தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால் காவிரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது. ============================== காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்.

                                                                                                                                                                              
தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால்
காவிரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது!
காவிரி உரிமை மீட்புக் குழு 
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!

காவிரி வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் சூலை 19 ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டது என்ற செய்தி டெல்டா மாவட்டங்களின் உழவர்கள் தலையில் இடி விழுந்தது போல் அதிர்வை உண்டாக்கி விட்டது. சூன் மாதம் தொடங்கும் குறுவைப் பட்டத்தில் இவ்வாண்டாவது சாகுபடி தொடங்கலாம் என்றிருந்த உழவர்களின் எதிர்பார்ப்பைப் பொசுக்குவது போல் உள்ளது இந்த ஒத்திவைப்பு.

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள் காவிரி இறுதித் தீர்ப்பு வந்தது. இன்றுவரை அத்தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது என்று மறுக்கிறது கர்நாடக அரசு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பாகத் தமிழ்நாடு, கர்நாடம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் அதே 2007 இல் வழக்குத் தொடுத்தன. ஒன்பதாண்டுகள் கடந்தும் இதுவரை உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கவில்லை.

2013 பிப்ரவரி 19 ஆம் நாள் இந்திய அரசு காவிரித் தீர்ப்பைத் தனது அரசிதழில் வெளியிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்தும் பொறியமைவுகளான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்காமல் ஏட்டுச் சுரைக்காய்போல் வஞ்சகமாக அரசிதழில் வெளியிட்டது அன்றைய காங்கிரசு ஆட்சி.

2013 மார்ச்சு மாதம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க இந்திய அரசுக்குக் கட்டளை இடுமாறு கோரியது. அவ்வழக்கு இதுவரை விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்திய அரசு மறைமுகமாகக் கொடுத்த துணிச்சலில் ஊக்கம் பெற்று காவிரி இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து வந்த கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் காலவரம்பற்று விசாரணையைத் தள்ளி வைத்தது மேலும் ஊக்கம் கொடுத்தது. அந்தத் துணிச்சலில் கர்நாடக அரசு மேக்கேதாட்டுப் பகுதியில் காவிரியில் புதிதாக மூன்று அணைகள் கட்டி 50 ஆமிக (டிஎம்சி) அளவிற்குத் தண்ணீர் தேக்கத் திட்டமிட்டு உலக அளவில் ஏலம் கோரி – அவ்வேலையில் மும்முரம் காட்டியது.

கர்நாடகம் காவிரியில் புதிய அணைகள் கட்டத் தடை கோரித் தமிழ்நாடு அரசு 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. அவ்வழக்கும் விசாரிக்கப் படாமல் நிலுவையில் உள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்த கர்நாடகத்தின் அப்போதைய ப.ச.க. முதலமைச்சர் செகதீசு செட்டர், இப்போதைய காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது. அவ்வழக்குகளும் விசாரிக்கப்படாமல் ஊறப் போடப்பட்டன.

கடந்த 19.03.2016 அன்று உச்ச நீதிமன்றம் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க நீதிபதி ஜே. செலமேசுவர் தலைமையில் நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வை அமைத்து, அது 28.03.2016 அன்று விசாரணையைத் தொடங்கும் என்று அறிவித்தது.

28.03.2016 அன்று இந்த மூன்று நீதிபதிகள் அமர்வு கூடி வழக்கு விசாரணையை 2016 சூலை 19 ஆம் நாளுக்குத் தள்ளி வைத்து விட்டது. வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்கும் மனநிலையில் நீதிபதிகள் மூவரும் இருந்துள்ளார்கள். வேறொரு முக்கிய வழக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்கள். கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமன் வழக்கைத் தள்ளி வைக்கலாம் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் அவ்வழக்கில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ராகேசு துவேதி எந்த மறுப்பும் சொல்லவில்லை. நீதிபதிகள் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைத்து விட்டார்கள். தமிழ்நாடு வழக்கறிஞர் குறுவை சாகுபடி அவசரத்தைச் சுட்டிக் காட்டி கடுமையாக வாதிட்டிருந்தால் 4 மாதங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கும் அவலம் நேர்ந்திருக்காது.

காவிரி டெல்டாவில் சூன் மாதம் குறுவை சாகுபடி ஐந்து இலட்சம் ஏக்கரில் தொடங்க வேண்டிய அவசர அவசியம் இருக்கும் போது, குடிநீருக்குக் கூட மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத அளவிற்கு நீர்மட்டம் அன்றாடம் வேகமாகக் குறைந்து வரும் நிலையில் (28.03.2016 நீர்மட்டம் 58 அடி ) மூன்றரை மாதங்களுக்கு மேல் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைப்பதைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எப்படி ஏற்றுக் கொண்டார்? தமிழ்நாடு அரசின் வழிகாட்டல் இதில் என்னவாக இருந்தது?

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு வேளாண் அமைச்சர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், பொதுப் பணித்துறைச் செயலாலர் ஆகியோரே டெல்ட்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டிவர்கள்.

காவிரிச் சிக்கலில் தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் விரைவு மனுப்போட்டு கோடைக் கால விடுமுறைக்கு முன் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிட ஏற்பாடு செய்திடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

இணையம்:www.kaveriurimai.com
பேச: 76670 77075, 94432 74002

           

தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்!



உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடை !
உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்கு !
தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழு  ஆர்ப்பாட்டம்

உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும்உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும்தஞ்சையில்,காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்நேற்று (24.03.2016) காலைஉழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

·         டிராக்ட்ர் எந்திரத்தை பறிமுதல் செய்கிறோம் என்ற பெயரில்பாப்பாநாட்டில் உழவர் பாலன் மீது கொடுந்தாக்குதல் நடத்திய காவல்துறை ஆய்வாளர் குமாரவேல் மற்றும் காவலர்களை மீது குற்றவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்,

·         உழவர்களின் வேளாண் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்,

·         அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட உழவர் அழகர் குடும்பத்திற்கு - இழப்பீடு வழங்க வேண்டும்,

·         குண்டர்களை வைத்து கடன் வசூல் செய்யும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,

·         இந்திய அரசு நியமித்த முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய உழவர் ஆணையம்” அளித்துள்ள பரிந்துரையின்படி - உற்பத்திச் செலவில் 50% கூடுதலாக வைத்து வேளாண் விளை பொருட்களுக்கான கொள்முதல் விலையையும்சந்தை விலையையும் நிலைநிறுத்த வேண்டும்,

·         பதுக்கல் – ஊக பேரம் – செயற்கையான விலை வீழ்ச்சி – விலை உயர்வு உள்ளிட்டவைகளுக்கு வாய்ப்பு அளிக்கும் இணையதள வணிகத்தைத் தடை செய்ய வேண்டும்,

·         தமிழ்நாட்டை தனி உணவு மண்டலமாக்க வேண்டும்,

·         சர்க்கரை ஆலைகளில் ஒரு டன் கரும்புக்கான விலை ரூ. 2,750-இல் ரூ. 750 பிடித்தம் செய்யாமல் முழுத் தொகையையும் உழவர்களுக்கு வழங்க வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துகாவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்தஞ்சை தொடர்வண்டி நிலையம்அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும்தமிழ்த் தேசியப் பேரியக்கத்தலைவருமான தோழர் பெமணியரசன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை கோரிக்கை முழக்கங்களை எழுப்ப, ஆர்ப்பாட்டத் தோழர்கள் அதை விண்ணதிர எதிரொலித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், உழவர் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக முன்மொழிந்து, தமிழக விவசாயிகள் சங்கத்தஞ்சை மாவட்டத் தலைவர் திருமணிமொழியன் பேசினார். மூன்று மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. வலிவளம் மு. சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் திருகாவிரிதனபாலன்தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர்கள் திருஅயனாபுரம் சிமுருகேசன்திரு. சதா முத்துக்கிருட்டிணன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசுதமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் திரு. செகதீசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியராஜ், தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. ஆ.வி. நெடுஞ்செழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன்மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. ஜெ. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் இணைச் செயலாளர் திரு. சி. அருண் மாசிலாமணி ள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.


ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய தோழர் பெ. மணியரசன், கடன் நிலுவை தொகைக்காக உழவர்களைஅவமானப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உழவர் பாலன் தாக்கப்பட்டுள்ளார். அரியலூர் உழவர்அழகர் தர்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபோல் ஒரு சில நிகழ்வுகள் தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெளிச்சத்திற்கு வராத துயரங்கள் ஏராளம்.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 2,422 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசியக் குற்றஆவணக் காப்பகம் (NCRB) கூறுகிறது. ஏன் இந்த நிலைமை?

உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்காததால்தான் உழவர்கள்கடன்சுமையில் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள். வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு சேர்த்து கூடுதலாக 50 சதவீதம் விலை நிர்ணயிக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு 2 இலட்சம் டன் அரிசியை பொது வழங்கலுக்குத் தமிழ்நாடு அரசு இந்திய அரசிடமிருந்து வாங்குகிறது. அவை அனைத்தும் பஞ்சாப்அரியானாகர்நாடகாஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உற்பத்தியானவை. எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடுதமிழ்நாட்டு உழவர்களுக்குதமிழ்நாட்டு வணிகர்களுக்கு சந்தையாக இல்லைவெளி மாநிலங்களுக்குச் சந்தையாக இருக்கிறது.

எனவேதமிழ்நாட்டு வேளாண் விளை பொருட்களுக்கு சந்தை மதிப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு தனி உணவு மண்டலம் ஆனால்வெளி மாநில உணவுப் பொருட்கள் தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டுச் சந்தைக்கு வர முடியாது. தமிழ்நாட்டுக்கு பற்றாக்குறையை உள்ள தவசங்களை (தானியங்களை) தமிழ்நாடு அரசு முடிவு செய்துவெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஏற்கெனவேஇந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி உணவு மண்டலமாகத்தான் இருந்தது. பின்னர்தான் அந்நிலை மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்கினால்தான், இங்குள்ள உழவர்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும். வெளிச்சந்தையிலும் நெல்லுக்கு அதிக விலை கிடைக்கும் என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழவர்களும், பெண்களும் திரளாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.












==============================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==============================
இணையம்:www.kaveriurimai.com
==============================
பேச: 76670 77075, 94432 74002
==============================
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger