தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


" மேக்கேதாட்டைத் தடுக்க சட்டமன்றத் தீர்மானம் பயனில்லை! மக்களே வீதிக்கு வாருங்கள்!"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பளார் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!


 மேக்கேதாட்டைத் தடுக்க
சட்டமன்றத் தீர்மானம் பயனில்லை!
மக்களே வீதிக்கு வாருங்கள்!
===========================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பளார் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
============================================

கர்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 21.03.2022 அன்று ஒருமனமாக நிறைவேற்றப்பட்டது. இதை முன்மொழிவதற்கு முன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரை 1967-லிருந்து இன்று வரை தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர் உரிமையைத் தி.மு.க. ஆட்சியாலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாலும் மீட்க முடிய வில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமாக உள்ளது.

“அண்ணா ஆட்சியிலிருந்து மு.க.ஸ்டாலின் ஆட்சி வரை - இதுவரை காவிரி உரிமையை மீட்க முடியவில்லை; என்று தணியும் காவிரித் தாகம்; நமது கொள்ளுப் பேரன் காலம் வரை காவிரிச் சிக்கல் தீராதோ என்கிற கவலை ஏற்பட்டுள்ளது” என்றெல்லாம் துரைமுருகன் பேசியுள்ளார்.

ஆனால் கடந்த காலங்களில் காவிரி உரிமையை மீட்டதாக தி.மு.க.வினரும் அ.இ.அ.தி.மு.க.வினரும் மாறி மாறி “வெற்றி முழக்கங்கள்“ எழுப்பியுள்ளார்கள். வெற்றி விழாக்கள் கொண்டாடி உள்ளார்கள்.

வாஜ்பாயி தலைமை அமைச்சராக இருந்த போது, 1998 ஆகத்து மாதம் 7,8 இரு நாட்கள் அவர் தலைமையில் கர்நாடகமும் தமிழ்நாடும் காவிரி ஒப்பந்தம் போட்டன. அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி. கலைஞர் கருணாநிதி முதலமைச்சர்: அந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளைப் பறி கொடுக்கிறது என்று அப்போதே எமது தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி) எச்சரித்தது; கண்டனம் செய்தது.

அந்த ஒப்பந்தப்படி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் தலைவர், இந்தியத் தலைமை அமைச்சர்; தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், பதுச்சேரி மாநிலங்களின் முதலமைச்சர்கள் உறுப்பினர்கள். அந்த ஆணையக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து உடன்பாடு (Consensus) ஏற்பட்டால்தான் எந்த முடிவும் எடுக்க முடியும் என்பது நிபந்தனை. தண்ணீர்ப் பகிர்வை அறிவித்துச் செயல்படுத்தும் தற்சார்பு அதிகாரம் அந்த ஆணையத்திற்குக் கிடையாது. “எலி பிடிக்காதது பூனையா, அதிகாரம் இல்லாதது ஆணையமா?” என்று கேட்டு அதை எதிர்த்து மாநாடும் கூட்டங்களும் நடத்தினோம். தஞ்சை பெசன்ட் அரங்கத்தின் வெளித் திடலில் மேடை போட்டு நடந்த மாநாட்டில் தமிழக விவசாய சங்கத் தலைவர் டாக்டர் எம்.ஆர் சிவசாமி அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள், காவிரி உரிமை போராளி மூத்த வழக்கறிஞர் ஐயா பூ.அர.குப்புசாமி அவர்கள், விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயா கோபால தேசிகன் அவர்களும் மற்றும் ஒத்த கருத்துள்ள இயக்கத்தின் தலைவர்களும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நானும் கண்டன உரையாற்றினோம்.

ஆனால் இந்த ஒப்பந்தத்திற்காக தஞ்சாவூர் திலகர் திடலில் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குப் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்து, “காவிரி கொண்டான்” என்று பட்டம் கொடுக்கச் செய்தார்கள்.

அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் நாள் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வந்தது. அது தமிழ் நாட்டிற்குக் கர்நாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீரை மேலும் குறைத்து 192 டி.எம்.சி. ஆக்கியது. கர்நாடகத்தின் பாசனப் பரப்பை 11.05 இலட்சம் ஏக்கரிலிருந்து 22 இலட்சம் ஏக்கர் வரை உயர்த்தியது. அதையும் வரவேற்ற அப்போதைய முதல்வர் கருணாநிதி. “ஞாயத் தீர்ப்பு; ஆறுதல் அளிக்கிறது” என்று செய்தியாளர்களிடம் கூறினார். “மகிழ்ச்சி, மகிழ்ச்சி” என்று கொண்டாட்ட முழக்கம் எழுப்பினார் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன். இருவரும் அப்போது புதுதில்லியில் இருந்தார்கள். இடைக்காலத் தீர்ப்பு 205 டி.எம்.சி; இறுதித் தீர்ப்போ 192 டி.எம்.சி. அதையும் ஞாயத் தீர்ப்பு என்றார்கள்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் இறுதித் தீர்ப்பு நகலை எரித்துக் கைதானோம். பல்வேறு உழவர் அமைப்புகளும் அத்தீர்ப்பை எதிர்த்துப் போராடின. அதன் பிறகு அத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு போட்டது தி.மு.க. ஆட்சி.

ஆனால் அந்தத் தீரப்பையும் அரசிதழில் வெளியிட்டுச் செயல்படுத்த மறுத்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு ஆட்சி. அந்தக் காங்கிரசு ஆட்சியில் கூட்டணி அமைச்சர்களாக இருந்தனர் தி.முக.வினர்.

பின்னர் 2011-இல் முதல்வரான செயலலிதா வற்புறுத்தலின் பேரில், மன்மோகன் சிங் ஆட்சி 2013-இல் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பை இந்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது. ஆனால் செயல்படுத்தும் ஆணையம் அமைக்க மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்தத் தீர்ப்புப்படி 18.05.2018-இல் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், 177.25 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்ட காவிரி நீரை தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தரவில்லை. ஆனால் ஒவ்வொரு ஆணையக் கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைக்கான அனுமதியை நிகழ்ச்சி நிரலில் ஒரு பொருளாக முன்வைக்கிறது. ஒரு தலைச்சார்பான அந்த ஆணையத் தலைவர் ஹல்தரை நீக்கவோ, அந்த ஆணையத்தைக் கலைத்து, புதிய ஆணையம் அமைக்கவோ அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை. இப்போதைய சட்டமன்றத் தீர்மானமும் அவ்வாறு கோரவில்லை.

“நீங்கள் யோக்கியனா, நான் யோக்கியனா என்று பேசுவதை விட்டுவிட வேண்டும் “ என்று இப்போது பேசுகிறார் துரைமுருகன். “நமது காலத்தில் இந்த காவிரி பிரச்சனையைத் தீர்த்து வைக்காவிட்டால், பின்னர் வரும் சமுதாயம் நம்மைக் காரி துப்பும்” என்கிறார்.

இவ்வளவு தீவிரமாகப் பேசி, மேக்கேதாட்டு தீர்மானத்தை முன்வைத்தனர். அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அத்தீர்மானம் மறுபடியும் இந்திய அசுக்கு வேண்டுகோள் வைத்து, மேக்கேதாட்டை அனுமதிக்காதீர் என்ற கோரிக்கையுடன் முடிந்துவிட்டது.

தமிழ்நாடு தழுவிய மக்கள் எழுச்சிப் பேரணி; ஆர்ப்பாட்டம் போன்ற எந்த செயல் திட்டத்தையும் அத்தீர்மானம் முன்வைக்கவில்லை.

ஐம்பதாண்டுகளுக்கு மேலாகக் காவிரிச் சிக்கலில் எதையும் சாதிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு வராமல் காவிரி நீரை தடுக்க கர்நாடக அரசு புதிது புதிதாக கட்டிய அணைகளை தமிழ்நாட்டு ஆட்சியாளர்களாலும், கட்சிகளாலும் தடுக்க முடியவில்லை. இந்திய அரசின் சூழ்ச்சிகளைத் தடுக்க முடியாத தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளையோ, அக்கட்சிகளையோ மீண்டும் எதிர்பார்த்து, செயலற்றுத் தமிழ்நாட்டு மக்கள் இருந்தால், மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டி முடித்து விடும். அப்படித்தான் 1970 களில் ஏமாவதி, ஏரங்கி, கபினி, இலட்சுமண தீர்த்தா முதலிய சட்ட விரோத அணைகளைக் கட்டி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் வராமல் தடுத்துள்ளது. இந்த அணைகள் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசும் தஞ்சை மாவட்ட உழவர்கள் அமைப்பும் உச்சநீதி மன்றத்தில் 1971-இல் போட்ட வழக்கை, அன்றைய தலைமை அமைச்சர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, வழக்குகளை 1972-இல் திரும்பப் பெற்றார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்கேதாட்டு கட்டப்பட்டுவிட்டால் ஒரு சொட்டு நீர் மேட்டூர் வராது.
தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் காவிரி நீர் உரிமை நீர் ஆகும். அது குடிநீராக, பாசன நீராக நம் உயிரோடு கலந்துள்ளது. தமிழ்நாடு தழுவிய அளவில் மக்கள் திரள் எழுச்சியை உருவாக்க வேண்டும். “இனப் பாகுபாடு காட்டும் இந்திய அரசே மேக்கேதாட்டை தடுத்து நிறுத்து” என்று முழங்கி தமிழ்நாடு தழுவிய அளவில் மக்கள் ஆயிமாயிரமாய் அணிவகுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

"மேக்கேதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டது! தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது...?"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!


 மேக்கேதாட்டில் அணை கட்ட
கர்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டது!
தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?
=======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!
=======================================

கர்நாடக அரசு 2022-2023 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மேக்கே தாட்டில் அணைகட்ட ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நிதி நிலை அறிக்கையை முன்வைத்து சட்டப் பேரவையில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் இந்திய அரசு ஒப்புதல் பெற்று அணைகட்டியே தீருவோம் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

சட்டவிரோத மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் துணை நிற்பதை பார்த்து வந்துள்ளோம். ஆனால் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் இப்போது தி.மு.க ஆட்சிகாலத்திலும் சட்ட விரோத மேக்கே தாட்டு அணை கட்டப்படாமல் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அணை கட்ட விடமாட்டோம் என்று பொத்தாம் பொதுவில் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அறிக்கை வெளியிடுவது தொடர் சடங்காகிவிட்டது.

கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற ஒரு கோரிக்கையைக் கூட தமிழ்நாடு அரசு முன்வைக்கவில்லை. மேக்கேதாட்டு அணைக்கு தடை வித்திக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வழக்கை விரைவு படுத்துவதற்கு சட்ட முயற்சிகள் எதையும் தமிழ்நாடு அரசு செய்யவில்லை.

சட்டத்திற்குப் புறம்பாகக் கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணைக்கட்ட மோடி அரசு துணை போகிறது. இந்த அநீதியைக் கண்டித்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து உழவர் அமைப்புகள் சார்பில் வெகு மக்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட சனநாயக போராட்டங்களை நடத்த தமிழ்நாட்டு ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ முன்முயற்சி எடுக்கவில்லை. தி.மு.க.வும் அ.தி.மு.கவும் காவிரி சிக்கலில் ஒருவரை எதிர்த்து ஒருவர் இலாவணி கச்சேரி நடத்திக் கொண்டுள்ளன.

1970-களில் அன்றைய ஒன்றிய காங்கிரசு ஆட்சியின் மறைமுகத் துணையோடு கர்நாடகம் சட்டவிரோதமாக ஹேமாவதி, ஹேரங்கி, கபினி அணைகளைக் கட்டியதை நாம் அறிவோம். அதனால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் தடுத்துக் கொண்டு நமக்குப் பேரிழப்புகள் உண்டாக்கியுள்ளதை நாம் அறிவோம்.

தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் ஆதாரமாய் உள்ள காவிரி உரிமையைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்; ஆட்சியாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

" மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை! அதன் தலைவரை நீக்க வேண்டும்!"--- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!


மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை!
அதன் தலைவரை நீக்க வேண்டும்!
=========================================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
=========================================================

மூன்று தடவை தள்ளி வைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நேற்று (11.02.2022) அன்று காணொலி வாயிலாக நடந்துள்ளது. இந்தக் கூட்டம் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிப்பதற்கான தனிச் சிறப்புக் கூட்டம் என்று மேலாண்மை ஆணையத் தலைவர் செளமித்திர குமார் ஹல்தர் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து விவாதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதனால் மேக்கேதாட்டு அணை விவரம் பேசாமலேயே, இரண்டு மணி நேரம் அக்கூட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

தமிழ்நாட்டை இணங்க வைப்பதற்காக இந்திய அரசு அதிகாரிகள் அவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்று ஊகிக்க முடிகிறது.

உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கபட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படித் தண்ணீர்ப் பகிர்வைக் கண்காணித்து செயல்படுத்தும் அதிகாரம் மட்டுமே கொண்டுள்ளது. கர்நாடகம் புதிய அணை கட்டுவது பற்றி விவாதிக்கவோ முடிவு எடுக்கவோ அதற்கு அதிகாரம் இல்லை.

ஒன்றிய பா.ச.க. ஆட்சியினரின் தூண்டுதலால், அதிகார அத்துமீறலில் இறங்கி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி தருவது பற்றிய பொருளை நிகழ்ச்சி நிரலில் சேர்த்து வருகிறது.

மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து விவாதிப்பதற்கும் முடிவு எடுப்பதற்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்ற உண்மையைத் தமிழ்நாடு அரசு வெளிப்படையாக இதுவரை கூறாதது ஏன்?

மேக்கேதாட்டு அணைக்குத் தடை கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அணை பற்றி ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என்று மட்டும் தமிழ்நாடு அரசு காரணம் கூறிவருவது போதுமானது அல்ல.

காவிரித் தீர்ப்பாயம் 2007-ஆம் ஆண்டு அளித்த இறுதித் தீரப்பைச் செயல்படுத்துவது குறித்த வழக்கில் உச்ச நீதி மன்றம் 16.02.2018 அன்று தீர்பளித்தது. அதில், தண்ணீர்ப் பகிர்வு அளவில் மட்டுமே மாற்றம் செய்திருக்கிறோம், மற்றவற்றில் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு செல்லுபடியாகும் என்று கூறியுள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (மேலாண்மை வாரியத்திற்கு) தண்ணீர் பகிர்வு தன்னாட்சி அதிகாரம் மட்டுமே வழங்கியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான செயல் என்று கூறி, அந்த ஆணையத்தின் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும்.

இப்பொழுது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள செளமித்திர குமார் ஹல்தர், இதற்கு முன் ஒன்றிய அரசின் நீராற்றல் துறையின் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். காவிரி ஆணைய நிரந்தரத் தலைவர் பதவியை ஐந்தாண்டுகளுக்கு மோடி அரசு அவருக்குப் பரிசாக வழங்கியிருக்கிறது. அதற்கு நன்றிக் கடனாக, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைக் கர்நாடகம் தடுத்துப் பயன்படுத்திக் கொள்ள மேக்கேதாட்டிற்கு அனுமதி கொடுக்கத் துடிக்கிறார் ஹல்தர்.

இதே எஸ்.கே.ஹல்தர் நீராற்றல் துறைத் தலைவராக இருந்த போதுதான் மேக்கேதாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடக அரசிடம் கேட்டு வாங்கி, அதைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தார்.
எனவே, ஹல்தரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், தண்ணீர்ப் பகிர்வை மட்டும் செயல்படுதும் தன்னாட்சி அதிகாரமுள்ள புதிய ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து சட்டமுறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================



 

"மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க முடிவு : மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்!"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!


மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு
அனுமதி அளிக்க முடிவு :
மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்!
========================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
========================================


நாடாளுமன்ற மக்களவையில் 07.02.2022 அன்று கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி உறுப்பினர் பிரஜ்வால் ரேவன்ணா மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கொடுப்பது பற்றிக் கேட்ட வினாவுக்கு, சுற்றுச்சூழல் – வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, இந்திய அரசு அனுமதி கொடுப்பதற்கான முயற்சியில் இருக்கிறது என்று விடை அளித்துள்ளார்.

ஒன்றிய அரசின் நீராற்றல் துறையும், காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக அரசின் வரைவு செயலாக்க அறிக்கையை ஏற்றுக் கொண்ட பின், மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிப்பது குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை முடிவு செய்யும் என்று அஸ்வினி சௌபே கூறியுள்ளார்.

நடைமுறை உண்மை என்னவெனில், ஒன்றிய நீராற்றல் துறை ஏற்கெனவே மேக்கேதாட்டு அணைக்கான வரைவு செயலாக்க அறிக்கையைத் தன்னளவில் ஏற்றுக் கொண்டதுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்கச் செய்வதற்காக, அதற்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்பிறகு, காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைக்கு ஒப்புதல் தெரிவிப்பதை தனது பொருள் நிரலில் வலிந்து சேர்த்து வருகிறது. தமிழ்நாட்டு அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் – அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது.

இப்போது, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை அமைச்சகம் அனுமதி தருவதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் மட்டுமே பாக்கியாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மேக்கேதாட்டு அணை ஒப்புதல் பற்றி விவாதிக்க முடியாது, அதற்கு ஒப்புதல் தரக்கூடாது என தமிழ்நாடு தடுத்தால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தையே நடத்த மாட்டோம் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் சௌமித்ர குமார் ஹல்தர் கூறாமல் கூறுவதுபோல், கடந்த திசம்பரிலிருந்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மூன்று முறை தேதி குறித்துவிட்டு, காலவரம்பின்றி ஒத்தி வைத்து விட்டார்.

இப்போது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள சௌமித்ர குமார் ஹல்தர் இதற்கு முன் ஒன்றிய நீராற்றல் துறையின் தலைவராக இருந்தவர் என்பதும், இவர்தாம் மேக்கேதாட்டு ஒப்புதலுக்கு, அதன் வரைவு செயலாக்க அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தவர் என்பதும் நாடறிந்த உண்மை!

மேக்கேதாட்டு அணை கட்டினால் கர்நாடகத்தின் காட்டு உயிரினங்கள் வாழும் 2,925.50 எக்டேர் நிலமும், 1869.50 எக்டேர் காப்புக் காடுகளும், ஐந்து கிராமங்களும் நீரில் மூழ்கும் என்று கர்நாடக அரசு அளித்த வரைவு செயலாக்க அறிக்கை கூறுவதையும் அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே எடுத்துக் கூறுகிறார். ஆனாலும், அனுமதி அளிப்போம் என்று விடையிறுத்துள்ளார்.

மிகை நீர் மற்றும் குடிநீர் அணை என்று மேக்கேதாட்டு அணைக்குப் புனை பெயர் வைத்துள்ளார்கள். இந்த அணையின் கொள்ளளவு 67.15 ஆ.மி.க. (டி.எம்.சி.) காவிரியில் கர்நாடக, மற்றும் மேட்டூர் அணைகள் நிரம்பி 67.15 ஆ.மி.க. அளவுக்கு மிகை நீர் கடலில் கலந்த வரலாற்றைக் கடந்த 60 ஆண்டு காலத்தில் ஒரு தடவை கூட கண்டதில்லை. நடப்புக் காவிரித் தண்ணீர் ஆண்டில் வரலாறு காணாத பெருமழை பெய்து, காவிரியின் மிகை நீர் கடலில் கலந்தது. அதன் அளவு 42 ஆ.மி.க. மட்டுமே! இவ்வளவு பெருமழை பெய்த இந்த ஆண்டும் தமிழ்நாட்டிற்கு மாதாமாதம் திறந்துவிட வேண்டிய காவிரி நீரைக் கர்நாடக அரசு அந்தந்த மாதத்தில் திறந்து விடவில்லை.

எனவே, மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டுவிட்டால் ஒரு சொட்டுக் காவிரி நீர் கூடக் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வராது. தமிழ்நாட்டுக் குடிநீரையும் பாசன நீரையும் காவு கொள்ள இந்திய – கர்நாடக பா.ச.க. ஆட்சிகளின் சதித் திட்டத்தை முறியடிக்கத் தமிழ்நாடு அரசு என்ன எதிர்வினை ஆற்றப் போகிறது? த.நா. முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

காவிரி உரிமைச் சிக்கல் டெல்டா மாவட்டங்களின் உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக் குடிநீர் மற்றும் உணவு உற்பத்திக்கான சிக்கல் என்பதையும், தமிழினத்தின் உரிமைச் சிக்கல் என்பதையும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு, கிளர்ந்து எழுந்து போராட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

"பொங்கல் விழாவில் கரிகால் சோழனுக்குக் “கல்லணையில் நன்றி விழா” தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்!" -- கல்லணையில் கரிகாலன் சிலைக்கு மாலை அணிவித்து காவிரி உரிமை மீட்புக் குழு பொங்கல் படையல்!

 


பொங்கல் விழாவில் கரிகால் சோழனுக்குக்
“கல்லணையில் நன்றி விழா”
தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்!
============================================
கல்லணையில் கரிகாலன் சிலைக்கு
மாலை அணிவித்து காவிரி உரிமை மீட்புக் குழு பொங்கல் படையல்!
=========================================================

கல்லணையில் பேரரசன் கரிகாலன் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யும் நிகழ்வு மூன்றாம் ஆண்டாக இன்று தை 2, 2053 – 15.1.2022 சனிக்கிழமை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆர்ப்பரித்து வந்த காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையில் அணை கட்டி, பாசனத்திற்கு நீரைப் பயன்படுத்திய பெருவேந்தன் கரிகாலன். தைப் பொங்கல் நாள் அறுவடைத் திருவிழாவாக - கால்நடைத் திருவிழாவாக – தமிழர் மரபு விழாவாக பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்நாளில் கல்லணையில் உள்ள கரிகாலன் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் படைத்து, மக்களுக்குப் வெண்பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் வழங்குவதைக் காவிரி உரிமை மீட்புக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறது.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பளார் பெ.மணியரசன், பொருளாளர் த.மணிமொழியன், முன்னோடிச் செயல்பாட்டாளர்களான தமிழ்த்தேசியப் பேரியக்க தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், வெள்ளாம்பெரம்பூர் துரை.இரமேசு, அல்லூர் சாமி.கரிகாலன், இரா.தனசேகர், மு.பார்த்திபன், அரசகுடி விஜய், பூதராயநல்லூர் இராமலிங்கம், கல்லணை குமார், தஞ்சை இராமு, பூதலூர் தென்னவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

யானை மீதமர்ந்திருக்கும் கரிகாலனுக்கு மாலை அணிவித்துப் படையல் போட்ட பின், அடுத்து, பழங்காலக் கல்லணையை அடையாளங்காட்டி, அதே இடத்தில் புதிய அணை எழுப்பத் திட்டம் தந்த ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் அவர்கள் சிலைக்கும், காவிரித் தாய் சிலைக்கும், பேரரசன் இராசராசன் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்து பொங்கல் படையல் இடப்பட்டது.

தஞ்சை இராமு அடிசில் உணவக உரிமையாளர்களான கைலாசம் – செம்மலர் இணையர் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் அன்பளிப்பாக வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.மணியரசன் பின் வரும் வேண்டுகோள்களை முன்வைத்தார்.

தமிழர்கள் கரிகாற்சோழன் சிலை முன் உறுதி எடுக்க வேண்டும்:

1. “தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னப்பிக்கையையும் தன்மான உணர்வையும் தூக்கிப் பிடிப்பேன் “ என்று உறுதி எடுக்க வேண்டும்.

2. தமிழ்நாடு அரசு, கரிகால் பெருவளத்தானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழாவில் தை 2-ஆம் நாள் கல்லணையில் கரிகாலன் மணிமண்டபத்தில் “நன்றி விழா” நடத்த வேண்டும்.

3. கர்நாடகத்தில் மேக்கே தாட்டில் கர்நாடக அரசு அணைகட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்திய அரசின் நீர்வளத்துறை இவ்வணை கட்ட ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டது. அடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கிடும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டு விட்டால் மிகை வெள்ள நீர் என்று ஒரு சொட்டு கூட மேட்டூர் அணைக்கு வராது. அவ்வாறு வெள்ள நீரையும் தடுக்கும் சூழ்சியுடன்தான் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறது. கர்நாடக எதிர்கட்சியான காங்கிரசும் மேக்கே தாட்டு அணையை உடனே கட்டி முடிக்க வேண்டும் என்று போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தின் இம்முயற்சிகளைத் தடுக்கும் நோக்கத்தில், எதிர் நடவடிகைகளைத் தமிழ்நாடு அரசு உரியவாறு எடுக்கவில்லை.

உச்சநீதி மன்றத்தை அணுகி, மேற்கண்ட அணை முயற்சிக்கு இடைக்காலத் தடை கோருதல், தமிழ்நாட்டில் காவிரிக் காப்பு நாள் அறிவித்து ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட முயற்சிகளில் தமிழ்நாடு அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.

மேற்கண்டவாறு கூறினார்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

“மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” - 10 நாள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம்!


“மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” காவிரி உரிமை மீட்புக் குழு - 10 நாள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம்! தொடங்குமிடம் – பூம்புகார், நிறைவடையும் இடம் – மேட்டூர் அணை

இன்று (12.10.2019) காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. இதில், காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவா திரு. க. செகதீசன், மனித நேய சனநாயகக் கட்சி பொறுப்பாளர் திரு. அகமது கபீர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர் பழ. இராசேந்திரன், இந்திய யூனியன் முசுலீம் லீக் திரு. செய்னுலாபுதீன், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழக மாநிலத் துணைச் செயலாளர் திரு. சி. குணசேகரன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. ச. கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு முன்னணிச் செயல்வீரர்கள் வெள்ளாம் பெரம்பூர் திரு. து. இரமேசு, அல்லூர் திரு. கரிகாலன், திரு. தனசேகர், திரு. பார்த்திபன், திருவாரூர் திரு. சூனா செந்தில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் – 1 : “மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” 10 நாள் மக்கள் எழுச்சிப் பயணம்

தமிழ்நாட்டுக்கு வரும் காவிரியின் குறுக்கே கர்நாடகம் திட்டமிட்டுள்ள மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க தமிழ் மக்களிடம் எழுச்சியை உருவாக்கும் பொருட்டு - “மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” என்ற தலைப்பில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வரும் 2019 நவம்பர் 11ஆம் நாள் தொடங்கி 20ஆம் நாள் வரை – பத்து நாட்கள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம் நடத்துவதென காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானித்துள்ளது.

காவிரி கடலில் கலக்கும் நாகை மாவட்டம் – பூம்புகாரில் தொடங்கி, பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாகப் பயணித்து, சேலம் மாவட்டம் - மேட்டூர் அணையில் இப்பரப்புரைப் பயணம் நிறைவடைகிறது.

இப்பரப்புரைப் பயணத்தின்போது, வழியெங்கும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் தமிழ் மக்களும், உழவர் பெருமக்களும் காவிரி உரிமை மீட்புக் குழுவின் இந்த எழுச்சிப் பரப்புரைக்குப் பேராதரவு தந்து பங்கேற்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு அன்புரிமையுடன் அழைக்கிறது!

முதல்வருக்கு வேண்டுகோள் - "மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க தமிழ்நாடு அரசு மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும்!"

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்ததைப் போலவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் (16.02.2018) செயல்படுத்த மறுக்கிறது கர்நாடக அரசு. அதற்கான ஏற்பாடுதான் மேக்கேதாட்டு மிச்ச நீர் அணை!

மிச்ச நீர் என்பது கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி, அர்க்காவதி அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ள நீர் ஆகும். இந்த வெள்ள நீர் இப்போது நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து விடுகிறது. இதைத் தடுத்து முழுமையாகக் கர்நாடகம் புதிய பாசனத்திற்கும் குடிநீர், தொழிற்சாலைத் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டம்தான் மேக்கேதாட்டு மிச்ச நீர் திட்டம்!

கிருஷ்ணராஜ சாகர், கபினி, அர்க்காவதி அணைகளின் வெள்ள நீர் வந்து கலக்குமிடம் கர்நாடகத்தின் ராம் நகர் மாவட்டத்தின் கனகபுரம் வட்டத்தின் சங்கமம் என்ற இடமாகும். அதிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேக்கேதாட்டு (ஆடு தாண்டு காவிரி). இரு பக்கமும் 1,000 அடி உயர மலைகளுக்குக் கீழே காவிரி ஓடுகிறது. அந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டு எல்லை 3.9 கிலோ மீட்டர்தான்!

இந்த மேக்கேதாட்டு அணையின் திட்டமிட்ட தண்ணீர் கொள்ளளவு 67.16 ஆ.மி.க. (T.M.C.) இப்போது கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஏமாவதி, கபினி, ஏரங்கி, அர்க்காவதி அணைகளின் மொத்தக் கொள்ளளவு நீர் 114 ஆ.மி.க. (T.M.C.). ஆனால் இவற்றிலிருந்து வெளியேறும் மிச்ச நீரைத் தேக்கும் மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவோ 67.16 ஆ.மி.க.!

தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை தட்டுப்பாடில்லாமல், மாதாமாதம் திறந்துவிடத்தான் மேக்கேத் தாட்டு அணை கட்டுகிறோம் என்று கர்நாடகம் கூறுவது நூறு விழுக்காடுப் பொய்! கடந்த காலங்களில் இப்படிச் சொல்லித்தான் ஏமாவதி, ஏரங்கி, கபினி, அர்க்காவதி, சுவர்ணவதி அணைகளைக் கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டுத் தண்ணீரை அபகரித்துக் கொண்டது. மேக்கேத்தாட்டு அணை மட்டும் கட்டப்பட்டுவிட்டால், எப்படிப்பட்ட பெரிய வெள்ளமானாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது.

மிகை வெள்ளத்திலிருந்து தனது அணைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக – எப்பொழுதாவது வெளியேற்றும் நீர் கூட தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்குப் போய் விடக்கூடாது என்பதற்காகவே கட்டப்படும் தடுப்பு நீர்த்தேக்கம்தான் மேக்கேதாட்டு அணை!

உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பு 15 ஆண்டுகளுக்குள் மாற்றப்பட முடியாது. அத்தீர்ப்பின் பிரிவு XI பின்வருமாறு கூறுகிறது :

“கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீர் வரத்தைப் பாதிக்கும் வகையில் மேல் பாசன மாநிலம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ஆனால், தொடர்புடைய மாநிலங்கள், தங்களுக்குள் கலந்து பேசி, ஒத்த கருத்து அடிப்படையில் தண்ணீர் திறந்து விடும் முறைகளில் மாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு மாற்றிக் கொள்ள காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அனுமதி வேண்டும்”.

இதன் பொருள், புதிய நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ளலாம் என்பதல்ல! மாதவாரியாகத் திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை தங்களுக்குள் கலந்து பேசி ஒரு மாதத்தில் கூட்டியோ, குறைத்தோ திறந்துவிட்டு அடுத்த மாதங்களில் அதை ஈடுகட்டிச் சரி செய்து கொள்ளலாம் என்பதே இதன் பொருள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விதி XVIII பின்வருமாறு கூறுகிறது :
“தீர்ப்பாயத் தீர்ப்பிற்கு முரண்பாடு இல்லாமல், ஒரு மாநிலம் தனது எல்லைக்குள் தண்ணீர்ப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும் உரிமை உண்டு”.

இதன் பொருள் என்ன? உச்ச நீதிமன்றம் கர்நாடகத்திற்கு ஒதுக்கியுள்ள 284.75 ஆ.மி.க. தண்ணீரை – தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ள 177.25 ஆ.மி.க. தண்ணீரை, அந்தந்த மாநிலமும் தனது வசதிற்கேற்ப, தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இதன் பொருள். கர்நாடகம் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 284.75 ஆ.மி.க. தண்ணீரை எந்தெந்த பகுதிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இதன்படி முடிவு செய்து கொள்ளலாம்! ஆனால், கர்நாடகம் தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் 67.16 ஆ.மி.க. கொள்ளளவில் புதிய நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ளலாம் என்பது இதன் பொருள் அல்ல.

மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கோரி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கர்நாடக அரசு மேற்கண்ட XVIII ஆவது விதியைத் தவறாக மேற்கோள் காட்டி வாதம் செய்துள்ளது.

கர்நாடகத்திடமும், இந்திய அரசிடமும் இந்த சட்ட வாதங்களைப் பேசிப் பயனில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் கடந்தகாலப் பட்டறிவு! ஏமாவதி, ஏரங்கி, கபினி அணைகளைத் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்டக் கூடாது என்று தமிழ்நாடு அரசு 1968லிருந்து கர்நாடக அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிர்ப்புத் தெரிவித்துக் கடிதங்கள் எழுதியது; உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது.

ஆனால் கர்நாடகம் அந்த சட்ட விரோத அணைகளைக் கட்டி முடித்திட, இந்திய அரசு கொல்லைப் புற வழியாக அனுமதித்தது. மேக்கேதாட்டு அணையும் இது போல் கட்டப்படாமல் தடுக்க வேண்டுமானால், “இந்திய ஆட்சியாளர்க்குக் கடிதம் கொடுத்தேன், உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன்” என்று முதலமைச்சர் பட்டியல் அடுக்கினால் போதாது. ஏமாந்து விடுவோம்.

“இந்திய அரசே, மேக்கேதாட்டு அணை முயற்சியைத் தடுத்திடு; தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்க, கர்நாடகத்திற்கு துணை போகாதே!” என்று வெளிப்படையாக இந்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து அரசியல் அழுத்தம் தர வேண்டும். இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாட்டின் மக்கள் முழக்கமாக மாற்றிட குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரையுள்ள மக்கள் “காவிரி எழுச்சி நாள்” கடைபிடிக்கத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்.

கர்நாடகம் ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய சட்டவிரோத அணைகள் கட்டிய போது, அன்றைய ஆளுங்கட்சியான தி.மு.க. அன்றைய இந்திய ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசுடன் கூட்டணியில்தான் இருந்தது; தி.மு.க. ஆட்சி, இந்த அணைகள் கட்ட எதிர்ப்புத் தெரிவித்தது என்றாலும், அணை கட்ட நடுவண் அரசு அனுமதித்தது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும். பா.ச.க.வுடன் அ.இ.அ.தி.மு.க. வைத்திருக்கும் கூட்டணியின் வரம்பை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேக்கேத்தாட்டு அணையைத் தடுத்து, தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு செயல்பட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 2 : 21 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்க!

காவிரிப்படுகை மாவட்டங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பல்வேறு துன்பங்களுக்கிடையே நம் உழவர்கள் குறுவை சாகுபடி செய்திருக்கிறார்கள். அறுவடைக்குப் பின் அந்த நெல்லை விற்பதற்கு வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 விழுக்காட்டிற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் வாங்க மறுக்கிறார்கள். இதனால் அங்கங்கே நெல் கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. நெல்லுக்கு சேதாரம் ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் 21 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்திருக்கிறது. இப்பொழுதும் அதுபோல் 21 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்யுமாறு தமிழ்நாடு அரசு – நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்றும், கொள்முதல் நிலையம் திறக்கப்படாத ஊர்களில் உடனடியாகத் திறக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 3 : பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பலன்கள் கிடைக்காமல் தவிப்பு

கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான வேளாண் பயிர்க் காப்புத் திட்டத்தில், காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் பல்வேறு கிராமங்களில் உழவர்கள் பெருந்தொல்லைக்கு ஆளாகி உள்ளார்கள். பல கிராமங்கள் விடுபட்டுப் போயுள்ளன. ஒரே கிராமத்தில் ஒரு பகுதி விவசாயிகள் விடுபட்டுள்ளனர்.
ஒரே கிராமத்தில் இழப்பீட்டுத் தொகை நிர்ணயிப்பதிலும் வேறுபாடு கடைபிடிக்கப்பட்டு சிக்கல்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு அரசு, உடனடியாக இதில் தலையிட்டு பயிர்க் காப்பீட்டுத் திட்ட நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் செய்து, எல்லா கிராமங்களுக்கும், எல்லா உழவர்களுக்கும் பயிர்க் காப்பீட்டு இழப்பீடு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழுக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 4 : உழவர்களுக்கு வட்டியில்லா வேளாண் கடன்

வேளாண் விளை பொருட்களுக்கு உரிய இலாப விலை கொடுக்காமல், அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலையைத்தான் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் வழங்கியிருக்கிறது. இதனால், உழவர்கள் தொடர்ந்து கடனாளி ஆவதும், உயிரை மாய்த்துக் கொள்வதும் நடந்து வருகிறது.

இப்பின்னணியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு வங்கிகள் உழவர்களுக்கு வட்டியில்லா வேளாண் கடன் கொடுக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு அரசு இந்திய அரசை வலியுறுத்தி, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா வேளாண் கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 90251 62216, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger