தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


மேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

மேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் அறிக்கை!
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டி, 66 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் தேக்கும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை கேட்டிருந்தது. கர்நாடக அரசு அனுப்பிய அவ்வறிக்கையை நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒரு வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்தது.

அந்த வல்லுநர் குழு, கர்நாடக அரசு குறிப்பிடும் இடங்களில் மேக்கேத்தாட்டு அணை கட்டினால் 4,996 ஹெக்டேருக்கு (12,345 ஏக்கர்) மேல் வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், பல்வேறு உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு அழிவு ஏற்படும் என்றும், மற்றும் சில முக்கியக் காரணங்களைக் கூறியும், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைகளை ஏற்க வேண்டியதில்லை, மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி தர தேவையில்லை என அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.

மேக்கேத்தாட்டு அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்து கொடுத்த விவரங்களை இந்த வல்லுநர் குழு கணக்கிலெடுத்து ஆராய்ந்ததையும் அப்பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்கள். மேக்கேத்தாட்டு அணை கட்ட மறுப்புத் தெரிவித்து நடுவண் சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சக வல்லுநர் குழு அளித்துள்ள இந்த அறிக்கையை காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் பாராட்டுகிறேன்.

அதேவேளை அப்பரிந்துரையில், மேக்கேத்தாட்டு அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளையெல்லாம் சொல்லிவிட்டு தமிழ்நாடும், கர்நாடகமும் கூடிப் பேசி இணக்கமான முடிவுக்கு வர வேண்டும் எனக் கூறியிருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

காவிரியின் குறுக்கு மேக்கேத்தாட்டில் அணை கட்டினால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது என்ற உண்மையை வெளிப்படுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேக்கேத்தாட்டில் மறியல் செய்வதற்காக கடந்த 07.03.2015 அன்று கர்நாடக எல்லையான தேன்கனிக்கோட்டை யிலிருந்து ஐயாயிரம் உழவர்களும், உணர்வாளர்களும் பேரணியாகப் புறப்பட்டோம். அப்போது, காவல்துறை எங்களை தமிழ்நாடு எல்லையில் மறித்துக் கைது செய்து பள்ளிக்கூடங்களிலும், மண்டபங்களிலும் வைத்திருந்தார்கள். மேக்கேத்தாட்டு அணை கட்டக் கூடாதென்று தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்களும், கட்சிகளும் போராடி வந்துள்ளன.

இந்த நிலையில், மேற்படி வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. இந்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நடுவண் அரசும் அப்படியே ஏற்று கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டிலோ மற்ற இடங்களிலோ அணை கட்ட கூடாதென நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, இத்துடன் ஓய்ந்து விடாமல் தொடர்ந்து விழிப்பாக இருந்து காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட மத்திய அரசு நிரந்தரத் தடையாணை விதிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger