள்ள இக்காலத்தில் சட்டப்படி ஒரு முடிவெடுத்து அறிவிப்பது எளிதாக இருக்கும். 1970களில் இருந்து தொடர்ந்து வரும் காவிரிச் சிக்கலுக்கு அரசிதழில் வெளியிடப் பட்ட தீர்ப்பாயத்தின் முடிவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது உச்சநீதி மன்றத்தின் சட்டப்படியான கடமை.இக்கடமையை உச்சநீதி மன்றம் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

ஏற்கனவே இந்திய அரசு காவிரிப் பிரச்சனையில் நடுநிலையோடு செயல்படாமல் தனது சட்டக் கடமையிலிருந்து தவறி தமிழகத்தை வஞ்சித்து விட்டது.இப்பொழுது உச்சநீதி மன்றமும் இன்றைய பாசனத்திற்கு தண்ணீர் இருக்கிறது என்று கூறி தமிழக அரசு தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்திருப்பது தமிழக உழவர்கள் மீது விழுந்த மற்றும் ஒர் அடியாகும் இது பற்றி விவாதிக்க காவிரி உரிமை மீட்புக் குழு விரைவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி  முடிவெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 

பெ.மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்
காவிரி உரிமை மீட்புக் குழு 

இந்திய அரசைப் போலவே, உச்சநீதிமன்றமும் தமிழக விவசாயிகளை கைவிட்டது!


காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை 19.02.2013 அன்று தனது அரசிதழில் வெளியிட்ட இந்திய அரசு. அத்தீர்ப்பை செயல்படுத்தும் அதிகாரம் படைத்தகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது. இந்நிலையில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடிஉடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்கு முறைக் குழுவையும் அமைத்திடுமாறு இந்திய அரசுக்கு ஆணையிட கேட்டுக்கொண்டு தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
 
இவ்வழக்கு விசாரணை பலமுறை நடந்தும், கர்நாடக அரசு எதிப்பு தெரிவித்ததாலும், நடுவண் அரசு நழுவிக் கொண்டதாலும் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், இடைக்கால ஏற்பாடாக அதிகாரமற்ற மேற்பார்வைக் குழுவை அமைத்தது.

இக்குழு நடப்பு சாகுபடி ஆண்டில் கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்த காலத்தில் கூட சூன், சூலை மாதங்களுக்கு உரிய பங்கு நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு ஆணையிடவில்லை, ஆணையிடும் அதிகாரமும் அதற்கு இல்லை.
 
இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை கர்நாடக, கேரள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில்மிக அதிகமாக பெய்து கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டன. தனது மாநில அணைகள் உடையாமல் பாதுகாக்கப்படவும் தனது மாநில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுக்காக்கபடவும் தேவைப்பட்ட தற்காப்பு நடவடிக்கையாகக் கர்நாடக அரசு மிகை நீரை தமிழகத்திற்குத் திறந்துவிட்டுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தமிழ அரசு தொடுத்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உச்சநீதி மன்றம், இப்போது காவிரிப் படுகையில் நிறைய மழைப்பெய்து தண்ணீர் அதிகமாக உள்ளதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை. காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு பற்றி நிலுவையில் உள்ள அசல் வழக்கு 2014 சனவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது, அப்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விசாரிக்கலாம் என்று கூறி, தமிழக அரசு தொடுத்த வழக்கை இன்று (05.08.2013) தள்ளுபடி செய்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசன உழவர்களுக்கும், குடிநீருக்குக் காவிரியை நம்பியுள்ள தமிழக மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
1990இல் இருந்து உச்சநீதி மன்றத்தில் காவிரி வழக்குகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவ்வபோது பல தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இவற்றில் எந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் செயல்படுத்தியது இல்லை. தண்ணீர்ப் பற்றாகுறை காலத்தில் ஒரு முடிவெடுப்பதைவிட, தண்ணீர் நிரம்பியுள்ள இக்காலத்தில் சட்டப்படி ஒரு முடிவெடுத்து அறிவிப்பது எளிதாக இருக்கும். 1970களில் இருந்து தொடர்ந்து வரும் காவிரிச் சிக்கலுக்கு அரசிதழில் வெளியிடப்பட்ட தீர்ப்பாயத்தின் முடிவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் சட்டப்படியான கடமை.இக்கடமையை உச்சநீதிமன்றம் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
 
ஏற்கனவே இந்திய அரசு காவிரிப் பிரச்சனையில் நடுநிலையோடு செயல்படாமல் தனது சட்டக் கடமையிலிருந்து தவறி தமிழகத்தை வஞ்சித்து விட்டது.இப்பொழுது உச்சநீதி மன்றமும் இன்றைய பாசனத்திற்கு தண்ணீர் இருக்கிறது என்று கூறி தமிழக அரசு தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்திருப்பது தமிழக உழவர்கள் மீது விழுந்த மற்றும் ஒர் அடியாகும்.

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger