தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » , , , » "குறுவை நெல் கொள்முதல் ஈரப்பதம் 20% ஆக்க வேண்டும்! சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்!" ---- முதலமைச்சருக்குக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை!

"குறுவை நெல் கொள்முதல் ஈரப்பதம் 20% ஆக்க வேண்டும்! சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்!" ---- முதலமைச்சருக்குக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை!


குறுவை நெல் கொள்முதல் ஈரப்பதம் 20% ஆக்க வேண்டும்!

சிப்பத்திற்கு 40 ரூபாய் கையூட்டு வாங்குவதைத் தடை செய்ய வேண்டும்!
=============================================================
முதலமைச்சருக்குக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் கோரிக்கை!


நெல்லை உற்பத்தி செய்வதிலிருந்து அதை விற்பது வரை, ஒரு வேண்டாத வேலையை உழவர்கள் செய்வது போலவே இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் நடந்து கொள்கின்றன. நெல்லுக்கு இலாப விலை நிர்ணயிக்கக் கூடாது, கட்டுப்படியான விலைதான் நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய அரசு வரம்பு வைத்திருக்கிறது. அந்தக் கட்டுபடியான விலையையும் வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் வகுத்தளித்த விலை நிர்ணய அடிப்படையில் இந்திய அரசு தீர்மானிப்பதில்லை. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களின் சந்தை விலைஉயர்வு விகிதத்தற்குச் சமமாக நெல்விலை உயர்த்தப்படுவதில்லை.

அடிமாட்டு விலைக்கு நிரணயிக்கப்பட்ட நெல்லையும் ஆட்சியாளர்கள் உரிய அக்கறையுடன், நேர்மையாக, இலஞ்சஊழல் இல்லாமல் கொள்முதல் செய்வதில்லை.
நேரடி நெல் கொள்முதல் நிலையைங்கள் சிலவற்றைத் தஞ்சை, திருவையாறு பூதலூர் ஒன்றியங்களில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நான், காவிரி உரிமைமீட்புக்குழு பொருளாளர் த. மணிமொழியன், செயற்குழு உறுப்பினர்கள் துரை. இரமேசு, பொறியாளர் தி. செந்தில்வேலன், பூதலுர் சுந்தரவடிவேலு, பா. தட்சிணாமூர்த்தி ஆகியோர் அண்மையில் பார்வையிட்டோம். நெல்லை விற்பனை செய்த உழவர்கள், கொள்முதல் செய்யும் ஊழியர்கள், கொள்முதல் நிலையத்திலேயே வந்து நெல்லை வாங்கிச் செல்லும் தனியார் வணிகர்கள் என்று பலரையும் சந்தித்தோம்.

ஈரப்பதம் 20 % என மாற்றுக!
==========================
பதினேழு விழுக்காடுவரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். அங்கு வாங்க மறுத்து குவிக்கப்பட்டிருந்த நெல்லை அள்ளிப் பார்த்தோம். ஈரநெல்லாக இல்லை. கோடைக்கால சம்பா நெல்போல்தான் இருந்தது. ஆனால், அதில் 19 விழுக்காடு ஈரப்பதம் இருப்பதாக வாங்க மறுத்துள்ளனர். குறுவை நெல்லில் கொஞ்சம் கூடுதலாக ஈரப்பதம் இருப்பது இயற்கைதான். அதனால் ஆட்சியாளர்கள் குறுவை நெல் அறுவடை முடியும் தருவாயில் 20 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்யத் தளர்வு ஏற்படுத்துவது கடந்த ஆண்டுகளில் நடந்து வந்துள்ளது. அத் தளர்வை இப்போதே ஏற்படுத்தி, 20 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தொடரும் துயர வாழ்க்கையில் உழலும் உழவர்களுக்கு உழவர்கள் கை கொடுத்து உதவியதாக இருக்கும்.

