தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு!


Home » , , , » காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
புதுதில்லியில் நேற்று (05.07.2018) கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு, சூலை மாதத்திற்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய 31.25 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரைத் திறந்து விட ஏற்பாடு எதுவும் செய்யாமல், புள்ளி விவரங்கள் தொடர்பாக நான்கு மாநிலங்களும் படிவம் நிரப்பச் சொல்லிவிட்டுக் கலைந்துள்ளது. இது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது!

கடந்த 02.07.2018 அன்று புதுதில்லியில் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் சூலை மாதத்திற்குரிய 31.25 ஆ.மி.க. தண்ணீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்று அறிவித்ததே, அது என்னாயிற்று? வழக்கம்போல் இதுவும் ஏட்டுச் சுரைக்காய் தானா?

கர்நாடகத்தில் வழக்கத்தைவிட அதிகமாகப் பருவமழை பெய்து, அம்மாநில அணைகளில் சராசரியாக 90 விழுக்காட்டிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில்கூட, சூலை மாதத்திற்குரிய தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறக்காவிட்டால், காவிரி ஆணையம் – ஒழுங்காற்றுக் குழு என்பவையெல்லாம் பொம்மை அமைப்புகளா என்ற கேள்வி எழுகிறது.

நேற்று நடந்த ஒழுங்காற்றுக் குழுவில் நீர்த் தேக்கங்களில் தண்ணீர் ஆவியாகப் போவது பற்றியும், நீர் இருப்பு, வருகின்ற தண்ணீர், மழைப்பொழிவு போன்றவை பற்றியும் புள்ளி விவரங்களை நான்கு மாநிலங்களும் நிரப்பித் தருவதற்கான படிவங்களை கொடுத்ததுதான் அக்கூட்டத்தின் ஒரே பணியாகத் தெரிகிறது.

இப்படிவங்களை சூலை 16க்குள் நான்கு மாநிலங்களும் ஒழுங்காற்றுக் குழுவுக்குத் தர வேண்டும் என்றும், அதன் அடுத்த கூட்டம் சூலை 19இல் நடக்கும் என்றும் அதன் தலைவர் நவீன் குமார் தெரிவித்துள்ளார். அவரிடம் செய்தியாளர் ஒருவர் சூலை மாதத்திற்குரிய தண்ணீர் திறந்து விடுவது பற்றி என்ன ஆணை பிறப்பித்துள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, “பருவமழை நன்கு பெய்து கொண்டிருக்கிறது” என்று மட்டும் விடையாகக் கூறினார்.

சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட்டால் இவ்வாண்டு குறுவை சாகுபடி செய்ய முடியும்!

காவிரியை மீட்டு விட்டதாக “வெற்றி” விழா கொண்டாடி வரும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த ஆணைப்படி கூடக் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற அக்கறை காட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு மற்றும் அவ்வப்போது வெளியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றைச் செயல்படுத்த மறுத்ததுபோல்தான் மூன்று நீதிபதிகள் ஆயம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பையும், அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் 02.07.2018 அன்று வெளியிட்ட ஆணையையும் செயல்படுத்த இந்திய அரசு மறுக்கிறதா என்ற ஐயம் வலுவாக எழுகிறது.

நேற்று (06.07.2018) கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டுவோம் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன், கன்னட அமைப்புகள் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட்டால், முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்துள்ளன. இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு இந்திய அரசு கொடுக்கும் துணிச்சலில்தான் உருவாகின்றன.

தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி உடனடியாக சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
Share this video :

0 கருத்துகள்:

Post a Comment

 
வடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template
காப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved
மூல வடிவமைப்பு Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger