காவிரியில் புதிய திட்டங்களை செயல்படுத்த கர்நாடக அரசை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் புதன்கிழமை தொடங்கியதும் கேள்வி நேரமின்றி முக்கிய பிரச்னைகளை உறுப்பினர்கள் எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது காவிரி நதி விவகாரம் குறித்து மக்களவை அதிமுக தலைவர் எம். தம்பிதுரை பேசியது:
"கர்நாடகத்தின் மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே நீர்மின் திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தவுள்ளது. இது குறித்து காவேரி நீராவாரி நிகமா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில் அர்க்காவதி நீர்த்தேக்கத்தைப் புதுப்பித்துப் புனரமைக்கவும் ஹேமாவதி கால்வாயை நவீனப்படுத்தவும் தகுதிவாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்னள. இது தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்வரை காவிரி டெல்டா பகுதிகளில் எவ்வித திட்டங்களையும் செயல்படுத்த கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது' என்று தம்பிதுரை வலியுறுத்தினார்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தை பாஜக, இடதுசாரி கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தம்பிதுரையின் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்து, பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
அதைப் பார்த்ததும் அதிமுக உறுப்பினர்கள் பி. குமார், கே. ஆனந்தன், ஓ.எஸ். மணியன், சி. ராஜேந்திரன், சி. சிவசாமி, பி. வேணுகோபால், கே. சுகுமார், மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பி. லிங்கம் மையப் பகுதியின் ஒரு புறத்திலும் திமுக உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், தாமரைக்கண்ணன், ஆதிசங்கர், ஹெலன் டேவிட்சன் ஆகியோர் மறுபுறத்திலும் "காவிரியில் புதிய திட்டம் தொடங்க கர்நாடகத்தை அனுமதிக்கக் கூடாது' என்று குரல் கொடுத்தனர்.
அப்போது பேசிய டி.ஆர். பாலு, "காவிரியில் புதிய திட்டம் தொடங்கப்படும் அறிவிப்பை கர்நாடக மாநில சட்ட அமைச்சர்தான் வெளியிட்டுள்ளார்.
இது, மாநிலங்களிடையே ஓடும் நதி நீரை கீழ் பகுதியில் உள்ள மாநிலம் பெற மறுக்கும் செயல்' என்றார்.
அப்போது குறுக்கிட்ட மீரா குமார், "கச்சத்தீவு பிரச்னையை எழுப்ப மட்டுமே உங்களுக்கு அனுமதி அளித்தேன்' என்றார். அதை ஏற்க மறுத்த பாலு, தொடர்ந்து காவிரி விவகாரத்தை எழுப்பினார்.
அவருக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜே.எம். ஹாரூண், பி. விஸ்வநாதன், சித்தன் ஆகியோர் குரல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடக மாநிலங்களைச் உறுப்பினர்கள் பரஸ்பரம் "எங்கள் மாநில நலன்களைக் பாதுகாக்க வேண்டும்' என்று மையப் பகுதியில் குரல் எழுப்பினர். இந்த அமளியால் மக்களவை அலுவல் சுமார் 15 நிமிஷங்கள் பாதிக்கப்பட்டன.
0 கருத்துகள்:
Post a Comment