நெல் விற்கக் கையூட்டு
======================
அடுத்து ஆட்சியாளர்கள் – அதிகாரிகள் ஆகியோரின் மறைமுக அனுமதியோடு நடக்கும் ஓர் அநீதி, 40 கிலோ கொண்ட ஒரு சிப்பம் நெல்லை விற்றால் அதற்கு உழவர்கள் நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர்க்கு 40 ரூபாய் இலஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இவ்வாறு ஏன் வாங்குகிறீர்கள் என்று ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு ஒரு மூட்டை நெல்லுக்கு நிர்ணயித்துள்ள கூலி குறைவு. வெறும் 10 ரூபாய்தான். அதை ஈடுகட்டினால்தான் தொழிலாளிகள் வருவார்கள். அடுத்து கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்ற வரும் தனியார் சரக்குந்துகளுக்கு ஒரு வண்டிக்கு நான்காயிரம் ரூபாய் நாங்கள் கொடுத்தால்தான் அவர்கள் மூட்டைகளை ஏற்றுவர்கள். அவர்களின் சரக்குந்து, நெல்மூட்டைகளை இறக்கும் சேமிப்புக் கிடங்குகளில், மூன்று நாள்வரை கூட காத்திருக்க வேண்டி வரும். ஓட்டுநர் உள்ளிட்டோர் உணவுச் செலவு கூடுதல் சம்பளம் போன்றவற்றை நாங்கள் கொடுத்தால்தான் சரங்குந்துகள் எங்கள் கொள்முதல் நிலையத்திற்கு வந்து ஏற்றிச் செல்லும். நாங்கள்தான் சரக்குந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கிறது என்றார்கள் ஊழியர்கள்.

மேற்கண்டவாறு ஊழியர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வுகண்டு இலஞ்ச ஊழல் இல்லாத கொள்முதல் நிர்வாகத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தனியார் வேட்டை
==================
அரசுக் கொள்முதல் நிலையத்தில் மேற்கண்ட சுமைகளச் சுமக்காமல், காலதாமதம் ஆகாமல் நெல்லை விற்பதற்கு உழவர்கள் தனியார் வணிகர்களை நாடுகிறார்கள். தனியார் வணிகர்களும் கொள்முதல் நிலையங்களுக்கே வந்து அரசு நிர்ணயித்த விலையைவிடக் குறைவாகக் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். 1 மூட்டை நெல்லின் எடை 63 கிலோ என்று கூடுதலாக நிர்ணயித்து அவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். உடனடிப் பணத்தேவை, நெல்லைச் சேமிக்க முடியாத நிலை ஆகியவை காரணமாக அரசு விலைக்கும் குறைவாக – அதிக எடையுடன் நெல்லை விவசாயிகள் விற்கிறார்கள். அப்படி நெல்லை வாங்குவோர் பிளாஸ்டிக் நார் சாக்குகளில் நெல் பிடிக்கிறார்கள். சணல் சாக்குகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.

தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் உலகநாடுகளுக்கெல்லாம் சென்று பெரும்பெருந் தொழில் முதலாளிகளை இங்கு அழைத்து வந்து அவர்கள் தொழில் தொடங்க பல்வேறு சலுகைகள் செய்கிறார்கள். உயிர்காக்கும் உணவு உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு அவர்கள் நீதிவழங்கக் கூடாதா? உழவர்களையும் கவனியுங்கள்!

நெல் கொள்முதல் நிலையங்கள்
=================================
நெல் உற்பத்தி செய்யும் பல்வேறு கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. இருக்கும் இடங்களிலும் இரவல் முறையில், பல்வேறு ஊர்களில் சேமிப்புக் கிடங்குகளிலோ மற்ற இடங்களிலோ இருக்கின்றன. உழவர்கள் நெல் கொள்முதல் நிலையம் கோரும் ஊர்களில், 40 சென்ட் நிலம் வாங்கித் தாருங்கள் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உழவர்களையே கேட்கிறார்கள். நிலத்தின் விலை மிகமிக உயரத்தில் இருக்கிறது. உழவர்கள் வாங்கித்தர வாய்ப்பில்லை. அப்படி உழவர்களிடம் அரசு கேட்பதும் முறைஇல்லை. அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ள பூதலூர், கோயில்பத்து போன்ற கிராமங்களில் கூட நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமாக கொள்முதல் நிலையங்கள் இல்லை என்பது வேதனை அளிக்கும் செய்தியாகும்.

தமிழ்நாடு அரசு நெல்கொள்முதல் செய்யவில்லை. இந்திய அரசுக்குக் கொள்முதல் செய்யும் முகவராக இருக்கிறது என்பதைக் காரணம் காட்டி, தமிழ்நாடு அரசு மேற்படி குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. வெறுந் தரகர் அல்ல தமிழ்நாடு அரசு! மக்கள் குறைகளைக் களைய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. எனவே, குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

......

=============================================================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger