தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


"காவிரி: கன்னட இனச் சிக்கல் என்கிறார் சித்தராமையா! தமிழர்களே சிந்திப்பீர்!" ---- பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர் காவிரி உரிமை மீட்புக்குழு.


காவிரி: கன்னட இனச் சிக்கல்

என்கிறார் சித்தராமையா!
தமிழர்களே சிந்திப்பீர்!
====================================================
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்
காவிரி உரிமை மீட்புக்குழு
நாள் 24.8.2023
======================================================


தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி திறந்து விட வேண்டிய காவிரி நீரைத் தடுத்து, தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்காகக் கர்நாடகத்தில் அம்மாநில காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் 23.8.2023 அன்று பெங்களூரில் நடந்துள்ளது. அதில் பாசக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளார்கள். அனைவரும் ஒருமித்துத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது, கர்நாடகத்திற்கே தண்ணீர் போதாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவரிடம் வலியுறுத்தி, தங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை அரங்கேற்றிக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்கள். இன்றைய (24.8.2023) நாளேடுகளில் இச் செய்தி வந்துள்ளது.

அந்தக் கூட்டத்தில் அபாண்டமான பொய் ஒன்றையும் கூச்ச நாச்சமில்லாமல் பேசியுள்ளார்கள். அதைச் செய்தியாளர்களிடம் அப்படியே கூறியுள்ளார் சித்தராமையா! “காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 22 கூட்டங்களையும் ஒழுங்காற்றுக் குழு 84 கூட்டங்களையும் நடத்தியுள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஆணையம், ஒழுங்காற்றுக் குழு அளித்துள்ள ஆணையைக் கர்நாடகம் அமுல்படுத்தி வருகிறது” என்று முழுப் பொய்யை முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். காவிரி ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் ஒரு முடிவைக் கூட – உத்தரவைக் கூட கர்நாடக அரசு செயல்படுத்தியதில்லை. அங்கு காங்கிரசு, பாசக, மதச் சார்பற்ற சனதா தளம் கட்சிகளின் முதலமைச்சர்கள் ஆட்சி செய்த காலங்களில் ஒரு தடவை கூட கர்நாடகம் காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு வழங்கிய உத்தரவுகளைச் செயல்படுத்தியதில்லை.

தமிழ்நாட்டிற்கு, சூன் முதல் ஆகத்து 10 வரை கர்நாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீர் 53.7703 டிஎம்சி. இதில் வெறும் 15.7993 டிஎம்சி மட்டுமே திறந்துவிட்டுள்ளது. பாக்கியுள்ள 37.9710 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டுதான், 10.8.2023 அன்று கூடிய ஒழுங்காற்றுக் குழு ஒரு நொடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், கர்நாடகம் திறந்து விடவில்லை. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் போகிறது என்றவுடன் தண்ணீர் கூடுதலாகத் திறந்து விடுவதாகப் பாசாங்கு காட்டி, பின்னர் தண்ணீரைக் குறைத்து விட்டது கர்நாடகம்.

காவிரிச் சிக்கல் இனச் சிக்கல் என்கிறார் சித்தராமையா:

சித்தராமையா அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்குக் கொடுத்த செவ்வியில் முத்தாய்ப்பாக ஒரு கருத்தை அழுத்திச் சொன்னார்.

”கர்நாடகத்தில், தாயகம், தண்ணீர், மொழி ஆகிய சிக்கல்களில் யாரும் அரசியல் செய்வதில்லை” என்றார். இந்தச் சிக்கல்களைப் பயன்படுத்தி இங்கு கட்சிகள் ஒன்றை ஒன்று சாடிக் கொள்வதில்லை, பிளவு படுவதில்லை என்பது இதன் பொருள். அதாவது, கன்னட இனச்சிக்கலில் கர்நாடகக் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதில்லை என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில், தமிழர் தாயகம், தண்ணீர், தமிழ்மொழி உரிமைகளுக்காக எப்போதாவது சேர்ந்து செயல்பட்டதுண்டா? இங்கே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறதா? கூடினாலும் தாயகம், இனம், மொழி, தண்ணீர் உரிமைச் சிக்கல்களில் ஒன்று சேர்ந்து இக்கட்சிகள் முடிவு எடுக்க முடியுமா?

பதவி வேட்டை, பணவேட்டை இரண்டை மட்டுமே இலட்சியங்களாகக் கொண்டு செயல்படுபவை தமிழ்நாட்டுப் பெரிய கட்சிகள்! கர்நாடகத்திலும் ஊழல் மற்றும் பதவி வேட்டை அரசியல் வாதிகள் இருக்கிறார்கள்! ஆனால், அம்மாநிலத்தில் மொழி, இனச் சிக்கல்களில் கட்சிகள் ஒன்று சேர்ந்து கொள்கின்றன. அப்படி அவை அச்சிக்கல்களில் ஒன்று சேரவில்லை என்றால் அம்மாநில மக்கள் அக்கட்சிகளை எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் அவ்வாறான மக்கள் விழிப்புணர்ச்சி, மொழி, இனம், தாயகம் ஆகியவற்றில் உண்டா? இல்லை.

தாயகம், தாய்மொழி, ஆற்றுநீர் உரிமை போன்ற அடிப்படை உரிகைளில் தமிழர்களுக்குப் போதிய அக்கறை இல்லை என்பதை நம் மக்கள் உணர்ந்து தங்களின் விழிப்புணர்ச்சியை, பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அலுவலகத் தேவைகளுக்கு “இந்தியர்“ என்று சொல்லிக் கொண்டு, அடிமனம் முழுவதும் ”கன்னடர்” என்ற இன உணர்ச்சி அவர்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பது போன்ற குறுக்குச் சால் ஓட்டும் திராவிட இனக் குழறுபடிகள் கர்நாடகத்தில் இல்லை. அவர்களின் கன்னட இனப்பற்றை நாம் எதிர்க்கவில்லை; அவர்களின் கன்னட வெறியையும், தமிழின வெறுப்பையும்தான் நாம் கண்டிக்கிறோம்.

தமிழ்நாடு அரசு இப்போது போட்டுள்ள உச்ச நீதிமன்ற வழக்கிலும், காவிரியில் தமிழ்நாட்டிற்குள்ள தமிழ்நாட்டு உரிமைகளை எதிர்த்தும், உச்ச நீதிமன்றம் தீர்பளித்த காவிரிநீர் பகிர்வைச் செயல்படுத்த முடியாது என்பதை வலியுறுத்தியும் கர்நாடகம் கடுமையாக வாதிடும். உச்சநீதி மன்றம் இடைக்கால நிவாரணமாக ஏதாவது தீர்ப்பளித்தால், அதை எதிர்த்துக் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கலாம். ஏற்கெனவே 1991 மற்றும் 2016 உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராகத்தான் முறையே தமிழினப்படுகொலைகளும், வன்முறைகளும், தமிழர் சொத்துகள் சூறையாடல்களும் கன்னடர்களால் நடத்தப்பட்டன; அதேபோல் கர்நாடகத் தமிழர்களை இழிவுபடுத்தியதும் அரங்கேறின. கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு இப்போது தமிழ்நாட்டுத் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கன்னட இனவெறி ஆட்டங்களைத் தடுக்கும் உத்திகள் வகுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு கர்நாடகத்திற்கு ஆய்வுக்குழுவை அனுப்பி, காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் உள்ள நீர்த்தேக்கங்கள் சிறியவை, பெரியவை அனைத்திலும் தண்ணீர் தேக்கப்பட்டுள்ள அளவுகளைத் தெரிந்து வரச் செய்ய வேண்டும். அதேபோல் மழைப் பொழிவு அளவுகளையும் அறிந்துவரச் செய்ய வேண்டும்.

மேகேதாட்டு அணைக்கான அடிப்படைகள் தொடங்கி நடந்து வருகின்றன. அதற்கு உச்சநீதி மன்றத்தில் தடைகோர வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் கூட்டி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்து விடக் கோரி, மக்கள் திரள் போராட்டங்கள் நடத்த வேண்டும்.

நமது காவிரி உரிமை மீட்புக்குழு கடந்த 22.8.2023 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நடுநிலை தவறி, கர்நாடகத்திற்குச் சாதகமாக நடந்து கொள்ளும் நயவஞ்சகர். அவரை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நடுநிலைப் பண்புள்ள அதிகாரி ஒருவரைத் தலைவராக்க வேண்டும் என்று அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையை இந்திய அரசிடம் வைக்க வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு தலைமை அமைச்சர் மோடியைச் சந்தித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி நீர் திறந்துவிடத் தலையிடும்படிக் கோர வேண்டும்.

தமிழ்நாடு அரசு இவற்றைச் செயல்படுத்த மறுத்தால், தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் உயிர்நாடியாக உள்ள காவிரி உரிமையைக் காக்க, மக்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும்.

===============================================================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

"காவிரி மேலாண்மை ஆணையமும் இந்திய அரசும் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதையும் தமிழ்நாடு அரசு பாசாங்கு செய்வதையும் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!" --- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!


காவிரி மேலாண்மை ஆணையமும் இந்திய அரசும்

தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதையும் தமிழ்நாடு அரசு பாசாங்கு செய்வதையும் கண்டித்து
தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!
=============================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
================================

இன்று (11.8.2023) புதுதில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு அதிகாரிகள் சந்தீப் சக்சேனாவும், சுப்பிரமணியமும் அக்கூட்டத்திலிருந்து வெளி நடப்புச் செய்துள்ளார்கள். கடந்த சூன் மாதத்திலிருந்து நடப்பு ஆகஸ்ட்டு வரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரில் 38 டிஎம்சி பாக்கி உள்ளது. அதைத் திறந்து விடவேண்டும் என்று தமிழ்நாடு அதிகாரிகள் ஆணையக் கூட்டத்தில் கோரியதாகவும், கர்நாடகம் மறுத்துவிட்டதாகவும் வெளிநடப்புக்கு அதிகாரிகள் காரணம் கூறியுள்ளார்கள்.

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு என்ன விடை சொன்னார்? ஆணையர் தலைவர்தானே கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும்! இன்று நடந்தது ஆணையத்தின் 22-வது கூட்டம். இதற்கு முன் நடந்த 21 கூட்டங்களில் எப்போதாவது, ஆணையம் தலையிட்டு, தமிழ்நாட்டிற்கு சட்டப்படி தரவேண்டிய தண்ணீரைக் கர்நாடகத்திடம் இருந்து வாங்கித் தந்திருக்கிறதா? இல்லை. இது வரை தமிழ்நாடு அரசு இந்திய அரசை வலியுறுத்தி தலையிடச் செய்து, தமிழ்நாட்டுக்கு நீர் கிடைக்கும் நீதியைப் பெற்றிருக்கிறதா? இல்லை.

இப்பொழுதுள்ள காவிரி ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நடுநிலை தவறி, கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணை போகிறார். இந்திய அரசு எஸ்.கே. ஹல்தரின் ஒருதலைச் சார்பை ஆதிரிக்கிறது. இந்த நிலையில், நிபந்தனை போட்டு, இந்த 22-வது ஆணையக் கூட்டத்தைப் புறக்கணிக்குமாறு காவிரி உரிமை மீட்புக்குழு 7.8.2023 தஞ்சையில் கூடிய போது, தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்து தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால், தமிழ்நாடு அரசு காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொண்டு இப்போது வெளிநடப்பு செய்துள்ளது. ஆணையக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் காவிரி ஆணையம் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்யவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார். இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இலட்சக் கணக்கான ஏக்கரில் கருகும் குறுவைப் பயிரைக் காப்பாற்ற உடனடியாகத் தண்ணீர் கொண்டுவர முடியுமா; அடுத்துத் தொடங்க வேண்டிய சம்பா சாகுபடிக்கு நீர் கிடைக்குமா என்பதெல்லாம் கேள்விக் குறிகளாக உள்ளன.

இந்திய அரசை அணுகி அழுத்தம் கொடுத்து காவிரி நீர் பெறுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறிவில்லை. இன்று புதுதில்லியில் வெளிநடப்புச் செய்த தமிழ்நாடு அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்தியில் ஆணையத்தின் செயல்படாத் தன்மையை, ஒருதலைச் சார்பைச் சுட்டிக் காட்டாமல், கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததால் வெளிநடப்புச் செய்தோம் என்று மட்டும் கூறியுள்ளார்.

காவிரி ஆணையம் மற்றும் இந்திய அரசு ஆகியவற்றின் துரோகம், தமிழ்நாடு அரசின் உறுதியற்ற, உரிமை உணர்வற்ற மேம்போக்கு நடவடிக்கைகள் மூன்றையும் கண்டித்து 22.8.2023 அன்று காலை 10.00 மணிக்கு தஞ்சை தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

"நாடாளுமன்றக் கூட்டணிக்காக மேக்கேதாட்டு அணைக்குத் துணை போகுமோ தி.மு.க. ஆட்சி! துரைமுருகன் அறிக்கையால் அச்சம்!"--- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!


 நாடாளுமன்றக் கூட்டணிக்காக மேக்கேதாட்டு

அணைக்குத் துணை போகுமோ தி.மு.க. ஆட்சி!
துரைமுருகன் அறிக்கையால் அச்சம்!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
======================================


கர்நாடக மாநிலத்தின் காங்கிரசுத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், 30.05.2023 அன்று பாசனத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து, மேக்கேதாட்டில் விரைவில் அணை கட்டும் பணிகள் தொடங்கும் என்றும், இதற்காக ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.

கர்நாடகக் காங்கிரசு அமைச்சரவை முதல்வர் சித்தராமையா தலைமையில் இதற்கு முன் 2013 – 2018இல் ஆட்சியில் இருந்தபோது, மேக்கேதாட்டு அணை கட்ட 9 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்து, இந்திய ஒன்றிய அரசின் நீராற்றல் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. எதிர்க்கட்சியாய் இருக்கும்போது, 2022 டிசம்பரில் மேக்கேதாட்டு அணையைப் பா.ச.க. ஆட்சி உடனே கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து, ஒரு மாதம் பெருந்திரள் பரப்புரைப் பயணம் நடத்தியவர் டி.கே. சிவக்குமார்.

அண்மையில் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிக்கையில், இதே காங்கிரசுக் கட்சி, தான் ஆட்சிக்கு வந்தால் 9,000 கோடி ரூபாயில் விரைந்து மேக்கேதாட்டு அணையைக் கட்டி முடிப்போம் என்று அறிவித்திருந்தது.

ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரசுக் கட்சி தனது மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை தொடங்க அறிவிப்புச் செய்துள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டுவிட்டால் மிகை வெள்ள நீர் கூட மேட்டூருக்கு வராமல் தேக்கி விடுவார்கள்.

டி.கே. சிவக்குமார் அறிவிப்பிற்கு, எதிர்வினை ஆற்றி தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 31.05.2023 அன்று வெளியிட்ட அறிக்கையில், டி.கே. சிவக்குமாரின் தேர்தல் வெற்றிக்கு நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறலாம் என்றிருந்தேன். இருந்தாலும் இப்போது வாழ்த்துக் கூறிக் கொள்கிறேன் என்று தொடங்கியுள்ளார்.

மேலும், “அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை சிவக்குமார் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. மேக்கேதாட்டு பற்றிய முழு விவரத்தை இன்னும் அதிகாரிகள் அவருக்கு சொல்லி இருக்க மாட்டார்கள் எனக் கருதுகிறேன்” என்று துரைமுருகன் சிவக்குமாரைத் தடவிக் கொடுக்கிறார். மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணைகட்டுவது வரவேற்கத்தக்கதல்ல என்றும், பாசமழை பொழிகிறார் துரைமுருகன்!

தேர்தல் கூட்டணி அரசியலுக்காக தி.மு.க. தமிழர்களின் உயிர் ஆதாரமாய் உள்ள காவிரி உரிமையை இழந்து விடுமோ என்ற பேரச்சம் டெல்டா மாவட்டங்களின் உழவர்களிடையே எழுந்துள்ளது. கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான், இந்திய அரசின் ஒப்புதலே பெறாமல் சட்ட விரோதமாக 1969 – 1972 காலத்தில் ஏமாவதி, ஏரங்கி, கபிணி அணைகளைக் கர்நாடகக் காங்கிரசு ஆட்சி காவிரியின் குறுக்கு கட்டிமுடித்தது. அப்போது இந்திரா காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. அந்த வரிசையில் இப்போது மேக்கேதாட்டு அணையும் கட்டப்பட தி.மு.க. ஆட்சி மறைமுகமாக உடந்தையாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்திய அரசு தன் பக்கம் இருக்கும் என்ற உறுதியும், தி.மு.க. ஆட்சி பெரிய அளவு எதிர்ப்புக் காட்டாது என்ற நம்பிக்கையும் கர்நாடகக் காங்கிரசு ஆட்சிக்கு இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு மக்கள் காவிரியைக் காக்க கட்சி கடந்து ஒருங்கிணைந்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வருமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================


 பாசனக் கால்வாய் தூர்வாரும் பணிகளில் கமிஷன்

கேட்டு தி.மு.க.,வினர் கோஷ்டி மோதல்! பணிகள் பாதிப்பு!
==========================================================
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
==========================================================
தஞ்சை மாவட்டத்தில் ஆற்று நீர்க் கால்வாய்களைத் தூர்வருவதற்காக ரூ 20 கோடியே 45 இலட்சம் தமிழ்நாடு பொதுப்பணித் துறை நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தை தஞ்சை மாவட்டத்தில் 27.04.2023 அன்று அமைச்சர்கள் துரை. முருகன், கே.என். நேரு, அன்பில் மகேசு பொய்யாமொழி ஆகியோர் நேரில் வந்து பூதலூர் ஆனந்த காவேரிக் கால்வாயில் தொடங்கி வைத்தனர்.

அந்த ஆனந்த காவேரி தூர்வாரும் ஒப்பந்தம் எடுத்தவர் பூதலூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., காரர் தாம்! ஆனால், தி.மு.க., வில் இதே வட்டாரத்தைச் சேர்ந்த இன்னொரு கோஷ்டியினர் இந்த ஒப்பந்த வேலைக்கு தங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் தொகை தர வேண்டும் என்று கோரி, மேற்படி ஒப்பந்தக்காரரை வேலை செய்ய விடாமல் தடுத்து வந்தனர். தி.மு.க., கோஷ்டிகளிடையே சமரசம் செய்ய முடியவில்லை. மொத்தம் 6 கி.மீட்டர் வேலையில் இதுவரை 2 கிலோ மீட்டர் மட்டுமே தூர்வாரும் பணி முடிந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் 19.05.2023 அன்று இரவு எதிர்க் கோஷ்டியினர் மேற்படி ஆனந்த காவேரியில் தூர்வாரும் பணிக்காக நிறுத்திவைக்கப்படிருந்த பொக்லின் எந்திரத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன் பொக்லைனில் உள்ள முக்கியமான பாகங்களைத் திருடிச் சென்றுவிட்டார்கள் என்று சில நபர்கள் பெயரையும் சுட்டிக்காட்டி நடவடிக்கை கோரி வெண்ணாறு – வெட்டாறு பகுதி உதவிப் பொறியாளர் பூதலூர் காவல் நிலையத்தில் எழுத்து வடிவில் புகார் 20.05.2023 அன்று கொடுத்துள்ளார்.

தி.மு.க., வினர் தங்களின் தன்னலத்திற்காகக் கோஷ்டிச் சண்டைப் போட்டுக் கொண்டு உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அரசு திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் தடுத்து பொக்லைன் எந்திரத்தையும் சேதப்படுத்தியுள்ளார்கள். மூன்று அமைச்சர்கள் தொடங்கி வைத்த நாளில் இருந்து தி.மு.க., வினரின் கோஷ்டிச் சண்டை தொடர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்தச் சிக்கலிலும் இது போல் டெல்டாவில் மற்ற இடங்களில் நடைபெறும் பாசன மேம்பாட்டு வேலைகளிலும் தி.மு.க.,வினர் கமிஷன் கேட்டு கோஷ்டிச் சண்டை போடுவதைத் தவிர்க்கவும் இவ்வேலைகளை சூன் மாதம் தண்ணீர் திறப்புக்குள் முடிக்கவும் உரியவாறு நடவடிக்கை எடுக்குமாறு காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுகொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================

"காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்!" --------காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!"


காவிரி ஆணையக் கூட்டத்தில்

தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா?
முதலைமைச்சர் விளக்க வேண்டும்!
====================================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
=====================================================

தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் – அனைத்துக் கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு 22.06.2022 அன்று புதுதில்லி சென்று ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவாத் அவர்களைச் சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை அனுமதி பற்றி விவாதிக்கக் கூடாது என்றும் அதற்கான அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு துரைமுருகன் குழுவினரிடம் ஒன்றிய அமைச்சர் செகாவாத் மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று இந்திய அரசின் சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளதாகப் பதில் அளித்தார். செகாவாத்தின் இப்பதில் பற்றி துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறி அது வெளியாகி உள்ளது. அந்த அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்று தமிழ்நாடு சட்ட வல்லுநர்கள்- கூறியுள்ளதாகத் துரைமுருகன் பதில் மறுப்புக் கூறியதற்கு, வரும் ஆணையக் கூட்டத்தில் அந்த சட்ட விவரங்கள் பற்றி விவாதியுங்கள் என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். இச்செய்தியையும் துரைமுருகன் கொடுத்துள்ளார்.

அப்படி என்றால் 05.07.2022 அன்று புதுதில்லயில் நடைபெறும் ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்குமா என்ற வினா எழுகிறது.

காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை பொருள் நிரலில் (அஜண்டாவில்) சேர்க்கப்பட்டால் அக்கூட்டத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே எடுத்த நிலைபாட்டைக் கைவிட்டு விட்டாரா? அவ்வாறு கைவிட்டால் அதற்கான புதிய காரணங்கள் என்ன?

ஒரு காரணத்தைச் சொல்கிறார் துரைமுருகன். காவிரி ஆணையத்தில் மேக்கேதாட்டு அணை அனுமதித் தீர்மானத்தை தமிழ்நாடு தோற்கடித்துவிடும்; அந்த அளவு தமிழ்நாட்டுக்கு ஆணையத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமை உள்ள பொறுப்பாளர்கள் ஒன்பது பேர் மட்டுமே. இந்த ஒன்பது பேரில் இந்திய அரசு அதிகாரிகள் நான்கு பேர், ஆணையத்தின் தலைவரையும் சேர்த்தால் ஆக இந்திய அரசு சார்பானவர்கள் ஐந்து பேர்! கர்நாடகம், தமிழ்நாடு, புதுவை மாநிலங்களுக்கு தலா ஒரு வாக்கு!

இந்திய அரசுதான் மேக்கே தாட்டு அனுமதிப் பொருளை ஆணையக் கூட்டத்தில் முன்வைக்கிறது. இந்திய நீராற்றல் துறை அமைச்சரும் துரைமுருகனிடம் ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு கலந்து கொண்டு விவாதிக்க வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசு அதிகாரிகள் 5 + கர்நாடக வாக்கு 1 ஆக மொத்தம் 6 வாக்குகள் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாகக் கிடைத்து விடும்.

கேரளத்தின் 1 வாக்கு மேக்கேதாட்டுக்கு எதிராகப் போட்டாலும் அத்துடன் + தமிழ்நாடு + புதுவை சேர்த்தால் மூன்று வாக்குகள் மட்டுமே நமக்கு கிடைக்கும். தமிழ்நாட்டிற்கு ஆணையத்தில் பெரும்பான்மை உள்ளது என்று எந்தக் கணக்கை வைத்துத் துரைமுருகன் சொன்னார்?
வாக்கெடுப்பு நடத்துவதற்கான அடிப்படைக் கோரம் 6 பேர்! எனவே தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை அதிகாரிகள் வெளி நடப்புச் செய்து விட்டாலோ அல்லது கூட்டத்தைப் புறக்கணித்தாலோ – ஆணையக் கூட்டத்தை நடத்தித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான அடிப்படைக் “கோரம்” (குறைந்தபட்ச கூட்ட உறுப்பினர்) தேவையை இந்திய அரசும் கர்நாடகமும் நிறைவு செய்ய முடியும். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் மேக்கேதாட்டு அணையை கட்ட முடியாது என்று செகாவாத் சொன்னதாக துரைமுருகன் கூறுகிறார். உண்மையான மனநிலையில் அவர் கூறினால், தமிழ்நாடு அரசு வராவிட்டாலும் ஆணையக் கூட்டத்தை நடத்தி அணைப் பற்றி பேசுவோம் என்று அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் எந்த துணிச்சலில் சொல்கிறார்?

இந்திய நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவாத் கைவிரித்து விட்ட நிலையில் தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது. மேக்கேதாட்டை எப்படித் தடுக்கப்போகிறது என்பதை முதலமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

"காவிரித் தாய் மார்பறுக்க வரும் ஹல்தரே திரும்பிப் போ!, காவிரி உரிமை மீட்புக் குழு கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! "--- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!


காவிரித் தாய் மார்பறுக்க வரும்

ஹல்தரே திரும்பிப் போ!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு
கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
======================================

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர், நடுநிலை தவறிய நபர்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே துச்சமாக புறக்கணிக்கக்கூடியவர். காவிரி ஆணையக் கூட்டத்தின் வழியாக ஒரு தடவைகூட கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தராதவர். அதற்கான முயற்சியில் ஈடுபடாதவர்.

அவர், உச்ச நீதிமன்றம் விதித்த அதிகார வரம்பை மீறி, கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கக்கூடிய ஆவேசத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரம் ஆணையத்திற்குக் கிடையாது. அண்மையில் இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் அறிவுரையைப் பெற்றதாகவும், அது மேக்கேதாட்டில் அணை கட்டுவது குறித்து முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது எனக் கூறியதாகவும், அடுத்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேக்கேதாட்டு பற்றிய பொருள் விவாதிக்கப்படும் என்றும் 06.06.2022 அன்று செய்தி வெளியிட்டார்.

மேற்படி ஆணையத்தின் கூட்டம் 17.06.2022 அன்று புதுதில்லியில் நடைபெறும் என்று அறிவித்த ஹல்தர், இப்பொழுது அக்கூட்டத்தை 23.06.2022-க்கு மாற்றி வைத்துவிட்டு, தமிழ்நாட்டுக் காவிரி அணைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்வதாகக் கூறிக் கொண்டு, நேற்று (16.06.2022) பில்லிகுண்டுலு பகுதியைப் பார்வையிட்டுள்ளார். இன்று (17.06.2022) – முற்பகல் மேட்டூர் அணை மற்றும் சரபங்கா கால்வாய்த் திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டுவிட்டு, மாலை 3 மணிக்கு திருச்சி கல்லணையைப் பார்வையிட வருவதாக அறிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழுவும், மற்றும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்க தடையாணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஹல்தரின் நடுநிலை தவறிய மேக்கேதாட்டு ஆதரவுப் போக்கைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இப்பின்னணியில், பருவம் தவறிப் பெய்த மழையினால் மேட்டூர் அணை நிரம்பியிருப்பதையும் காவிரி டெல்டா பகுதிகளுக்குத் தண்ணீர் தாராளமாகப் பாய்ந்து கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் கர்நாடகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என ஆணையக் கூட்டத்தில் பேசவும், தமிழ்நாடு அரசும் கர்நாடகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேட்டூர் – சரபங்கா கால்வாய்த் திட்டம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது என்று பொருத்தமற்ற இலாவணிக் கச்சேரி பாடுவதற்காகவும் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டிருப்பதாக ஐயம் ஏற்படுகிறது.

ஏனெனில், அவர் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஒரு தடவை கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி வாராவாரம் / மாதாமாதம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறந்துவிடச் செய்து செயல்படுத்திக் காட்டியதே இல்லை! பருவமழை மற்றும் பருவந்தவறிய மழை வெள்ளங்களால் மிகை நீரைக் கர்நாடகம் திறந்துவிட்டதை ஒட்டியும், கர்நாடக அணைகளுக்குக் கீழ்ப் பகுதியிலும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலும் மழை நீர் ஓடி வந்ததாலும் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்து, கடந்த சில ஆண்டுகளாக குறுவை – சம்பா சாகுபடி நடந்து வருகிறது. அத்துடன், கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காலத்தில் கூட இந்த ஹல்தர் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை.

மனச்சான்று உருத்தலின்றி, நடுநிலை தவறி கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணையாக செயல்படக்கூடிய நபர் இந்த ஹல்தர் என்பதை மோடி அரசு புரிந்து கொண்டுதான், இவருடைய பணி ஓய்வுக்குப் பிறகு இவரை ஐந்தாண்டுகளுக்குக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அமர்த்தியது. இவர் இந்திய அரசின் நீராற்றல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனுப்புமாறு இவரே வலிந்து கேட்டு வாங்கி, அதற்கு அனுமதி கொடுத்து, அதை காவிரி மேலாண்மை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைத்தார்.

இப்பொழுது அந்த மேக்கேதாட்டு திட்டத்திற்கு ஆணையம் அனுமதி கொடுப்பதற்கு எல்லா சதிகளையும் செய்கிறார். நம்முடைய காவிரித் தாயின் மார்பறுக்க வரும் ஹல்தருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று கண்டன முழக்கமெழுப்புவது தமிழ்நாட்டு உழவர்களின் கடமை மட்டுமல்ல, அனைத்து மக்களின் கடமையுமாகும்!

காவிரி உரிமை மீட்புக் குழு உழவர் பெருமக்களும் உணர்வாளர்களும் இன்று (17.6.2022) பிற்பகல் 2.30 மணி முதல் கல்லணையில் திரண்டு, அங்கு வரும் எஸ்.கே. ஹல்தருக்குக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று அறவழியில் முழங்குவார்கள்! வாய்ப்புள்ள தமிழ் மக்கள் அனைவரும் இந்தக் காவிரிக் காப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger