தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » » கர்நாடக நீர்ப்பாசன நிறுவன திட்டங்களுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு!

கர்நாடக நீர்ப்பாசன நிறுவன திட்டங்களுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு!





கர்நாடக அரசின் காவிரி நீர்ப் பாசன நிறுவனத்தின் திட்டங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அர்காவதி மற்றும் ஹேமாவதி நதிகளில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்கு அவர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை எழுதிய கடிதத்தின் விவரம்:
   கர்நாடக மாநில அரசின் நிறுவனமான ‘‘காவிரி நீர்ப் பாசன நிறுவனம்’’,  அர்காவதி நதியை சீரமைத்து புதுப்பொலிவு ஏற்படுத்தவும், ஹேமாவதி நதி கால்வாய்களை நவீனப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
  அதில், ஹேமாவதி நதியின் இடது கரை கால்வாய், வலது கரை கால்வாய் மற்றும் வலது கரை உயர் மட்ட கால்வாய்களை நவீனப் படுத்துவது பற்றி கூறப்பட்டுள்ளது.
   தேசிய நீர் பாதுகாப்பு திட்டம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த திட்டங்கள் நடப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்த நீர்ப்பாசன திட்டத்தின் உதவியை பெற உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
    அர்காவதியை சீரமைக்கும் திட்டமும், ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்தும் திட்டமும் கர்நாடக அரசின் புதிய திட்டங்களாகும். இந்த திட்டங்களின் செயல்பரப்பு நோக்கம் என்ன என்று தெரியவில்லை.
    மேலும், ஹேமாவதி கால்வாய்களை நவீனப் படுத்துவதன் மூலம் கர்நாடகா அரசு எடுக்கும் தண்ணீர் அளவு கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் காவிரி நதிநீர் ஆணையம் இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை விட கூடுதல் ஆயக்கட்டு பணிகளை கர்நாடகம் விரிவுபடுத்த முடியும்.
   கர்நாடக அரசின் இந்த புதிய திட்டங்கள் காரணமாக காவிரியில் இயற்கையாக வரும் தண்ணீர் அளவில் பாதிப்பு ஏற்படும். இது தமிழக நீர்ப்பாசனத் திட்டங்களை மிகக் கடுமையாக பாதிக்கும். எனவே இது காவிரி நதி நீர் ஆணையத்தின் இறுதி உத்தரவுக்கு எதிரானது.
   காவிரி இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதை கண்காணிக்க தற்காலிக குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் காவிரி இறுதித் தீர்ப்பை மீறும் வகையில் கர்நாடக மாநில அரசு நடந்து கொள்வது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
   கர்நாடக அரசு காவிரியில் புதிய திட்டங்கள் செயல் படுத்துவதை அனுமதிக்க கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கர்நாடகா எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்று தடுக்க வேண்டும்.
   மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய நீர் வள அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். அதோடு காவிரி இறுதி உத்தரவை திறமையாக அமல்படுத்து வதை உறுதி செய்ய காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தாங்கள் உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்.
 காவிரி நீர் மேலாண்மை வாரியம்: காவிரி இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு அடிக்கடி மீறாத வகையில் இருப்பதை உறுதி செய்வதற்கு, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை கர்நாடகா அரசு காவிரி படுகையில் எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க கூடாது. இதில் நீங்கள் தலையிட்டு கர்நாடக அரசுக்கு அறிவுரை கூற வேண்டும்.
   மேலும், அர்காவதி நதி சீரமைப்பு திட்டத்தையும், ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்தும் திட்டங்களையும் நிறுத்தி வைக்குமாறு காவிரி நீர்ப் பாசன நிறுவனத்துக்கு அறிவுரை வழங்கும்படி கர்நாடக மாநில அரசை கேட்டுக் கொள்ளலாம்.
  எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையத்தையும் விரைவில் அமைக்க கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காவிரியில் அணைக்க கட்ட, கர்நாடக அரசை, மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் நீர் மின்நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதை நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக அரசு காவிரியில் 3 அணைகளைக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டால், அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியவாறு, இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
அதனால் அணைகள் கட்டுவதற்கு கர்நாடகம் ஆலோசி்த்தால், மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் இருந்த காலத்திலேயே, மேகதாது திட்டத்தை தேவகௌடா கர்நாடக முதல்வராக இருந்தபோது, ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவித்தார்.
அப்போதே எதிர்த்துள்ளேன். இப்போதும் அதே நிலையில்தான் உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.



Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger