தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » , , , » "காவிரி: கன்னட இனச் சிக்கல் என்கிறார் சித்தராமையா! தமிழர்களே சிந்திப்பீர்!" ---- பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர் காவிரி உரிமை மீட்புக்குழு.

"காவிரி: கன்னட இனச் சிக்கல் என்கிறார் சித்தராமையா! தமிழர்களே சிந்திப்பீர்!" ---- பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர் காவிரி உரிமை மீட்புக்குழு.


காவிரி: கன்னட இனச் சிக்கல்

என்கிறார் சித்தராமையா!
தமிழர்களே சிந்திப்பீர்!
====================================================
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்
காவிரி உரிமை மீட்புக்குழு
நாள் 24.8.2023
======================================================


தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி திறந்து விட வேண்டிய காவிரி நீரைத் தடுத்து, தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்காகக் கர்நாடகத்தில் அம்மாநில காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் 23.8.2023 அன்று பெங்களூரில் நடந்துள்ளது. அதில் பாசக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளார்கள். அனைவரும் ஒருமித்துத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது, கர்நாடகத்திற்கே தண்ணீர் போதாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவரிடம் வலியுறுத்தி, தங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை அரங்கேற்றிக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்கள். இன்றைய (24.8.2023) நாளேடுகளில் இச் செய்தி வந்துள்ளது.

அந்தக் கூட்டத்தில் அபாண்டமான பொய் ஒன்றையும் கூச்ச நாச்சமில்லாமல் பேசியுள்ளார்கள். அதைச் செய்தியாளர்களிடம் அப்படியே கூறியுள்ளார் சித்தராமையா! “காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 22 கூட்டங்களையும் ஒழுங்காற்றுக் குழு 84 கூட்டங்களையும் நடத்தியுள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஆணையம், ஒழுங்காற்றுக் குழு அளித்துள்ள ஆணையைக் கர்நாடகம் அமுல்படுத்தி வருகிறது” என்று முழுப் பொய்யை முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். காவிரி ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் ஒரு முடிவைக் கூட – உத்தரவைக் கூட கர்நாடக அரசு செயல்படுத்தியதில்லை. அங்கு காங்கிரசு, பாசக, மதச் சார்பற்ற சனதா தளம் கட்சிகளின் முதலமைச்சர்கள் ஆட்சி செய்த காலங்களில் ஒரு தடவை கூட கர்நாடகம் காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு வழங்கிய உத்தரவுகளைச் செயல்படுத்தியதில்லை.

தமிழ்நாட்டிற்கு, சூன் முதல் ஆகத்து 10 வரை கர்நாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீர் 53.7703 டிஎம்சி. இதில் வெறும் 15.7993 டிஎம்சி மட்டுமே திறந்துவிட்டுள்ளது. பாக்கியுள்ள 37.9710 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டுதான், 10.8.2023 அன்று கூடிய ஒழுங்காற்றுக் குழு ஒரு நொடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், கர்நாடகம் திறந்து விடவில்லை. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றம் போகிறது என்றவுடன் தண்ணீர் கூடுதலாகத் திறந்து விடுவதாகப் பாசாங்கு காட்டி, பின்னர் தண்ணீரைக் குறைத்து விட்டது கர்நாடகம்.

காவிரிச் சிக்கல் இனச் சிக்கல் என்கிறார் சித்தராமையா:

சித்தராமையா அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்குக் கொடுத்த செவ்வியில் முத்தாய்ப்பாக ஒரு கருத்தை அழுத்திச் சொன்னார்.

”கர்நாடகத்தில், தாயகம், தண்ணீர், மொழி ஆகிய சிக்கல்களில் யாரும் அரசியல் செய்வதில்லை” என்றார். இந்தச் சிக்கல்களைப் பயன்படுத்தி இங்கு கட்சிகள் ஒன்றை ஒன்று சாடிக் கொள்வதில்லை, பிளவு படுவதில்லை என்பது இதன் பொருள். அதாவது, கன்னட இனச்சிக்கலில் கர்நாடகக் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதில்லை என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில், தமிழர் தாயகம், தண்ணீர், தமிழ்மொழி உரிமைகளுக்காக எப்போதாவது சேர்ந்து செயல்பட்டதுண்டா? இங்கே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறதா? கூடினாலும் தாயகம், இனம், மொழி, தண்ணீர் உரிமைச் சிக்கல்களில் ஒன்று சேர்ந்து இக்கட்சிகள் முடிவு எடுக்க முடியுமா?

பதவி வேட்டை, பணவேட்டை இரண்டை மட்டுமே இலட்சியங்களாகக் கொண்டு செயல்படுபவை தமிழ்நாட்டுப் பெரிய கட்சிகள்! கர்நாடகத்திலும் ஊழல் மற்றும் பதவி வேட்டை அரசியல் வாதிகள் இருக்கிறார்கள்! ஆனால், அம்மாநிலத்தில் மொழி, இனச் சிக்கல்களில் கட்சிகள் ஒன்று சேர்ந்து கொள்கின்றன. அப்படி அவை அச்சிக்கல்களில் ஒன்று சேரவில்லை என்றால் அம்மாநில மக்கள் அக்கட்சிகளை எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் அவ்வாறான மக்கள் விழிப்புணர்ச்சி, மொழி, இனம், தாயகம் ஆகியவற்றில் உண்டா? இல்லை.

தாயகம், தாய்மொழி, ஆற்றுநீர் உரிமை போன்ற அடிப்படை உரிகைளில் தமிழர்களுக்குப் போதிய அக்கறை இல்லை என்பதை நம் மக்கள் உணர்ந்து தங்களின் விழிப்புணர்ச்சியை, பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அலுவலகத் தேவைகளுக்கு “இந்தியர்“ என்று சொல்லிக் கொண்டு, அடிமனம் முழுவதும் ”கன்னடர்” என்ற இன உணர்ச்சி அவர்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பது போன்ற குறுக்குச் சால் ஓட்டும் திராவிட இனக் குழறுபடிகள் கர்நாடகத்தில் இல்லை. அவர்களின் கன்னட இனப்பற்றை நாம் எதிர்க்கவில்லை; அவர்களின் கன்னட வெறியையும், தமிழின வெறுப்பையும்தான் நாம் கண்டிக்கிறோம்.

தமிழ்நாடு அரசு இப்போது போட்டுள்ள உச்ச நீதிமன்ற வழக்கிலும், காவிரியில் தமிழ்நாட்டிற்குள்ள தமிழ்நாட்டு உரிமைகளை எதிர்த்தும், உச்ச நீதிமன்றம் தீர்பளித்த காவிரிநீர் பகிர்வைச் செயல்படுத்த முடியாது என்பதை வலியுறுத்தியும் கர்நாடகம் கடுமையாக வாதிடும். உச்சநீதி மன்றம் இடைக்கால நிவாரணமாக ஏதாவது தீர்ப்பளித்தால், அதை எதிர்த்துக் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கலாம். ஏற்கெனவே 1991 மற்றும் 2016 உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராகத்தான் முறையே தமிழினப்படுகொலைகளும், வன்முறைகளும், தமிழர் சொத்துகள் சூறையாடல்களும் கன்னடர்களால் நடத்தப்பட்டன; அதேபோல் கர்நாடகத் தமிழர்களை இழிவுபடுத்தியதும் அரங்கேறின. கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு இப்போது தமிழ்நாட்டுத் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கன்னட இனவெறி ஆட்டங்களைத் தடுக்கும் உத்திகள் வகுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு கர்நாடகத்திற்கு ஆய்வுக்குழுவை அனுப்பி, காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் உள்ள நீர்த்தேக்கங்கள் சிறியவை, பெரியவை அனைத்திலும் தண்ணீர் தேக்கப்பட்டுள்ள அளவுகளைத் தெரிந்து வரச் செய்ய வேண்டும். அதேபோல் மழைப் பொழிவு அளவுகளையும் அறிந்துவரச் செய்ய வேண்டும்.

மேகேதாட்டு அணைக்கான அடிப்படைகள் தொடங்கி நடந்து வருகின்றன. அதற்கு உச்சநீதி மன்றத்தில் தடைகோர வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் கூட்டி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்து விடக் கோரி, மக்கள் திரள் போராட்டங்கள் நடத்த வேண்டும்.

நமது காவிரி உரிமை மீட்புக்குழு கடந்த 22.8.2023 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நடுநிலை தவறி, கர்நாடகத்திற்குச் சாதகமாக நடந்து கொள்ளும் நயவஞ்சகர். அவரை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நடுநிலைப் பண்புள்ள அதிகாரி ஒருவரைத் தலைவராக்க வேண்டும் என்று அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தோம். தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையை இந்திய அரசிடம் வைக்க வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு தலைமை அமைச்சர் மோடியைச் சந்தித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி நீர் திறந்துவிடத் தலையிடும்படிக் கோர வேண்டும்.

தமிழ்நாடு அரசு இவற்றைச் செயல்படுத்த மறுத்தால், தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் உயிர்நாடியாக உள்ள காவிரி உரிமையைக் காக்க, மக்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும்.

===============================================================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
www.kaveriurimai.com
==========================
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger